www.gamblinginsider.ca

07 December 2015

மழைக்குள் ஈரம்..! Mano Red

காய்ந்து கெடுக்கும்
இல்லையென்றால்
பெய்ந்து கெடுக்கும்
கடும் வெயில் கண்ட சென்னையை
கொடும் நெஞ்சோடு ஈரமாக்கியது.
 
தார்ச் சாலைகளில்
பாம்பு, பல்லி, பூச்சிகளை
பார்க்கும்போதுதான்
சென்னையில் மண்ணும் உண்டு
என்பது நினைவுக்கு வருகிறது.
 
பிளாஸ்டிக் குடங்களுக்கு
கைகால்கள் முளைத்து,
வறண்ட நாக்குகளுடன்
தண்ணீர் லாரிகளின் பின்னால்
ஓடிய மக்கள்
தண்ணீரில் தவித்து நிற்கின்றனர்.
 
அடையாறுக்கும் கூவத்துக்கும்
கரை எதுவும் கிடையாது.
கரையெல்லாம்  குடி(சை)யிருப்புகள்.
மழை மிகுந்ததால்
மரண சாகசத்தின்
கயிற்றிலேறி நடக்கிறார்கள்.
 
ஏரிகளில்
குடியேறியது தவறென
மன்னிப்பு கேட்கச்சொல்லி
மல்லுக்கு நிற்கிறது
பெய்யெனப் பெய்யும் மழை.
 
என்னைப் பெய்யச் சொல்லியிருந்தால்
குடையாக மட்டுமல்ல
கொடையாகவும் பெய்திருப்பேன்.
கொஞ்சமல்ல
ரொம்பவே மோசம் மழை.
 
இம்முறை
ஆறு குளங்கள்
தாங்கள் தொலைத்த இடங்களை
மழையின் உதவியோடு
கோவமாகத் தேடி வருகிறது
குறுக்கே யார் வந்தாலென்ன?
மழையின் நெஞ்சிலும்
ஈரம் இருக்கிறதே.

மழைக்குள் ஈரம்..! Mano Red

காய்ந்து கெடுக்கும்
இல்லையென்றால்
பெய்ந்து கெடுக்கும்
கடும் வெயில் கண்ட சென்னையை
கொடும் நெஞ்சோடு ஈரமாக்கியது.
 
தார்ச் சாலைகளில்
பாம்பு, பல்லி, பூச்சிகளை
பார்க்கும்போதுதான்
சென்னையில் மண்ணும் உண்டு
என்பது நினைவுக்கு வருகிறது.
 
பிளாஸ்டிக் குடங்களுக்கு
கைகால்கள் முளைத்து,
வறண்ட நாக்குகளுடன்
தண்ணீர் லாரிகளின் பின்னால்
ஓடிய மக்கள்
தண்ணீரில் தவித்து நிற்கின்றனர்.
 
அடையாறுக்கும் கூவத்துக்கும்
கரை எதுவும் கிடையாது.
கரையெல்லாம்  குடி(சை)யிருப்புகள்.
மழை மிகுந்ததால்
மரண சாகசத்தின்
கயிற்றிலேறி நடக்கிறார்கள்.
 
ஏரிகளில்
குடியேறியது தவறென
மன்னிப்பு கேட்கச்சொல்லி
மல்லுக்கு நிற்கிறது
பெய்யெனப் பெய்யும் மழை.
 
என்னைப் பெய்யச் சொல்லியிருந்தால்
குடையாக மட்டுமல்ல
கொடையாகவும் பெய்திருப்பேன்.
கொஞ்சமல்ல
ரொம்பவே மோசம் மழை.
 
இம்முறை
ஆறு குளங்கள்
தாங்கள் தொலைத்த இடங்களை
மழையின் உதவியோடு
கோவமாகத் தேடி வருகிறது
குறுக்கே யார் வந்தாலென்ன?
மழையின் நெஞ்சிலும்
ஈரம் இருக்கிறதே.

