www.gamblinginsider.ca

25 October 2016

கதவுகளுக்கு இடையில்... - Mano Red


பண்டிகை நாட்களிலெல்லாம்
கதவுகளைக் கழுவி
பூவுடன் பொட்டுவைப்பது
அம்மாவுக்குப் பிடிக்கும்!

அப்பாவுக்கும் கதவுக்கும்
அப்படியொரு பந்தம்!
அவர் திறக்கும் அழகே
அவர் வரவைச் சொல்லிவிடும்!

மச்சு வீட்டின் நிலைப்படி
சிறிதாகவே இருக்கும்.
மன்னர் வந்தாலும்
குனிந்துதான் நுழைய வேண்டும்
இருந்தாலும்
கூன் விழுந்த பாட்டிக்கு
அந்தக் கவலையில்லை!

வேகமாக வளர வேண்டுமென
வருகையிலும் போகையிலும்
கதவைப் பிடித்து தொங்குவது
அண்ணனின் வழக்கம்!

கதவில் ஏறி ஆடுவது மட்டுமே
என் விளையாட்டு.
துருப்பிடித்த காரணத்தால் வரும்
‘க்ரீச்... க்ரீச்...’ சத்தம் கேட்டு
ஓடிவரும் தாத்தாவுக்கு
என்னைத் துரத்துவதுதான் பொழுதுபோக்கு!

தாழ்ப்பாளைத் திருகிக்கொண்டே இருக்கும்
தங்கையால்தான் வீட்டில்
அடிக்கடி பிரச்னை வருகிறது
என்ற நம்பிக்கையும்
கதவுகளுக்கிடையே இருந்தது!

இப்போதும் கதவு திறக்கிற சத்தம்
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
‘இந்த நேரத்தில்
எந்தக் கதவு திறக்கிறது’ என்று
நானும் விழித்துவிடுகிறேன்!