காய்ந்து கெடுக்கும்
இல்லையென்றால்
பெய்ந்து கெடுக்கும்
கடும் வெயில் கண்ட சென்னையை
கொடும் நெஞ்சோடு ஈரமாக்கியது.
தார்ச் சாலைகளில்
பாம்பு, பல்லி, பூச்சிகளை
பார்க்கும்போதுதான்
சென்னையில் மண்ணும் உண்டு
என்பது நினைவுக்கு வருகிறது.
பிளாஸ்டிக் குடங்களுக்கு
கைகால்கள் முளைத்து,
வறண்ட நாக்குகளுடன்
தண்ணீர் லாரிகளின் பின்னால்
ஓடிய மக்கள்
தண்ணீரில் தவித்து நிற்கின்றனர்.
அடையாறுக்கும் கூவத்துக்கும்
கரை எதுவும் கிடையாது.
கரையெல்லாம் குடி(சை)யிருப்புகள்.
மழை மிகுந்ததால்
மரண சாகசத்தின்
கயிற்றிலேறி நடக்கிறார்கள்.
ஏரிகளில்
குடியேறியது தவறென
மன்னிப்பு கேட்கச்சொல்லி
மல்லுக்கு நிற்கிறது
பெய்யெனப் பெய்யும் மழை.
என்னைப் பெய்யச் சொல்லியிருந்தால்
குடையாக மட்டுமல்ல
கொடையாகவும் பெய்திருப்பேன்.
கொஞ்சமல்ல
ரொம்பவே மோசம் மழை.
இம்முறை
ஆறு குளங்கள்
தாங்கள் தொலைத்த இடங்களை
மழையின் உதவியோடு
கோவமாகத் தேடி வருகிறது
குறுக்கே யார் வந்தாலென்ன?
மழையின் நெஞ்சிலும்
ஈரம் இருக்கிறதே.
07 December 2015
மழைக்குள் ஈரம்..! Mano Red
மழைக்குள் ஈரம்..! Mano Red
காய்ந்து கெடுக்கும்
இல்லையென்றால்
பெய்ந்து கெடுக்கும்
கடும் வெயில் கண்ட சென்னையை
கொடும் நெஞ்சோடு ஈரமாக்கியது.
தார்ச் சாலைகளில்
பாம்பு, பல்லி, பூச்சிகளை
பார்க்கும்போதுதான்
சென்னையில் மண்ணும் உண்டு
என்பது நினைவுக்கு வருகிறது.
பிளாஸ்டிக் குடங்களுக்கு
கைகால்கள் முளைத்து,
வறண்ட நாக்குகளுடன்
தண்ணீர் லாரிகளின் பின்னால்
ஓடிய மக்கள்
தண்ணீரில் தவித்து நிற்கின்றனர்.
அடையாறுக்கும் கூவத்துக்கும்
கரை எதுவும் கிடையாது.
கரையெல்லாம் குடி(சை)யிருப்புகள்.
மழை மிகுந்ததால்
மரண சாகசத்தின்
கயிற்றிலேறி நடக்கிறார்கள்.
ஏரிகளில்
குடியேறியது தவறென
மன்னிப்பு கேட்கச்சொல்லி
மல்லுக்கு நிற்கிறது
பெய்யெனப் பெய்யும் மழை.
என்னைப் பெய்யச் சொல்லியிருந்தால்
குடையாக மட்டுமல்ல
கொடையாகவும் பெய்திருப்பேன்.
கொஞ்சமல்ல
ரொம்பவே மோசம் மழை.
இம்முறை
ஆறு குளங்கள்
தாங்கள் தொலைத்த இடங்களை
மழையின் உதவியோடு
கோவமாகத் தேடி வருகிறது
குறுக்கே யார் வந்தாலென்ன?
மழையின் நெஞ்சிலும்
ஈரம் இருக்கிறதே.