01 December 2015

கிழிந்த சட்டை..! - Mano Red



அப்பட்டமாகத் தெரிந்தது
அழுக்கேறி இருந்த
அவரின் உடை.!

இடதுகையின்
முதிர்ந்த தோளில்
மாட்டியிருந்த
பெரிய கோணிப்பையில்
நிரப்பிக் கொண்டே சென்றார்
பிளாஸ்டிக் அல்லாத
காகிதங்களை..

அவருக்குள்ளாகவே
போதுமென நினைத்து
மரத்தின் அடியில்
முருகா! எனச் சொல்லி அமர்ந்து
பொறுக்கிய காகிதங்களை
வகைப்படுத்த தொடங்கினார்.

காகிதங்களில்
தமிழ் வலதுகை பக்கம்
வேறு மொழிகள் இடதுகை பக்கம்
எழுதப்பட்டது ஒருபக்கம்
எதற்கும் ஆகாதது மறுபக்கம்
என்றவாறு அலங்கரித்தார்.

பொறுக்கிய
தமிழ்க் காகிதங்களை
நாக்கு குளிரப் படித்துவிட்டு,
தலையில் துண்டைப் போட்ட
மகன்களை நினைத்தபடி
முகத்தில் துண்டை மூடி
தூங்கிவிட்டார்.

சட்டைப்பையின்
கிழிந்த ஓரத்தில்
தூங்காமல் தொங்கிக் கொண்டிருந்த
பேனா சொல்லியது
நான்கு மகன்களையும்
படிக்க வைத்த
அவரும் படித்தவர் என்பதை...

27 November 2015

அவள் எனக்கானவள்!- Mano Red




அவளின்
விரல்கள் வருடிய
கன்னத்தில்
உண்டான வெப்பம்,
ரேகையுடன் சேர்த்து
மயில் தோகையையும்
வரைந்து சென்றதில்
நிமிடத்தில் மறைந்து பிறந்தேன்.

அங்கங்கே அவிழ்ந்து கிடக்கும்
சோக முடிச்சுகளை
ஒருசேரக் கட்டமைத்து
ஒழுங்காக்கிய
தொடுதலிலே எத்தனை சுகம்.

முகத்தில் பரவியிருந்த
வேதனை முடிகளை
விவரமான நுட்பத்தில்
சவரம் செய்தது போல
பளபளப்பாக்கியது
அந்த வருடலின்
உயிர் பரவல்.

இதற்குமேலாக
ஆணி அறைய முடியாது
எனத் தெரிந்து,
வலிகளின் ஊடாக
மெல்லிய காகிதப் பூக்களை
நடுவது போல்
தொட்டன விரல்கள்.

இளமையின் கொடிய
கண்ணீர் துளிகளை
நக கண்கள் வழியாக
கவர்ந்து எடுத்த அவள்
எனக்கானவள்.

(முற்றிலும் கற்பனையே- சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது)

23 November 2015

என்னில் அடங்காத மயிர்கள்! -Mano Red



யாரிடமும் இதுபற்றி
கேட்டதில்லை,
கேட்குமளவுக்கு அது
தலை போகிற விசயமில்லை
முடி போகும் விசயமே.

திருமணச் சந்தையிலும்
பல் பிடித்துப் பார்த்தால்
தப்பிவிடலாம்,
முடி இழுத்தல்லவா பார்க்கிறார்கள் என்று
ஒருவர் சொன்னதே 
மண்டையில் நிற்கிறது.

தலையைச் சொறிந்தபோது
முடி உதிர்ந்தது,
மயிர்தானே
போகட்டுமென்று சொல்ல
நானொன்றும் முடி துறந்தவனல்ல.

வட தென் துருவ
காந்தப்புல அறிவியலை
நான்கு சுவருக்குள்
சொல்லிக் கொடுத்தத முடிகள்
உதிரச் சிந்தியதே தவிர
உதிரம் சிந்தவில்லை.

