www.gamblinginsider.ca

03 September 2016

எழவுக்குப் போய்ட்டு வரேன்! - Mano Red


ஊரின் எல்லை தாண்டி
ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த
ஒப்பாரிச் சத்தமும்
முற்றத்துக் கூட்டத்தில் கேட்ட
முனுமுனுப்புச் சத்தங்களும்
சாவு வீட்டை
சலசலப்பாக்கி இருந்தது.
அழுதழுது ஓய்ந்தவர்கள் 
காபிக்களிலும் சோடாக்களிலும்
மூழ்கி இருக்க,
கொல்லி தயார் செய்யவும்
கோடித்துணி கிழிக்கவுமென
சாதி வாரியாக 
வேலைகள் ஒருபுறம் 
நடந்துகொண்டிருந்தன.
எல்லாமே முடிந்த
இறுதி ஊர்வலத்திலும்
ஆளாளுக்கு ஒரு கதை பேசி
மாட விளக்கொன்றை 
அணைத்துவிட்டு
வீடு திரும்பும்போது
”எங்க போய்ட்டு வர்றீங்க” என்று கேட்ட
எதிர்ப்பட்டவரிடம்
“எழவுக்குப் போய்ட்டு வரேன்” என்று 
வழக்கம்போல சொல்லிவிட்டு
கால் தேய்த்துக் கழுவியதில் 
கரைந்து ஓடின 
மூன்று தலைமுறை கண்ட
கந்தசாமிப் பாட்டனின் நினைவுகள்!