www.gamblinginsider.ca

26 September 2017

ஞாயிறு உளறல் 8


40 பக்க நோட்டை எடுத்து 'இந்த ஊருக்கு என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வேன்' என்று ஒவ்வொரு நாள் காலையிலும் குளித்துவிட்டு 1008 முறை எழுதவேண்டுமென்று தோன்றும். அந்த அளவுக்கு என் சுயத்தை மறைத்து ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும் ஒரு முகத்தைப் பொருத்தி எனக்குள் நானே ஒத்திகை பார்க்கிறேன். இருந்தாலும் ஒத்திகை ஒத்துழைப்பதில்லை. நல்லவனோ கெட்டவனோ எதோவொரு விதத்தில் சுயம் வெளிப்பட்டுவிடுகிறது. ஆனால், எதிரில் இருப்பவர்களால்தான் சுய முகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. நாம் எப்படிப்பட்டவர்கள் எனத் தெரியாமலே 'இப்படி இருந்த நீயா இப்படி மாறிட்டே?' என ஒவ்வொரு செயலுக்கும் பல கேள்விகளை எழுப்பி இரும்புக் கரம் கொண்டு சுயத்தை அடக்கி விடுகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளில் நான் சில நேரங்களில் மனிதனாகவும், சில நேரங்களில் மிருகமாகவும், சில நேரங்களில் நல்ல நடிகனாகவும் இருந்ததற்கு யாருக்காவது நன்றி சொல்லியாக வேண்டும். காரணம் நான் நானாக இயங்கியதை விட சுற்றி இருக்கும் உங்களால் இயக்கப்பட்டதே அதிகம். நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்று பயந்து பயந்தே நடமாடியிருக்கிறேன். என் சுயத்தின் பரம ரகசியங்களை எப்போதாவது வெளிச்சத்துக்கு கொண்டு வர நினைக்கும்போது உங்களை நினைத்துப் பயந்து மறைத்திருக்கிறேன்.
குருட்டாம் போக்காக உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். 'நிஜத்தைவிட பொய்யை ஏன் அதிகம் ரசிக்கிறீகள்?' பொய்யான முகத்தின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துவிட்டு ஒருவரின் சுயத்தை ஏன் வெறுத்து ஒதுக்குகிறீர்கள். நல்லதோ, கெட்டதோ உங்களுக்குப் பிடித்தவாறு மட்டுமே நான் இருக்க வேண்டுமெனில் என் பெயரில் ஒரு செல்லப்பிராணியை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாமே.
என்னுடைய உயிர் அடையாளத்தை என்னால் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். எனக்குப் பிடித்த அடையாளத்தை உங்களால் உருவாக்கவும் முடியாது; ஒழுங்குபடுத்தவும் முடியாது. ஃபேஸ்புக் போன்ற பொதுவெளியில் என் கருத்தால் உங்களுக்குள் உருவாகும் ரசாயன மாற்றத்தை வைத்து எனக்கு ஓர் உருவம் நீங்கள் கொடுத்தால் அந்த உருவத்தை நிச்சயமாக என்னால் பொருத்திக் கொள்ள முடியாது. அப்படி உங்கள் மனம் நோகக் கூடாதென்று பார்த்துப் பார்த்து உருவம் மாறினால் மெல்ல மெல்ல ஓர் ஒழுங்கற்ற தன்மையை நோக்கி நானும் செல்ல வேண்டியிருக்கும். அந்த முகம் அசிங்கமாக இருப்பதால் எனக்கு ஆகாது.
இக்கட்டான சூழ்நிலையில் என் குறைபாடுகளைச் சமாளித்து என் உயிரை நீட்டிக்க எனக்குத் தெரியும். என் கருத்துப் பிழையினால் எனக்குள் ஜெனட்டிக் சீரழிவும் என்னைச் சுற்றி சமுதாய சீரழிவும் ஒருவேளை ஏற்பட்டால்... அப்போது உங்களுக்குப் பிடித்தவாறு நீங்கள் தரும் முகம் பொருத்தி என்னை மாற்றிக் கொள்கிறேன். அதுவரை நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். நிற்க... (ஒரு பெருமூச்சு விட்ட பிறகு தொடர்ந்து படிக்கவும்) 'என்ன -----க்கு நாங்கள் உன்னை அப்படியே ஏற்க வேண்டும்' என யாராவது கேட்டால், அதற்கான என் பதில் நீங்கள் கேட்கப் போகும் அந்த ------ல் இருக்கிறது. #அவ்ளோதான்
Mano Red / 24.9.17