இப்போதெல்லாம்,
கண்ணாடி பார்த்து
சீவுவதை விட
பார்த்துப் பார்த்து சீவுவதே அதிகம்.

எண்ணில் அடங்காத மயிர்கள்
என்னில் அடங்காதவரை
மலை இழுக்கும் முயற்சியெல்லாம்
மந்தமாகவே இருக்கும்.

20 November 2015

பசிக்கிறது.! - Mano Red

அவனுக்கு வயது இருக்கிறது
அவனுக்கு வயிறும் இருக்கிறது
வெக்கம் மானம்
சூடுடன் சேர்ந்த பசியும்
கொஞ்சம் இருக்கிறது

வயிறுக்கு
என்ன தெரியும்
பசிப்பதைத் தவிர.?
மிஞ்சிப் போனால்
கிள்ளி ரசிக்கத் தெரியும்
உள்ளிருந்து சிரிக்கத் தெரியும்.

அவன் யாரையும்
குற்றம் சொல்லமாட்டான்
குறையும் சொல்லமாட்டான்
அவனுக்கு நன்றாகவே தெரியும்
தேவை இருக்கும்வரை
பசியும் இருக்குமென்று.

நிச்சயம் அவனால்
புலியாக இருக்க முடியாது,
பசித்தால்
புல்லையும் கல்லையும்
புசித்தே ஆக வேண்டுமென்பதில்
உறுதியாக இருக்கும்போது.

பசி வந்தால்
பத்து மட்டுமல்ல
பதினொன்றாவதாக இருப்பதும்
பறக்கும்.
பறப்பதற்கு
இப்போதைய தேவை
இறக்கையல்ல,
இரைப்பை நிறைய உணவு.

17 November 2015

தூரத்தில் யாரோ? -.Mano Red

இதுதான்
இன்றைக்கு
எழுதப்பட்ட உண்மை.

அநேகமாக,
அது இரவில் எடுக்கப்பட்ட
புகைப்படமாகவே இருக்கும்
எனக்குத் தெரியாமல்
யாருக்குப் பின்னாலோ
நான் நின்று கொண்டிருக்கிறேன்.

கதவின்
பின்புறத்தில் இருந்து
சத்தம் வருகிறது
எட்டிப்பார்ப்பது அநாகரீகம்
பல்லிகள்
பள்ளிகொண்டிருக்கலாம்.

தூரத்தில்
யாரோ நிற்பதாக
ஓர் உள்ளுணர்வு
அருகில் சென்று பார்த்தால்
தெரிகிறது என் கற்பனை..!

ஒரு ஆழ்ந்த யோசனை
என் நிமிடங்களைத் தின்றது,
எத்தனை முறை யோசித்தாலும்
நினைவில் வரவில்லை
இப்போது மறுபடியும் பசிக்கிறது.

பளிச்சென ஒரு முகம் வேண்டி
நம்பிக்கையின் கண்ணாடியை
அழுத்தித் துடைத்த போது
கிடைத்தது
நொறுங்கிய கனவுகளோடு
என் ஆதி முகங்கள்.

15 November 2015

கல்லாய் மாறும் அகலிகைகள்!- Mano Red

செவ்வாய் நோக்கிய பயணத்திற்கு
செவ்’வாய்’ கொண்ட
அழகிகள் தேவை
என்ற விளம்பரத்தை
’ப்ச்’ கொட்டாமல் ரசித்து
வேகமாகச் சுற்றியது பூமி.

சகுனத்தடை ஏதுமின்றி
சிலநொடி
இளைப்பாற நின்றது
உலகின் ஒரு ஓரத்தில்.

சாக்கடையில்
விழுந்தவனைச் சுற்றி
எதற்கும் ஆகாத
செல்ஃபி பேய்கள்
கையை உயர்த்தியபடி நிற்க...

