www.gamblinginsider.ca

16 December 2014

கசப்பு மருந்து..!! - Mano Red

பெயர் தான் பசுமைப் புரட்சி..!!
பூச்செடி வளர்க்க
ரசாயன பூச்சிக் கொல்லி..!!
கொன்றது
மரப் பூச்சியை மட்டுமல்ல
மனிதப் பூச்சியையும் தான்..!!

வியர்வை தாங்கிய நிலங்கள்
விஷம் தாங்கிய மருந்திற்கு
விருந்தாகி விட்டன...!!
சுற்றி சுற்றி
சுற்றுப்புறம் அழித்து
மண் இப்போது
மண்ணாகிப் போய்விட்டது ..!!

பூச்சிகளுக்கும்,மனிதனுக்கும்
நடக்கும் உலக யுத்தம் இது,
பூச்சிகளின் தொடர் வெற்றியை
சகிக்க முடியாமல் சாயம் பூச,
மனிதன் கண்டுகொண்டது
பூச்சிக் கொல்லி நஞ்சு..!

நஞ்சு ஊறிய
கசப்பு மருந்து அருந்தியே,
மனிதனும்,
கால் நடைகளும்
நரம்பு மண்டலம் பாதித்து
நடைபிணமாக அலைகிறார்கள்..!!

நாம் ஒட்டுமொத்தமாக
விஷச் சூழலுக்குள்
வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என
நடுக்கமாக இருக்கிறது..!
ஐந்தாம் தலைமுறை இங்கே
ஆயுள் குறைத்து வாழ்கிறது..!

பூச்சிக் கொல்லிகள்
மனிதனைப் பார்த்து
ஏளனமாக சிரிக்கின்றது,
தேனீக்கள் இல்லா உலகில்
மகரந்த சேர்க்கை இல்லை,
மகரந்த சேர்க்கை இல்லாத போது
தாவரங்கள் இருக்காது,
தாவரங்கள் இல்லையெனில்
மனித குலமே இல்லை..!!

இப்போது இருப்பது
இயற்கையா..? செயற்கையா..??
உயிர் போகும் ஆபத்தை
உணர வேண்டும்..!!
ரசாயனம் தவிர்த்த உலகை
ரசிக்க வேண்டும்..!!
இயற்கைக்கு இசைவான
இயல்பு வாழ்க்கை தான்
இதற்கு சாத்தியமான தீர்வு..!!