www.gamblinginsider.ca

03 August 2014

கடவுள் யார் பக்கம்..?? (Mano Red)



வழக்கமாக 
எப்போதும் பார்க்கிற 
கோவில்,
அன்று மட்டும் கொஞ்சம் 
அதிக வேண்டுதல்களோடும்,
காணிக்கைகளோடும்
பரபரப்பாகவே இருந்தது...!!

ஒவ்வொரு
சனிப்பெயர்ச்சிக்கும்,
குருப் பெயர்ச்சிக்கும்,
இறைவனை விட
அதிக மகிழ்ச்சியடைபவர்
கோவில் பூசாரியாகத்தான்
இருக்கிறார்...!!

தட்டில் விழும்
துட்டுகள் பார்த்து
யாருக்கும் புரியாமல்
ராசியும்
நட்சத்திரமும் சொல்லி
அர்ச்சனை செய்தால்
ஆண்டவனுக்கு எப்படி புரியும்..??

அரசு அலுவலகமும்
ஆண்டவன் கோவிலும்
மக்களுக்கு ஒன்று தான்,
பணம் கொடுத்தால்
எல்லாம் நடக்குமென்ற
நம்பிக்கை அவர்களுக்கு...!!

இப்படியே போனால்
வனவாசம் போல
பணவாசம் கூட
இறைவனுக்கும் பிடித்துவிடும்..!!

எல்லோரையும் காக்க
இறைவன் போதும்,
ஆனால்
இறைவனைக் காக்க
பூட்டுக்கள் பூட்டிய
கோவில் வேண்டியிருக்கிறது..!!

இத்தனையும் பார்த்து
அமைதி காக்கும் அந்த
கடவுள் யார் பக்கமோ...??
கடவுளுக்காக ஏமாறும்
மக்கள் பக்கமா. .??
இல்லை
கடவுளை வைத்து ஏமாற்றும்
கயவர்கள் பக்கமா..??