மிச்சமான எச்சில் சோற்றை
இல்லாதவனுக்கு
கொடுக்க மறுத்த
முடி(வி)யில்லா முதலாளிகள்
கும்மாளமாய்க் கூத்தடித்துச் சிரிக்க...

பெற்றெடுத்த வயிற்றில்
பெட்ரோல் ஊற்றுவது போல
முதியோர் இல்லம் சேர்த்துவிட்டு
முண்டங்களாய்
பிள்ளைகள் மாறியிருக்க...

பஸ்ஸில் அலையும் ஆண்கள் சிலர்
உரசித் தேய்க்கும் போதெல்லாம்
அகலிகையாய்
பெண்கள் மீண்டும்
கல்லாய் மாறத் துடிக்க...

நின்று வேடிக்கை பார்த்த பூமியோ
புதிதாக எதுவும் மாறவில்லை
கொஞ்சம் வழிவிடுங்கள்
என்றபடி
பண்பாட்டிற்கு புது விளக்கம் சொல்லி
திரும்பிப் பார்க்காமல் நகர்ந்தது.

06 November 2015

ஹா ஹா..காதல்.! - Mano Red



அவனுக்கு வயது
இருபத்தி ஆறு இருக்கும்.
இருந்து என்ன செய்ய
காதல்தான் இன்னும்
கதவு தட்டவில்லை.

ஜயதேவர் போல
ரசனைகளில் ஊறி
ரசம் பிழியும் வரிகளில்
ஆயிரம் கவிதை
அடுக்கடுக்காய் அள்ளி எறிவான்
இருந்தும் காதலி இல்லை.

எதிர்வரும் பெண்களை எல்லாம்
ஏற்றுக் கொள்வான் 
காவியக் காதலிகளாக,
கண்ணில்படும் குமரிகளை எல்லாம்
கற்பனையில் காதலிப்பான்
தேவையில்லாத தேவதைகளாக..

குளிக்கப் போனால் கவிதை
சாமி கும்பிட போனால் கவிதை
பல்லுத் தேய்த்தால் கவிதை
பாட்டி அழைத்தாலும் கவிதை
கவிதை கவிதை என
கழுதையாய் திரிந்தான்.

அவன் அப்பன் செய்த புண்ணியமல்ல.
எவன் செய்த புண்ணியமோ
அவள் அவனிடம் சிக்கினாள்
கவிதையை ரசிப்பவளாம்.
இவனும் குறைந்தவனல்ல
இடி மழை போல
கவிதை உரைத்தான்
காதலும் வேறு வழியின்றி மலர்ந்தது.

நன்றாகவே கடந்தது நாட்கள்
கவிதைகளும் கரைபுரண்டு ஓடின.
ஆறுதல் காதலி 
மாறுதலாய், கவிதை வேண்டாம் 
கானம் வேண்டுமென்றாள்.
மானே தேனே பொன்மானே சேர்த்து
தலை சொறியும் கானம் இவன் பாட
காதலியும் தெறித்து ஓட
இனிதே காதல் முறிந்தது
இது தேவையா.?

02 November 2015

அவள் ஓடிவிட்டாள்.! -Mano Red



இரு,
இதோ வந்துவிடுகிறேன்
என்று சொல்லிவிட்டு
திடுதிடுவென
ஓடிப் போனாள் அவள்.

படாரென கதவிழுத்து
தலை தெறிக்க ஓடியதில்
சமநிலை திரும்பாமல்
இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறது
பழைய தகரக் கதவு.

வழக்கம்போல
ஓடும் ஓட்டம் என்பதால்,
தெருவில் யாரும்
அவளைக் கவனிக்கவில்லை,
அவர்கள் யாருக்கும்
அதுபற்றிய
கவலையுமில்லை.

இடம் வந்தும்
இளைப்பாற நிற்காமல்
அங்கிருந்த
நெடும் வரிசையில்
தானும் நிற்கிறாள்,
அதற்காகவே
ஓடியும் வந்திருக்கிறாள்.

