எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் கருப்பும் சிவப்பும் பழுப்பும் கலந்த கால்தடங்கள். பார்வையை ஈனும் கருவிழிகள் இரண்டும் நெளிந்து வளைந்தோடி பார்க்குமிடமெல்லாம் துரத்துகின்றன. உடல் முழுக்க வெள்ளை ரத்தங்கள் உயிர் முழுக்க குறுகுறுப்புகள் பெட்டிகளிலும் அலமாரிகளிலும் கால் சுருக்கி கை மடக்கி வசிக்கப் பழகுகிறேன் அசுத்தங்கள் அனைத்தையும் அள்ளி அப்பியபடி சுவரில் ஏறுகிறேன் ஆக்சிஜனை வடிகட்டி பிரத்யேகக் குழாயின்வழி மூக்கிலேற்றினாலும் ஆறு நரம்புக் கால்களுடன் ஏதோவொன்று நாசி துளைத்து மூளை அருகில் அமர்ந்துகொள்கிறது. பக்கத்து வீட்டுப் பூச்சிமருந்தின் வேதியியல் நெடி நெஞ்சு துளைக்கிறது. சோற்றுப் பருக்கையை பிசையும் விரல்களில் கண்ணாடி கலந்த இறக்கை முளைத்துப் படபடக்கிறது. இப்படி ஒவ்வொரு கணமும் தலையை வெட்டி எடுத்து இரண்டு வாரங்கள் முண்டமாய் வாழ்வதுபோல தீர்க்கதரிசனம் பெறுகிறேன்.
கொலைகாரக் கண்களை மெல்லிறகால் பொத்தி உபன்யாச நூல்களைப் பார்க்கச் செய்தோம் காற்றில் கலைந்த பக்கங்கள் கிழியத் தொடங்கியதால் கண்களைக் கருங்கல்லால் குத்தி ரத்தத்தால் கழுவினோம். பாவம் செய்த கைகளில் சிலுவை மாலை கொடுத்து ஸ்தோத்திரத்துடன் உருட்டச் சொன்னோம் வெப்பம் தாங்காத மணிகள் கழன்று ஓடுவதைப் பார்த்ததால் அவ் விரல்களை நறுக்கி தீர்த்தத்தில் புனிதமாக்கினோம். வசவு பாடிய வாயை சூஃபி இசையால் நிரப்பினோம் ஏக இறைவனின் அழுகுரல் எதிரொலியாகத் திரும்பியதால் நாக்கைப் பிடுங்கி எறிந்துவிட்டு கள்ளிச் செடியின் விதை தூவி ஊசி நூலால் வாயைத் தைத்து அவனை அருள் பெறச் செய்தோம். அழுக்குகள் அனைத்தும் ஒருசேர நீங்கி ஒளி பொருந்திய ஆன்மாவாக அவனை மாற்றிவிட்டோமென்ற களிகூர் தருணத்தில் வெளியேறி வன்மத்துடன் வேகமாகத் துடித்த அவனது இதயத்தை நான்காகப் பிரித்து ஆளுக்கொரு சட்டைப்பையில் போட்டு அமைதியாக வந்துவிட்டோம்.
வானம் தன் குங்குமம் அழித்து கரு மையைச் சூடிக்கொள்ள ஆரம்பித்த நேரம். மெழுகுவர்த்திச் சுடர் சூழ விருந்துண்டு கழித்த நாட்களை எண்ணியபடி பூங்காவின் கல் மேசையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தேன். இன்னும் அவள் வந்திருக்கவில்லை காதல் தவ வாழ்வில் காத்திருப்பது ஒரு புள்ளிதானே! என்ன சொல்வாளோ தெரியவில்லை கடந்த காதல் நாட்களின் கடுமை அவள் நெஞ்சில் புரையோடிருக்கும் இதோ அவள் வருகிறாள் வெப்பமான தென்றல் வீசுகிறது இரவின் குளுமையில் கந்தகம் தகிக்கிறது நட்சத்திரங்கள் சுடுகின்றன பச்சைப் புற்கள் எரிந்து எரிந்து அணைகின்றன தீ கக்கும் பாறைப் பற்களில் சொற்களை அணிந்து அக்னிக் குழம்பென நெருங்கி வருகிறாள் எதை ஊற்றி அணைப்பதெனத் தெரியாமல் கட்டி அணைக்க முடிவு செய்து அவளை நெருங்கும்வேளை கசப்பின் சுவையை சொற்களால் செய்த வாள் கொண்டு காதுகளுக்கு உணர்த்தி காதல் முறிவுக்கு ஆதாரமாக பூமிப் பந்தை வலமிருந்து இடமாகச் சுற்றிவிட்டாள். எதுவும் புரியாத பூமியும் நானும் ஒருசேரச் சுழன்று நின்றபோது அவளைத் தவிர எல்லாம் அருகில் இருந்தன.