www.gamblinginsider.ca

06 September 2017

ஞாயிறு உளறல் 5


இதுவும் படிப்பு சம்பந்தப்பட்ட கதை. பள்ளிக்கூடத்தில் மற்ற பாடங்களில் நன்றாகப் படித்தாலும் கணக்குக்கும் எனக்கும் இடையில் ரயில் பாதை போடக்கூடிய அளவுக்கு தூரம். 8வது வகுப்பு வரை சொந்த ஊரில் படித்ததால் அப்படி இப்படி என மார்க் போட்டு கணக்கில் தேற்றிவிட்டார்கள்.
9, 10ம் வகுப்புக்கு வேறு மாவட்டம், வேறு ஊர், வேறு அரசாங்க பள்ளி. எப்படியாவது 10வது பாஸ் செய்துவிட்டால் அதன்பிறகு கணக்கில்லாத வேறு படிப்பைப் படிக்கலாம் என பள்ளிக்கும், டியூசனுக்கும் ஆப்சண்ட் ஆகாமல் 10வது முடித்தேன்.
+1, +2க்கு இன்னொரு மாவட்டம், இன்னொரு ஊர், இன்னொரு அரசாங்க பள்ளி. அட்மிஷனுக்குப் போகும்முன்பே சீன, ஜப்பான் மொழியில் படித்தாலும் பரவாயில்லை அறிவியல், கணிதம் இல்லாத பிரிவில் சேர்ந்துவிட வேண்டும் என முடிவு செய்தேன். அருகில் அட்மிஷனுக்காக நின்ற அதிகம்பேர் இன்ஜினியரிங் படிப்பதற்காக கணிதப் பிரிவில் நின்றுகொண்டிருந்தார்கள். கணக்கு படிக்கப்போகும் அவர்கள் மீது ஏளனமான பொறாமை இருந்த அளவுக்குப் பயமும் இருந்தது. அப்போது தெரியாது நானும் அவர்களுடன் கணக்கு படிக்கப் போகிறேன் என்று. நாம் ஒன்று நினைத்தால் நம் தெய்வம் வெறொன்று நினைக்கிறது.
+1ல் முதல் நாள் முதல் பாடவேளை அதுதான். 'அது' என்றால் பொல்லாத அந்தப் பாடம்தான். கொஞ்சம் கூட மனம் ஒத்துப் போகவில்லை. சரஸ்வதி போல் அழகான டீச்சர் என்பதற்கெல்லாம் 'கணித முதல நம்பரெல்லாம் அறிய வைத்தாய் தேவி'ன்னு பாடவும் வரவில்லை. அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது. 'எல்லாம் முடிந்தது' என்றால் விபரீதமான முடிவுக்குப் போகவில்லை.
எதிலும் விருப்பமில்லாமல் இருந்தாலும் தவறாமல் பள்ளிக்கூடம் சென்றது, விடுதி மாணவன் என்பன போன்ற காரணங்களுக்காக +1ல் பாஸ் செய்தார்கள். +2ல் பொதுத் தேர்வு என்பதால் என் கல்விமுறையை நானே வடிவமைத்துக் கொண்டேன். அதன்விளைவு தேர்வு முடிவுகள் வந்தபோது கணிதம், இயற்பியல் தவிர மற்ற எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி.
10வது மார்க் வைத்து டிப்ளோமா முடித்து, அதன்பிறகு அதே கணிதப் பாடங்களில் பல அரியர்கள் வைத்து ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்து இறுதியில் இன்ஜினியரிங் முடித்தது தனிக்கதை. இன்ஜினியரிங் சம்பந்தமில்லாத வேறொரு வேலையில் இருப்பது இன்னொரு கதை.
விரும்பிய பாடத்தைப் படிக்க முடியாததில் எவ்வளவு வருத்தமும், ஏமாற்றமும் இருக்குமோ அதைப்போல் ஏமாற்றமும், வருத்தமும் விரும்பாத பாடத்தைப் படிப்பதிலும் இருக்கிறது. 'டாக்டர் சீட் கிடைக்கவில்லை என்றால் வேறு எதையாவது படிக்கலாமே' என்று சொல்லும் அறிவுக் கூமுட்டைகளுக்கு அந்த ஏமாற்றமும் வலியும் புரியாது. கண்ட கனவைச் சிதைப்பதையும் உதாசீனப்படுத்துவதையும் விட பெரிய வலி என்ன இருந்துவிட முடியும்.
டாக்டர். M Chinnappan தன் பதிவில் சொல்லியிருந்தது போல, 'இயலாமை எப்போதும் நம்மை நம் தகுதிக்கேற்ப பழக்கப்படுத்திவிடும்.'
தங்கை டாக்டர்.அனிதா எல்லாருக்காகவும் போராடியிருக்கிறார், போராட வைக்கிறார். சுயநலமாகக் கூட போராடத் தெரியாத நான் இயலாமைக்கு ஏற்பப் பழகிக்கொண்டேன் அவ்வளவுதான்.😷
Mano Red / 3.9.17