ஏன் ஓடினாள்
எங்கு ஓடினாள்
எதை வாங்க ஓடினாள்
யாரை இருக்கச் சொல்லி
ஓடினாள் என
எழும்பியிருக்கும்
ஏகப்பட்ட கேள்விகளின் பதில்
இறுதியில் கிடைக்கும்
பசியுடன் காத்திருப்போம்
அந்தத் தாய் வீடு திரும்பும்வரை.



28 October 2015

வெந்தும் வேகாத சாவு..! -Mano Red



உடலுக்கு என்ன கவலை
அதுபாட்டுக்கு அது இருக்கும்
அதற்கு நிச்சயிக்கப்பட்ட
மரணம் வரும்வரை !

மரணத்தின் போது
துணைக்கு யாரை
அழைக்க முடியும்.
நமக்கான மரணத்தை
நாம்தான் சந்தித்தாக வேண்டும்.

மூச்சை அடக்கி
அத்தனையும் ஒடுக்கி
மரணமடைந்தது போல
மல்லாந்து பாருங்கள்
உண்மைநிலை புரியும்.

இறந்த பின்
சுடுகாடு சேர்ந்தால்
உடல் அழிந்துவிடுமா.?
நிச்சயமாக அழியாது
நான் எனும் ஆணவம்
இருக்கும் வரை.

நான் நான் என்று
பொங்கியெழும்
ஆவேசப் பூரிப்பு
இந்த உடலை
எரிக்கவோ
புதைக்கவோ விடாது.

நான் எனும்
இப் பெரும் பூதமே
வாழ்நாள் முழுக்க 
உடலெனும் கூட்டை
ஆட்டி வைக்கிறது..

நான் எனும் பேருணர்வை
போர்த்தி நிற்கும்
எண்ணங்கள செயல்கள் நினைவுகள் 
இவை அத்தனையும்
அழியும் வரை
மரணம் என்பது
வெந்தும் வேகாத நிலையே.!

24 October 2015

அவள் ஆடை ரத்தம்...! - Mano Red



அந்த நாட்களின் கொடுமை
அவளையும் விடவில்லை,
முள் மீது படுத்தவளாய்
முழுங்க முடியாத எச்சிலுடன்
முனகிக் கொண்டிருந்தாள்.

உடலும் மனமும்
வலியுடன்
பேசிக் கொண்டிருப்பதால்
யாருடனும் பேச மனமின்றி
சுருண்டு கிடந்தாள்.

உணவு கொள்ளவில்லை,
நடக்கத் தெம்பில்லை,
உயிர் அத்தனையும் சுருக்கி
ஒரு புள்ளியில்
நிறுத்தி
வெறுத்து அமர்ந்திருந்தாள்.

அவள் உடலின் மேல்
போர்த்தப்பட்டிருக்கும்
பெண் என்பவளை,
சமுதாயமும்
ஆணாதிக்கக் கற்பிதங்களும்
அன்றுவரை தீட்டாகவே எண்ணி
அருவெறுத்து ஒதுக்கியிருந்தது.

அவள் ஆடை படியும் ரத்தம்
அசுத்தமானது அல்ல,
மனித உடல் கிழித்த
ரத்தம் போல் தூய்மையானது.
தீட்டானவளைத் தெய்வமாக்கும்
கருவின் ஆரம்பம் இது.

அவளுக்கான உலகம் அன்று
உளறிக் கொட்டினாலும்
அவளுக்கான நாட்கள் அன்று
நகர மறுத்தாலும்
அவளுக்கான நிமிடம் அன்று
நின்று எரிந்தாலும்
அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....