01 December 2015
கிழிந்த சட்டை..! - Mano Red
அப்பட்டமாகத் தெரிந்தது
அழுக்கேறி இருந்த
அவரின் உடை.!
இடதுகையின்
முதிர்ந்த தோளில்
மாட்டியிருந்த
பெரிய கோணிப்பையில்
நிரப்பிக் கொண்டே சென்றார்
பிளாஸ்டிக் அல்லாத
காகிதங்களை..
அவருக்குள்ளாகவே
போதுமென நினைத்து
மரத்தின் அடியில்
முருகா! எனச் சொல்லி அமர்ந்து
பொறுக்கிய காகிதங்களை
வகைப்படுத்த தொடங்கினார்.
காகிதங்களில்
தமிழ் வலதுகை பக்கம்
வேறு மொழிகள் இடதுகை பக்கம்
எழுதப்பட்டது ஒருபக்கம்
எதற்கும் ஆகாதது மறுபக்கம்
என்றவாறு அலங்கரித்தார்.
பொறுக்கிய
தமிழ்க் காகிதங்களை
நாக்கு குளிரப் படித்துவிட்டு,
தலையில் துண்டைப் போட்ட
மகன்களை நினைத்தபடி
முகத்தில் துண்டை மூடி
தூங்கிவிட்டார்.
சட்டைப்பையின்
கிழிந்த ஓரத்தில்
தூங்காமல் தொங்கிக் கொண்டிருந்த
பேனா சொல்லியது
நான்கு மகன்களையும்
படிக்க வைத்த
அவரும் படித்தவர் என்பதை...
27 November 2015
அவள் எனக்கானவள்!- Mano Red
அவளின்
விரல்கள் வருடிய
கன்னத்தில்
உண்டான வெப்பம்,
ரேகையுடன் சேர்த்து
மயில் தோகையையும்
வரைந்து சென்றதில்
நிமிடத்தில் மறைந்து பிறந்தேன்.
அங்கங்கே அவிழ்ந்து கிடக்கும்
சோக முடிச்சுகளை
ஒருசேரக் கட்டமைத்து
ஒழுங்காக்கிய
தொடுதலிலே எத்தனை சுகம்.
முகத்தில் பரவியிருந்த
வேதனை முடிகளை
விவரமான நுட்பத்தில்
சவரம் செய்தது போல
பளபளப்பாக்கியது
அந்த வருடலின்
உயிர் பரவல்.
இதற்குமேலாக
ஆணி அறைய முடியாது
எனத் தெரிந்து,
வலிகளின் ஊடாக
மெல்லிய காகிதப் பூக்களை
நடுவது போல்
தொட்டன விரல்கள்.
இளமையின் கொடிய
கண்ணீர் துளிகளை
நக கண்கள் வழியாக
கவர்ந்து எடுத்த அவள்
எனக்கானவள்.
(முற்றிலும் கற்பனையே- சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது)
23 November 2015
என்னில் அடங்காத மயிர்கள்! -Mano Red
20 November 2015
பசிக்கிறது.! - Mano Red
அவனுக்கு வயது இருக்கிறது
அவனுக்கு வயிறும் இருக்கிறது
வெக்கம் மானம்
சூடுடன் சேர்ந்த பசியும்
கொஞ்சம் இருக்கிறது
வயிறுக்கு
என்ன தெரியும்
பசிப்பதைத் தவிர.?
மிஞ்சிப் போனால்
கிள்ளி ரசிக்கத் தெரியும்
உள்ளிருந்து சிரிக்கத் தெரியும்.
அவன் யாரையும்
குற்றம் சொல்லமாட்டான்
குறையும் சொல்லமாட்டான்
அவனுக்கு நன்றாகவே தெரியும்
தேவை இருக்கும்வரை
பசியும் இருக்குமென்று.
நிச்சயம் அவனால்
புலியாக இருக்க முடியாது,
பசித்தால்
புல்லையும் கல்லையும்
புசித்தே ஆக வேண்டுமென்பதில்
உறுதியாக இருக்கும்போது.
