உளவியல் எல்லாம்
ஒரு புறமிருக்க,
அகத்திலிருக்கும்
கூற்றெல்லாம்
அகவை தாண்டி
அனுமதியின்றி அவிழ்கிறது,,!
பதற்றத்தின்
தொற்று நோய்க்கு
ஆளான இளைஞனின்
உளறல் கை போல
நடுங்கிக் கொண்டே
நகர்கிறது அடுத்த கணம்..!!
கடற்கரை கண்ட
சிறுமி ஒருத்தி
தருமி போல
ஓரிடத்தில் நில்லாது
குதித்து ஓடியதுவாக
ஆடிச் சிதறியது
தாவும் குரங்கு மனம்..!!
ஆங்காங்கே
வெடித்து கிடக்கும்-வாழ்வின்
படிப்பினை எல்லாம்
நடிக்க பார்க்கிறதே அன்றி
துடித்து முன்னேற
இன்னும் முன்வரவில்லை..!!
வாழ்வின் சுழற்சியை
முன்னோக்கி நகர்த்தும்
நெம்புகோல் எல்லாம்,
கால் ஒடிந்த கொக்கு போல
ஆதாரப்புள்ளிக்காக
ஆரம்பத்திலிருந்தே
ஆவலுடன் காத்திருக்கிறது..!!
அறியாத வயதிலிருந்த
அறிவெல்லாம்
செறிவான அனுபவத்தில்
முறியாமல் நின்ற போதும்,
தனிமையில் உளறும்
கிழவனின் இரவு போல
ஆதாரம் அற்று இருந்தது..!!
இப்படிக் கனவெல்லாம்
கிணற்றுக் கல்லாய்
மூழ்கி கிடந்தாலும்,
கிணற்றுத் தவளையாய்
மாறிவிடக் கூடாதென்ற
சூளுரை ஒன்று
சூடு போல
நெஞ்சைத் தழுவுகிறது..!!