22 October 2015

ஜானி ஜானி யெஸ் பாப்பா..! -Mano Red




தொண்டைத் தண்ணீர் வற்ற
மேடையில் அவர்கள்
பேசிக் கொண்டிருந்தார்கள்,
நதிநீர் இணைப்பையும்
வற்றிப் போன
ஏரி குளங்கள் பற்றியும்

அரைகுறை ஆடையணிந்த
கவர்ச்சி அழகி ஒருத்தி
கண்ணீர் மழ்க
கவிதை படித்துக் கொண்டிருந்தாள்,
கற்பழிக்கப்பட்ட சிறுமிக்காகவும்
பெண்ணிய சுதந்திரத்திற்காகவும்

மாடாய் கத்திப் பேசி
களைத்துப் போனதில் கலைந்தார்கள்,
மாட்டுக்கறி வேண்டுமென
ஒரு கூட்டமாகவும்
பசுவதையைத் தடை செய்ய
இன்னொரு கூட்டமாகவும்

கக்கத்தில் சொருகியிருந்த
அக்வாஃபினா பாட்டில் நீரை
அடிக்கடி குடித்து
நெகிழ்வாகப் பேசி அமர்ந்தார்,
நெகிழி ஒழிக்கும் சங்கத்தின்
மூத்த போராளிகளுள் ஒருவர்.

அவர்கள் எல்லாம்
எக்கேடோ கெட்டுப் போகட்டும்,
எந்த அக்கறையும் இல்லாமல்
பக்கத்து வீட்டு குழந்தை பாடும்
”ஜானி ஜானி யெஸ் பாப்பா ”
இன்னொருமுறை கேட்குமா?
சன்னலோரத்தில் 
காது தீட்டியபடி நான்.

15 October 2015

பாவம் அவர்கள்...!- Mano Red



இரக்கப்படுகிறோம்
அவர்கள் இந்தியாவில்
பிறந்ததற்காக அல்ல,
வல்லரசாக்காமல் இறந்து
கடமையைச் சரியாக
செய்யாமல் போனதற்காக..

அவர் அப்படி
இவர் இப்படியென
எவரும் எவரைப் பற்றியும் பேசலாம்,
இருக்கும்போது
இறக்கச் சொல்லும் நாமே
இறந்த பின்பு அவர்களை
இருக்கச் சொல்கிறோம்.

பாச வேசங்களினால்
பட்டை தீட்டப்பட்ட
பகுத்தறிவுக்கு
நினைவுகூறல் என்பது,
தற்காலிக அழுகையில்
கண்ணீர் சுரந்து
பொழுது சாய்ந்ததும் பல் இளிக்கும்
நாடகம் போலத்தான்.

போற்றுவதற்கும்
போட்டு உடைப்பதற்கும்
சந்தர்ப்பம் கிடைக்காத
சந்தர்ப்பவாதிகள்
நேரம் நாள் பார்த்து
நாகரீகமாக காத்திருக்கிறார்கள்
சிரித்து அழுவதற்கு...

தயவுசெய்து
உங்களின் சோக மூட்டைகளில்
தீயை வைக்காதீர்கள்.
காற்று மாசுபடுமென்ற
கவலையில் அல்ல,
காற்றில் கலந்திருக்கும்
கலாம் போன்றவர்களுக்கு
மூச்சடைக்கும் என்பதை
மனதில் வைத்தாவது..


06 October 2015

உள்ளுணர்வில் ஓர் ஊஞ்சல்..! Mano Red



அவளை நான்
நன்கு அறிவேன்.

நான் காத்திருக்கும் 
இடத்தில்தான் 
அவளும் காத்திருப்பாள்
எனக்காக அல்ல
பேருந்திற்காக..

வர்ணிக்க ஒன்றுமிருக்காது,
முழுக்க மூடிய
கருப்பு உடையில்
முகம் மறைத்தவளின்
கண்கள் மட்டும்
காட்டுத்தீயாய் இருக்குமென
அவ்வப்போது உணருவேன்
என் பக்கம் திரும்பும் போதெல்லாம்.

அவளுக்கு பாடல் பிடிக்குமா
எனத் தெரியாது,
மனதுக்குள் முனகினாலும்
சட்டெனத் திரும்புவாள்
தான் ரசித்ததையும் காட்டிக்கொள்ளாமல்..