பசி வந்தால்
பத்து மட்டுமல்ல
பதினொன்றாவதாக இருப்பதும்
பறக்கும்.
பறப்பதற்கு
இப்போதைய தேவை
இறக்கையல்ல,
இரைப்பை நிறைய உணவு.
17 November 2015
தூரத்தில் யாரோ? -.Mano Red
இதுதான்
இன்றைக்கு
எழுதப்பட்ட உண்மை.
அநேகமாக,
அது இரவில் எடுக்கப்பட்ட
புகைப்படமாகவே இருக்கும்
எனக்குத் தெரியாமல்
யாருக்குப் பின்னாலோ
நான் நின்று கொண்டிருக்கிறேன்.
கதவின்
பின்புறத்தில் இருந்து
சத்தம் வருகிறது
எட்டிப்பார்ப்பது அநாகரீகம்
பல்லிகள்
பள்ளிகொண்டிருக்கலாம்.
தூரத்தில்
யாரோ நிற்பதாக
ஓர் உள்ளுணர்வு
அருகில் சென்று பார்த்தால்
தெரிகிறது என் கற்பனை..!
ஒரு ஆழ்ந்த யோசனை
என் நிமிடங்களைத் தின்றது,
எத்தனை முறை யோசித்தாலும்
நினைவில் வரவில்லை
இப்போது மறுபடியும் பசிக்கிறது.
பளிச்சென ஒரு முகம் வேண்டி
நம்பிக்கையின் கண்ணாடியை
அழுத்தித் துடைத்த போது
கிடைத்தது
நொறுங்கிய கனவுகளோடு
என் ஆதி முகங்கள்.
15 November 2015
கல்லாய் மாறும் அகலிகைகள்!- Mano Red
செவ்வாய் நோக்கிய பயணத்திற்கு
செவ்’வாய்’ கொண்ட
அழகிகள் தேவை
என்ற விளம்பரத்தை
’ப்ச்’ கொட்டாமல் ரசித்து
வேகமாகச் சுற்றியது பூமி.
சகுனத்தடை ஏதுமின்றி
சிலநொடி
இளைப்பாற நின்றது
உலகின் ஒரு ஓரத்தில்.
சாக்கடையில்
விழுந்தவனைச் சுற்றி
எதற்கும் ஆகாத
செல்ஃபி பேய்கள்
கையை உயர்த்தியபடி நிற்க...
மிச்சமான எச்சில் சோற்றை
இல்லாதவனுக்கு
கொடுக்க மறுத்த
முடி(வி)யில்லா முதலாளிகள்
கும்மாளமாய்க் கூத்தடித்துச் சிரிக்க...
பெற்றெடுத்த வயிற்றில்
பெட்ரோல் ஊற்றுவது போல
முதியோர் இல்லம் சேர்த்துவிட்டு
முண்டங்களாய்
பிள்ளைகள் மாறியிருக்க...
பஸ்ஸில் அலையும் ஆண்கள் சிலர்
உரசித் தேய்க்கும் போதெல்லாம்
அகலிகையாய்
பெண்கள் மீண்டும்
கல்லாய் மாறத் துடிக்க...
நின்று வேடிக்கை பார்த்த பூமியோ
புதிதாக எதுவும் மாறவில்லை
கொஞ்சம் வழிவிடுங்கள்
என்றபடி
பண்பாட்டிற்கு புது விளக்கம் சொல்லி
திரும்பிப் பார்க்காமல் நகர்ந்தது.
06 November 2015
ஹா ஹா..காதல்.! - Mano Red
02 November 2015
அவள் ஓடிவிட்டாள்.! -Mano Red
28 October 2015
வெந்தும் வேகாத சாவு..! -Mano Red
உடலுக்கு என்ன கவலை
அதுபாட்டுக்கு அது இருக்கும்
அதற்கு நிச்சயிக்கப்பட்ட
மரணம் வரும்வரை !
