www.gamblinginsider.ca

24 November 2016

காடழிக்கும் காலன்! - Mano Red



மைக்ரோ சிப்புகள் உலகத்தில்
மரப் பட்டைகளைக் காணாத
மரங்கொத்தி
அத்தனை பெரிய அலகை
உடைத்தெறியத் துணிகிறது!
.
இலந்தையும் இலுப்பையும்
கடுக்காயும் வேம்பும்
கம்ப்யூட்டர் வந்த பிறகு
காய்ப்பதே இல்லையென
கிளி ஒன்று சொல்கிறது.
.
வெண்மை நிறப் பூக்களும்
நீண்ட காம்புகளில் காய்களுடன்
உயர வளர்ந்திருக்கும்
பொந்தன்புளி மரம்தான்
அந்தக் காட்டின் மொத்த அழகன்.
அவன் சொல்கிறான்
“மனிதனின் மூதாதையர்
இங்கிருக்கும் மரப் பொந்துகளில்
வாழ்ந்தவர்களாம்!”
.
“காடு இல்லாத ஊரில்
காசு இருக்கும்
மாசு இருக்கும்
உயிர் இருக்காது”
என்று சொன்ன அரசமரம்
ஆற்றாமையால் அழுதுவிட்டது.
.
“இயற்கையை ஊனமாக்கி விட்டு
செயற்கையை வளர்க்க வேண்டுமா?”
காலில் மிதித்துவிட்டு
தும்பிக்கையை அசைத்தவாறு
முறைத்தபடி
தாயிடம் ஓடுகிறது குட்டியானை!
.
“காடில்லையேல் வீடில்லை
என்பதை மறந்து
கொஞ்சம் கொஞ்சமாக அழித்தும்
அழிந்தும் வருகிறீர்கள்” என்று
என்னுடன் பேசிக்கொண்டு வந்த
சிங்கத்திடம் நான் சொன்னேன்
“தன்னுயிர் போல
மண்ணுயிரை நினைக்காத
காடழிக்கும் காலன் நாங்கள்!”