www.gamblinginsider.ca

23 December 2016

இது Facebook தவ வாழ்வு! - Mano Red


Facebookல் அன்றைய 
Search ராசிப்படி
People you may knowவில் 
Add Friend வரிசையில் வந்தாள்.
Requestகளை ரசித்து ஏற்பாள்போலும்
Cancel இன்றி விண்ணப்பத்தை
Accept செய்து
ஆதரவுக் கரம் நீட்டினாள்.
அன்றிலிருந்து
Timelineல் 3Gயுடன்
தவ வாழ்வுதான்!
What's on your mindல்
வாய்க்கு வந்ததைப் பதியும்
அவளது பதிவுகளுக்கு
நான்குமுறை Love buttonஐயும்
ஓரிருமுறை Wow buttonஐயும் தட்டுவதுண்டு.
அவ்வப்போது சில photoக்களை
Uploadடுவாள்.
Liveல் ஏற்றும் மொக்கை Videoக்களுக்கு
Like கேட்பாள்.
Commentகளுக்கு தவறாமல்
கண்ணடிப்பாள்.
Messengerல் என்னுடைய கவிதைக்கு
Awesome சொல்லும் நாட்களில்
ஆவேசமாக நானும் அதிகம் எழுதுவதுண்டு.
என் Statusஐ பதியாத நாட்களில்
Poke செய்து
போக்குக் காட்டுவாள்.
நான் Check in செய்யும் இடங்களுக்கு
தானும் செல்ல வேண்டுமென்பாள்.
"Fake idஆ நீ" என்று நான் கேட்டபோது
"போடா பேக்கு" என்றவள்
இப்போது எங்கு சென்றாளோ?
அவளுடைய
On this day பதிவுகளை உண்டு
இன்றும் பசியாறுகிறேன்.😍😍

சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் இருக்கிற உறவு! - Mano Red



அவனைத் தேடி பிரயோஜனம் இல்லை
அவனைத் தேடுவதிலும் தப்பில்லை.
என் முதுகிலேறி
பாவப் பயணம் செய்திருக்கிறான்.
எனக்குள் இருந்த
மிருகத்தை இழுத்து
வீதியில் விட்டவன்
கடவுளை இழுக்கையில்
கை கழுவிப் போயிருக்கிறான்.
தனிமை என்கிற தவத்தில்
கண் மூடும் கணம் பார்த்து
நிமிரத் துடிக்கும்
நாயின் வாலாக
இமை துருத்தி
எனை வருத்தியிருக்கிறான்.
காதலில் காமம் பழகி
காமம் கழிந்து
காதல் துளிர்க்கையில்
காதல் தவிர்த்து காமம் மட்டும் உணரென்று
காறி துப்பியிருக்கிறான்.
கிழிந்த சட்டைக்காரனின்
ஒட்டிய வயிறு காணும்போதெல்லாம்
அதன் மீதேறி
அம்மண சம்மணம்போட்டு
கவளச் சோறு தின்றவன்
எச்சில் கையால் மனிதம் ஓட்ட
எத்தனிக்கும்போது
மரணிக்கத் துடித்திருக்கிறான்.
அவனுக்கும் எனக்குமான உறவு
பல்லின்மேல் நாக்கு படாத
பகட்டு வார்த்தைகள் போல,
சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும்
இடையில் இருக்கும் வெற்று பிம்பம்!

உடையாத நீர்க்குமிழி! - Mano Red


அவனை நீங்கள் அடிக்கடி பார்ப்பதுண்டு!
அவனைக் கடக்கும்போது உங்களில் சிலர்
ஊனமாகிப் போவதுண்டு.
அவனை நீங்கள் அல்ல
உங்களைப்போல் உன்மத்தர்கள்
ஆயிரம்பேரை தினம் அவன் கடக்கிறான்.
கறுப்புப் பணத்திற்கு எதிரான
தர்மயுத்தத்தை வியக்கும் நீங்கள்
தர்மத்தை என்றாவது வியந்ததுண்டா?
‘எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள்...’
என்ற பகடியுடன்
வங்கி வாசலில் காத்திருக்கிறீர்கள்.
அதற்கு எதிர்ப்புறம் எவ்வித எதிர்ப்புமின்றி
அவனும் பிச்சை கேட்கிறான்
இப்போது அவனைக் கடந்து
ஒரே ஒரு மனிதன் செல்கிறான்!

