எழுப்பு ஒலியின்
தொடக்க ஒலியே
நினைவு குத்தி செல்கிறது,
விழிக்கும் நேரம்
தாண்டியும்
விடியல் வரவில்லை..!!
ஒருவித மதம் பிடித்த
மனிதனாய்,
தவறிய வாய்ப்பின்
மறு அழைப்பிற்கு
காத்திருக்கும் போது
நிலநடுக்கமாய் சில சிதறல்கள்..!!
தானே இயங்கும்
இசைக்கோப்பிலிருந்து
சற்று முன்
காற்று பரப்பிய பாடலை,
மயிரிழையில்
தவற விட்டபின் புரிந்தது
இது தான் இப்போது கடந்தது..!!
சிற்பக் குறியீடுகளை
குறுக்கே விசாரிக்குமளவு
திறனில்லை என்றாலும்,
அற்பமில்லா
சிற்பமாய் நிற்க
பொறுமை பொதிந்திருக்கிறது..!!
மனக்காட்சியின்
அகநிலை அறியாமல்
நிதம் நிதம்
வெள்ளோட்டம் விடுவதற்கு
நிகழ்படமல்ல வாழ்வு..!!
உதிரம் சிந்தினாலும்,
சோர்ந்து ஓய்ந்தாலும்,
உதிர்ந்து விடாத
உதிரா இலையின்
நுனிக்காம்பு நம்பிக்கையில்
இன்னும் தொங்குகிறது
அண்மை வாழ்க்கை...!!