அவளுக்கு என் முகம் தெரியுமென்பது
அடிக்கடி முகமூடி கிழிக்கும்
எனக்கும் தெரியும்,
அழைப்பது போல
அலைவரிசை காட்டிவிட்டு
தொலைவில் நின்று விலகுவாள்.

அவளின் உள்ளுணர்வு நூலில்
ஊஞ்சல் கட்டி
ஆடத் தெரிந்த எனக்கு,
அவளின் மனதைக் கட்டியிழுக்க
காரணக் கயிறு கிடைக்கவில்லை.

நிறுத்தம் வந்தது
அவளும் இறங்கிச் சென்றுவிட்டாள்,
ஆனாலும்,
அவள் கண்கள்
இன்னும் இறங்கவிடவில்லை
அடுத்த நிறுத்தம் வரை...

30 September 2015

உடைஞ்சு போச்சு.! -Mano Red



களிமண்ணாக இருந்தாலும்
கடும் தவமிருந்தே,
குழந்தைகளின் கையால்
உடைந்து போவதற்காக
பிறக்கின்றன பொம்மைகள்.!

உடைந்த சத்தத்துக்கும்
சத்தம் கேட்டு ஓடி வரும்
பெரியவர்களின் திட்டுதலுக்கும்
இடையில் இருக்கிற - மௌனத்தின்
இடைவெளியில் அழகாக
தப்பி விடுவார்கள் குழந்தைகள்.

தப்பிக்க அவர்கள் இயற்றும்
வாக்கியங்கள் ஒவ்வொன்றும்
அத்தனை சாதாரணமல்ல,
பொம்மைக்கு கிடைக்கும்
சாப விமோசன மந்திரங்கள்.!

பொம்மைதான் குழந்தையா?
குழந்தைதான் பொம்மையா என்பது
உடைதலின் தன்மை சார்ந்தது.
பொம்மைக்கு ஆயுள் குறைவு
என்பதனால்
குழந்தையாகவே இருக்கின்றன.!

கை தவறி விழுந்திருந்தாலும்
”நான் ஒன்னும் செய்யல
அதுவா விழுந்து உடைஞ்சு போச்சு” - என்ற
குழந்தையின் குற்றச் சாட்டலில்
பொம்மை இப்போது
சொர்க்கம் சேர்ந்திருக்கும்.!


26 September 2015

ஒத்திகை வாழ்க்கை.! Mano Red



விரல் மடக்கி
குரல் திருத்தி
தலை கவிழ்த்து - நான்
யாரென்பதை நிருபிக்க,
ஒவ்வொரு முகத்திற்கும்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு முகமூடியைக்
கழற்றி எறிகிறேன்.

இருளில் விழுகிற நிழலின்
வால் பிடித்து ஓடியே
வெளிச்சத்தின் நுனி பற்றுகிறேன்.

யாராவது கேட்கலாம்
கதவுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும்
அந்தக் கருப்பு உருவம் யாரென்று?
நானும் தயங்காமல் நடித்து,
யோசிக்காமல் சொல்வேன்
அது யாரோ என்று! - நிஜமாகவே
அது யாரோவாகவே இருந்திருக்கலாம்.

விழிப்புணர்ச்சியில்லாத
விழியின் புணர்ச்சிகளை
அளந்தும் அளக்காமலும்
அடுத்தவர்களின் மனதுள் செலுத்தி
திறவுகோல் தவறிய
திருடனாய் கைகால் உதறுகிறேன்.

ஊருக்கு ஒரு நடிப்பு
உணர்வுக்கு ஒரு நடிப்பு
அழுகைக்குக்கும் அழகுக்கும்
சேர்ந்து ஒரு நடிப்பு என
புதுமுகம் பார்த்த போதெல்லாம்
பவுடர் பூசிய குழந்தையின் சிரிப்பை
ஓரளவுக்கு ஒத்திருக்கிறது -என்
ஒத்திகை வாழ்க்கை.!