www.gamblinginsider.ca

30 August 2016

மங்கை வார்குழல்! - Mano Red



நறுமணம் தடவி
வகிர்ந்து வாரி மலர்ச் சூடி
வளமிக்க சோழன் நீர்த்துறை
கருமணல் நீண்டதுபோல்
தேன் பாயும் குளிர்ச்சியுடைய
கூந்தல் கொண்டவளே!
உன்னைத் தழுவி
கூந்தல் கொள்ளும்
என் சந்தேகமெல்லாம்
கூந்தல் மணம் பற்றியதல்ல
‘கொங்கு தேர் வாழ்க்கை’ என
மாபெரும் பட்டிமன்றம் நடத்திய
நக்கீர சிவபெருமானின்
மூக்கின் மீதே!

11 August 2016

இல்லீகல் பியூட்டி! ❤ 😍😍 - Mano Red


உன் ப்ரிஸ்மா கண்களால்
ஆயிரம் முறை ஃபில்ட்டர் செய்கிறாய்.
ஒரிஜினலை ஓரங்கட்டிவிட்டு
ஒவ்வொரு எஃபெக்ட் மாற்றும்போதும்
எரிச்சலுடன் முகம் சுளிக்கிறாய்.
க்ராப் செய்கிறாய்
ஃப்லிப் செய்து 
தலைகீழாக மாற்றுகிறாய்.
அலட்டிக்கொள்ளாமல்
கலர் அட்ஜஸ்ட் செய்து
ஃப்ரேம்க்குள் அடங்காத என்னை
போக்குக் காட்டியே
ஃபோகஸ் செய்கிறாய்.
கபாலி டயலாக்போல
ஸ்டிக்கரில்
மீசையையை முறுக்கியும்
மரு ஒன்றை ஒட்டியும்...
இப்படியெல்லாம்
இந்த இல்லீகல் பியூட்டியை
கொலாஜ் செய்வதற்குப் பதில்
கொலை செய்துவிடலாம் நீ! 

05 August 2016

வாசல் கடக்கிறார்! - Mano Red


மசூதி தெருவின் முனையில் 
பாழடைஞ்ச ஒரு ஐயர் வீடு! 
அந்தத் தெருக்காரர்களும் 
அப்படித்தான் சொல்வார்கள்.
தாசில்தாராகப் பழுத்து
பணி ஓய்வுபெற்று
பணக்கார வாழ்க்கையின்
மொத்த ஜீவனையும்
உதவிகள் செய்தே கழித்தவர்
மனைவி மக்களை
எப்போதோ இழந்திருந்தார்.
"ஊசியின் காதில் ஒட்டகங்கள் நுழைந்தாலும்
செல்வந்தர்கள் மோட்ச வாசலைக் கடக்க முடியாது"
என்ற கிறிஸ்துவின் வாக்கை
பொய்யாக்க
உலக சம்பிரதாயப்படி
ஒருநாள் இறந்துபோனார்!

01 August 2016

ஒரு பெரும் போதை! - Mano Red


>>> "தம்பீ... ஒரு உதவி..."
சொல்லுங்க, என்ன?
>>> "கொத்தனார் வேலைக்காக வந்தேன்,
10நாளா வேலை இல்ல, சாப்ட்டு ஒரு வாரம் ஆச்சு..."
சரி. அதுக்கு நான் என்ன செய்யணும்?
>>> "ஏதாச்சும் கொடுத்தா, அம்மா ஹோட்டல்ல சாப்பிட்டுக்குவேன்."
ஓ... யார் கூட வந்தீங்க? எங்க தங்கியிருக்கீங்க?
>>> "எங்க ஊர்ல, நான் பெரிய கொத்தனார். இங்க வேலை தேடி வந்தேன் கெடைக்கல,
பிள்ளைகளும் வீட்ல சேத்துக்கல, எனக்கு ஏதாவதுன்னாகூட கேக்க யாருமில்ல."
அய்யோ! இந்தாங்க, இத வச்சுக்கோங்க.
>>> "நீ நல்லாருக்கணும் தம்பி"
ம்ம்ம்... ம்ம்ம்...
(ஒரு பெரும் போதை எனக்குள் ஏறுவதை உணர முடிந்தது)
இரண்டு அடி நடந்தபிறகு திரும்பி வந்தார்.
>>> "நீ, நல்லாருப்ப தம்பி"
(அவர் சொன்னதெல்லாம் உண்மையோ, பொய்யோ?! என்னால் செய்ய முடியும் சிறு உதவிக்கு இத்தனை கேள்விகள் அவசியமற்றதாக இருந்தாலும், ‘யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டேன்’ என்று முகத்தைச் சட்டெனத் திருப்பும் மனநிலை, சில கேள்விகளுக்குப் பிறகு, ‘உதவிசெய்யலாம்’ என்ற நிலைக்கு மாறிவிடுகிறது.) இது, பாத்திரம் அறிந்து இடுவது அல்ல, கதாபாத்திரம் அறிந்து இடுவது!