www.gamblinginsider.ca

25 March 2015

நன்றி நிமித்தங்கள்...!!- Mano Red




பொய் மட்டும் 
இல்லையென்றால்
அதிசயமும், அபூர்வமும் 
நிலைத்திருக்காது..!!
இப்படி சொல்லுதலின் 
உண்மை வீச்சுகளில்
என்னை ஒளித்திருக்கும்   
வாய்மைக்கு ஒரு நன்றி..!!

பருவ வயதில் முளைத்த 
மீசை ஞாபகம் மறந்திருந்து,
அந்த அவசர கதியில்
ஆளில்லாத தன்னந்தனிமையில்
எஞ்சிய உணவுகளில்
என்பெயரை எழுதி அனுப்பிய
யாரோ விவசாயிக்கு ஒரு நன்றி..!!

மீச்சுருங்கிய பொழுதுகளின் 
பண்பட்ட பாகுபாட்டில் ,
நிலைக் கண்ணாடியும் 
முகம் திருப்பியது..!!
முக பிம்பங்களின் எதிர் நிழலும்
துன்பங்களையே பிரதிபலித்த போது
தடுமாற விடாத 
தன்னம்பிக்கைக்கு ஒரு நன்றி..!!
 
சூடுபட்ட இடத்தில்
கண்மையளவு
கறுத்துப் போனதற்கே 
கலங்கி விடுவதா...??
புறக்கணிக்கப்படுவதும்,,
புறந்தள்ளுவதும்
காலத்தின் புணர்தலென சொன்ன
அனுபவத்திற்கு ஒரு நன்றி..!!

உப்புக் கல் கொண்டு தேய்த்தாலும்
சொரணை அறியாத 
வெக்க, மானத்திடம்,
இங்கே பார் 
புண்பட்டதில் விழும் எச்சிலாய்
இதுவும் கடக்குமென
உறைக்கும்படி காட்டிய
அவமானத்திற்கு ஒரு நன்றி..!!

சீக்காளியாய் இருக்கும்
கணவனின் துணியை,
முகர்ந்து பார்த்த பின்பும்
முகம் மலர்ந்து துவைக்கும்
மனைவியின் பொறுமையை
விரைவில் பழக்கப்படுத்திய 
சூழ்நிலைக்கு ஒரு நன்றி..!!

இப்படி நன்றி நிமித்தங்களுடன் 
தேடும் வரை ஓடலாம்,
எழும்  வரை விழலாம்,
வலிக்கும் வரை அடிபடலாம்,
போதும் போதுமென்கிற வரை
நம்மை நாம் துன்புறுத்தலாம்,
இப்படித் தானே வாழக் கூடாது
ஆனால்
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் தானே.!!

எங்க ஊரு பண்ணையாரு..!! -Mano Red


வெறும் பேருக்கும்,
எங்க ஊருக்கும்,
அவரு தான் பெரியாளு,
சந்தனத்த நெஞ்சுல பூசி
சாக்கடை வாசம் வீசுவாரு
எங்க ஊரு பண்ணையாரு..!!

சீமையில இருந்து
சில்லுனு வந்தாரு ,
சிலுக்கு சட்ட போட்டு
கிளுக்குன்னு சிரிச்சாரு,
உதவின்னு கேட்டா போதும்
ஊர விட்டே ஓடுவாரு,
காஞ்சு போன கையால
காக்கா வெரட்ட மாட்டாரு . !!

பொத்தாம் பொது அடயாளமா
வெக்கங்கெட்ட அவுகளுக்கு
எட்டு மொழத்துல
வெள்ளை வேட்டியும்,
மானங்கெட்ட அவுகளுக்கு
மஞ்ச பூசுன
ரெண்டு மைனர் துண்டும்..!!

தலையாரி அவரு தான்,
தர்மகர்த்தா அவரு தான்
கோயிலுக்கு போனா
மசமசன்னு நிக்காம
மால மரியாதையெல்லாம்
வெரசா வாங்குவாரு,
தறுதலை அவரு தான்
நியாய தர்மம் பேசுவாரு .!

துப்புகெட்ட மனுசன் அவரு
பொட்டலத்து வெத்தலைல
பொகையிலை மடிச்சு வச்ச
பொழிச்சுன்னு துப்புவாரு,
கொஞ்சமா பேசுனாலும்
பொய்யாத்தான் பேசுவாரு ..!!

ரோடு போட்ட காசுலதான்
நாலு வீடு போட்டாரு,
கெணறு வெட்ட
யோசன சொல்லி
காரு வாங்கி வந்தாரு,
இனிக்க இனிக்க பேசியே
இளிச்சவாயன் ஆக்குனாரு..!!

மாடா உழச்சு
ஓடாப் போனாலும்
கூலி கூட்டித் தர மாட்டாரு,
வேலி நாங்க
சொந்த பயிர மேஞ்சாலும்,
மயிராத்தான் பேசுவாரு,.!

பொழப்பு கேட்டு நாங்க போனா
வாழ்க்க தேர இழுத்து
நடுத்தெருவுல விடுவாரு..!!
வெளஞ்ச எல்லாத்தையும்
அம்சமா அமுக்கி வச்சு
ஏழை வயித்துல அடிப்பாரு !
ஆனா அவரு மட்டும்
குளுகுளு அறையில
கும்மாளம் அடிப்பாரு
எங்க ஊரு பண்ணையாரு..!!