01 December 2016

தங்கைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! - Mano Red



தங்கைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்! (26.11.16) 😍 😍😍
-
சிசேரியன் என்பதால், 'பிறந்தது' என்பதைவிட வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன் உறவுமுறை அக்காக்களும், தோழிகளும் சிசேரியன் பிரசவத்தினால் பட்ட கஷ்டம் பார்த்து, “நான் சுகப்பிரசவத்தில்தான் பிள்ளை பெற்றுக்கொள்வேன்” என்று அடம்பிடித்தவளாக தாயாகத் தயாரானாள். இதுல நான் ஏதாச்சும் சொல்லணுமே, "38 வயசுல உலக அழகியா இருந்த ஐஸ்வர்யா ராயே சுகப்பிரசவத்துலதான் குழந்தை பெத்துகிட்டாங்க, உனக்கு 25 வயசுதான ஆகுது" என்றேன். அவளும் அதற்கேற்றவாறு சரியான உணவு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, நடைபயிற்சி, சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்வது என்று நடைமுறைப்படுத்திக் கொண்டாள். எல்லாம் சரியாக இருக்க, இரண்டு நாட்களுக்கு முன் பிரசவ வலி வந்து, ஊரின் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். எந்தப் பெண்ணுக்கும் தொடர்ச்சியாக பிரசவ வலி எடுக்காது. 45 விநாடிகள் வலி எடுத்தால் அடுத்த 3 நிமிடங்களுக்கு வலி இருக்காது. மீண்டும் 45 விநாடிகள் வலி, 3 நிமிடங்கள் வலியின்மை என்று தொடரும் வலி மிகுந்த தருணத்தில் அந்த 3 நிமிடங்கள் மட்டுமே வலியில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியுமாம்!

அவளுக்கு வலியும் சரியாக ஒத்துழைக்காததால் எல்லாரும் பயந்து சிசேரியன் செய்துவிடலாம் என்றிருக்கிறார்கள். அப்போதும் அவள் மறுத்து மறுநாள் வரை காத்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறாள். நேற்றிரவும் அதுபோல விட்டு விட்டு வலி வர, இந்த வலி சுகப்பிரசவத்திற்கு ஒத்துழைக்காது என்று சொன்ன மருத்துவர்கள், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு இரவோடு இரவாக அனுப்பி இருக்கிறார்கள். அங்கே இரவு 2மணிக்கு சிசேரியன் செய்து குழந்தையை நல்ல முறையில் எடுத்து இருக்கிறார்கள். நல்லவேளையாக, நல்ல நேரம், ராசி, நட்சத்திரம் பார்த்து குழந்தையை வெளியே எடுக்கலாம் என்று குடும்பத்தினர் யாரும் சொல்லவில்லை. அதுவரை சந்தோஷம்.


இப்போதெல்லாம், தாய்மை அடைவதே பெரிது என்றும், வயது கூடக்கூட பிரசவத்தின் சிரமங்களை பெண்களால் தாங்க முடியாது என்றும் உருவாக்கப்பட்ட நவீன தோற்றங்களால் அதிக பிரசவங்கள் சிசேரியனில் முடிகின்றன. இளம்பெண்களும், சுகப்பிரசவ வலியை (மனித உடல் தாங்கக்கூடிய வலியின் அதிகபட்ச அளவு 45 டெல். ஆனால், சுகப்பிரசவத்தின் போது பெண்ணுக்கு 57 டெல் வரை வலி ஏற்படும். இது, 20 இடங்களில் ஒரே சமயத்தில் எலும்பு முறிந்தால் ஏற்படும் வலிக்குச் சமம்) தாங்க முடியாது சிசேரியன் செய்யலாம் என்று குடும்பத்துடன் ஓ.கே. சொல்லிவிடுகிறார்கள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மருத்துவமனைகளும் இப்போது சுகப்பிரசவத்தில் அதிகம் ரிஸ்க் எடுப்பதில்லை.


இயற்கையின் அழகான ஆச்சர்யம் பிரசவம்! பெண்ணுக்கு இன்னொரு பிறப்பு. சுகப்பிரசவமோ, சிசேரியனோ எதுவாக இருந்தாலும் அவள் பெறும் வலிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. எந்த முறையில் பிரசவித்தாலும், அதனால் பல பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தையும் சகித்தே தன் குழந்தையின் ஆத்மாவுக்கும் உடம்புக்கும் மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்றுக்கொள்கிறாள் ஒரு தாய்! 😍 😍