www.gamblinginsider.ca

06 November 2015

ஹா ஹா..காதல்.! - Mano Red



அவனுக்கு வயது
இருபத்தி ஆறு இருக்கும்.
இருந்து என்ன செய்ய
காதல்தான் இன்னும்
கதவு தட்டவில்லை.

ஜயதேவர் போல
ரசனைகளில் ஊறி
ரசம் பிழியும் வரிகளில்
ஆயிரம் கவிதை
அடுக்கடுக்காய் அள்ளி எறிவான்
இருந்தும் காதலி இல்லை.

எதிர்வரும் பெண்களை எல்லாம்
ஏற்றுக் கொள்வான் 
காவியக் காதலிகளாக,
கண்ணில்படும் குமரிகளை எல்லாம்
கற்பனையில் காதலிப்பான்
தேவையில்லாத தேவதைகளாக..

குளிக்கப் போனால் கவிதை
சாமி கும்பிட போனால் கவிதை
பல்லுத் தேய்த்தால் கவிதை
பாட்டி அழைத்தாலும் கவிதை
கவிதை கவிதை என
கழுதையாய் திரிந்தான்.

அவன் அப்பன் செய்த புண்ணியமல்ல.
எவன் செய்த புண்ணியமோ
அவள் அவனிடம் சிக்கினாள்
கவிதையை ரசிப்பவளாம்.
இவனும் குறைந்தவனல்ல
இடி மழை போல
கவிதை உரைத்தான்
காதலும் வேறு வழியின்றி மலர்ந்தது.

நன்றாகவே கடந்தது நாட்கள்
கவிதைகளும் கரைபுரண்டு ஓடின.
ஆறுதல் காதலி 
மாறுதலாய், கவிதை வேண்டாம் 
கானம் வேண்டுமென்றாள்.
மானே தேனே பொன்மானே சேர்த்து
தலை சொறியும் கானம் இவன் பாட
காதலியும் தெறித்து ஓட
இனிதே காதல் முறிந்தது
இது தேவையா.?