www.gamblinginsider.ca

30 January 2015

இப்படியும் கவிதை எழுதலாம்…!!! - Mano Red

எதை வேண்டுமானாலும்
எப்படியும் யோசிக்கலாம்,
கிடைக்கின்ற வார்த்தைகள்
மறுபடியும் கிடைக்காது,
கிடைக்கும் போதே
கவர்ந்து கைது செய்து
கவிதையாக்க வேண்டும்…!

பார்வைகள் பலவிதம்
பார்க்கப்படும் விதத்தில் தான்
பக்குவம் இருக்கிறது,
ஒன்றை இன்னொன்றாக
வேறுவிதத்தில் பாருங்கள்,
கோமாளியாக தெரிந்தாலும்
கோணம் வேறாக இருக்கும்…!!

அக்கம் பக்கங்களை
காதை தீட்டிக் கேளுங்கள்,
அதிகம் பேசாமல்
மனசுக்குள் பேசுங்கள்,
நிச்சயம் உள்ளுக்குள் எதுவோ
கவிதை தீட்டிக் கொண்டிருக்கும்..!!

கவிதையைத் தேட
நேர்வழியும் வேண்டாம்,
குறுக்கு வழியும் வேண்டாம்,
வழிதெரியாமல்
சுற்றிச் சுற்றி வாருங்கள்
கவிதைக்கான நிறைய வழிகள்
வலியிலிருந்து தெரியும்…!!
,
ஒரு புள்ளியை சுற்றி எழுதுவதை விட
ஒரு புள்ளியைப் பற்றி
கவிதை எழுதப் பழக வேண்டும்,
புதைந்து தான் கிடக்கிறது
அங்கங்கே தோண்டுங்கள்,
அழுக்குகள் மட்டுமல்ல
அதிசயங்களும் தோன்றும்…!!

சொந்தமானவர்களுக்கு
சொந்த வரிகள்
அழகாகத்தான் தெரியும்,
அழகைப் பார்க்காமல்
படிக்கும் யாவரையும்
அழாமல் பார்த்துக் கொள்வதில் தான்
கவிஞன் காலூன்றி நிற்கிறான்..!!

மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!