www.gamblinginsider.ca

08 January 2015

இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red

பரபரப்பான நகரம் அது,
காட்டும் வரை
பல்லை காட்டிவிட்டு
விளக்கு அணைக்கும் நேரம்
வாய் மூடத் துவங்கியதில்
ஓசை அடக்கியது..!!

மூடப்படும்
ஒரு ரயில் நிலையத்தின்
ஆளற்ற படிக்கட்டில்,
இனிமேல் கையாளாகதவரென
மகன்களால் ஒதுக்கப்பட்ட,
கையில்லாத ஒருவர்
தன்னம்பிக்கையுடன்
காசை எண்ணிக் கொண்டிருந்தார்..,!!

வசதியான வீட்டிலிருந்து
விரட்டப்பட்டிருக்கும் போல,
தயங்கித் தயங்கி
தண்டவாளங்களில்
சிதறிக்கிடந்த சிதறல்களை
முகர்ந்து பார்த்து
முகம் சுழித்து முடியாமல்
நகர்ந்தது அந்த வெளிநாட்டு நாய்...!!

வீட்டை விட்டு
திருட்டுத் தனமாக ஓடி
வந்திருக்க வேண்டும் அவன்,
வினோதமாய் அவனை
வேடிக்கை பார்க்கக்கூட
ஆள் யாரும் அங்கில்லை,
துயரத்தை பகிர வழியின்றி
துவண்டு நின்று
கண்ணீரில் தன்னை
தணித்துக் கொண்டிருந்தான்..!!

இதற்கு மேலும்
யாரும் வாங்க போவதில்லை,
காய்ந்தாலும் பரவாயில்லை,
விற்காத பழச் சுமையை
யாருக்காகவோ நாளை வரை
சுமந்து கடக்க
தயாராகிவிட்டாள் பழக்காரி..!!

அங்கு
காசை எண்ணியவருக்கு
பணக்கார நாயைத் தெரியாது,
ஓடி வந்த அவன் கவலை
பழக்காரிக்கு புரியாது..!!
சத்தியமாக நாயால்
பழம் வாங்கவும் முடியாது.. !!
யாருக்காகவும் பயன்படாத
தருணம் தான் அது...!!

இதுவும் அவன் திருவிளையாடலில்
ஒரு விளையாடல் தானோ...??
இறைவனின் இயந்திரம் பழுதாகி
இவர்களை வைத்து
தன் தவறை திருத்துகிறான் போல
என்றெண்ணியபடி
பயணச்சீட்டை கிழித்து விட்டு
நடந்து செல்கிறேன் நான்.. !!