www.gamblinginsider.ca

18 September 2014

மூடர்கள் கூடம்...!! -Mano Red

ஆயிரம் பெரியார்கள்
அடித்து சொன்னாலும்
ஆலமரத்தில்
அதிசயமாய்
பால் வடியும் என்று
சத்தியம் செய்து
சடங்கு செய்யும் கூட்டம் இது..!!

சுவற்றில் திரிந்த
பல்லி சொல்லும்
பேச்சை நம்பி,
பள்ளி செல்லும்
குழந்தையின்
படிப்பை நிறுத்தும்
முட்டாள் கூட்டம் இது..!!

அத்தனையும்
அழுகிய வெங்காயங்கள்,
பிள்ளை பெத்தாலும் அழுது
செத்தாலும் அழுது
கண்ணீர் விட்டு
கதறக் கூடிய
சந்தர்ப்பவாத கூட்டம் இது..!!

சாதி இன வெறி பிடித்த
சாக்கடை கழிவுகள்,
மலிவு விலையில்
இழிவு வந்தாலும்
மகிழ்ச்சியுடன் ஏற்று
மடிந்து போகிற
மனிதப் பிழை கொண்ட கூட்டம் இது..!!

வேற்றுமை
ரத்தம் குடிக்கிற
பகுத்தறிவு இல்லாத
அட்டைப் பூச்சிகள்,
இல்லாதவனுக்கு
இலை விருந்தும்,
இருப்பவனுக்கு
இல்லை என்றும் சொல்லக் கூடிய
இழிந்த கிழிந்த கூட்டம் இது. !!

கடவுள் இல்லையென
கத்தியின்றி
கத்தி சொன்னவரின்
கருப்பு சிலைக்கு,
காகித மாலை சூடி
கடவுளாக்கி
கை கூப்பி வழிபடுகிற
கயவர்களின் மூடர் கூட்டம் இது..!!