மரணத்தின் போது
துணைக்கு யாரை
அழைக்க முடியும்.
நமக்கான மரணத்தை
நாம்தான் சந்தித்தாக வேண்டும்.
மூச்சை அடக்கி
அத்தனையும் ஒடுக்கி
மரணமடைந்தது போல
மல்லாந்து பாருங்கள்
உண்மைநிலை புரியும்.
இறந்த பின்
சுடுகாடு சேர்ந்தால்
உடல் அழிந்துவிடுமா.?
நிச்சயமாக அழியாது
நான் எனும் ஆணவம்
இருக்கும் வரை.
நான் நான் என்று
பொங்கியெழும்
ஆவேசப் பூரிப்பு
இந்த உடலை
எரிக்கவோ
புதைக்கவோ விடாது.
நான் எனும்
இப் பெரும் பூதமே
வாழ்நாள் முழுக்க
உடலெனும் கூட்டை
ஆட்டி வைக்கிறது..
நான் எனும் பேருணர்வை
போர்த்தி நிற்கும்
எண்ணங்கள செயல்கள் நினைவுகள்
இவை அத்தனையும்
அழியும் வரை
மரணம் என்பது
வெந்தும் வேகாத நிலையே.!
24 October 2015
அவள் ஆடை ரத்தம்...! - Mano Red
22 October 2015
ஜானி ஜானி யெஸ் பாப்பா..! -Mano Red
தொண்டைத் தண்ணீர் வற்ற
மேடையில் அவர்கள்
பேசிக் கொண்டிருந்தார்கள்,
நதிநீர் இணைப்பையும்
வற்றிப் போன
ஏரி குளங்கள் பற்றியும்
அரைகுறை ஆடையணிந்த
கவர்ச்சி அழகி ஒருத்தி
கண்ணீர் மழ்க
கவிதை படித்துக் கொண்டிருந்தாள்,
கற்பழிக்கப்பட்ட சிறுமிக்காகவும்
பெண்ணிய சுதந்திரத்திற்காகவும்
மாடாய் கத்திப் பேசி
களைத்துப் போனதில் கலைந்தார்கள்,
மாட்டுக்கறி வேண்டுமென
ஒரு கூட்டமாகவும்
பசுவதையைத் தடை செய்ய
இன்னொரு கூட்டமாகவும்
கக்கத்தில் சொருகியிருந்த
அக்வாஃபினா பாட்டில் நீரை
அடிக்கடி குடித்து
நெகிழ்வாகப் பேசி அமர்ந்தார்,
நெகிழி ஒழிக்கும் சங்கத்தின்
மூத்த போராளிகளுள் ஒருவர்.
அவர்கள் எல்லாம்
எக்கேடோ கெட்டுப் போகட்டும்,
எந்த அக்கறையும் இல்லாமல்
பக்கத்து வீட்டு குழந்தை பாடும்
”ஜானி ஜானி யெஸ் பாப்பா ”
இன்னொருமுறை கேட்குமா?
சன்னலோரத்தில்
காது தீட்டியபடி நான்.
15 October 2015
பாவம் அவர்கள்...!- Mano Red
06 October 2015
உள்ளுணர்வில் ஓர் ஊஞ்சல்..! Mano Red
நன்கு அறிவேன்.
நான் காத்திருக்கும்
இடத்தில்தான்
அவளும் காத்திருப்பாள்
பேருந்திற்காக..
வர்ணிக்க ஒன்றுமிருக்காது,
முழுக்க மூடிய
கருப்பு உடையில்
முகம் மறைத்தவளின்
கண்கள் மட்டும்
காட்டுத்தீயாய் இருக்குமென
அவ்வப்போது உணருவேன்
என் பக்கம் திரும்பும் போதெல்லாம்.
அவளுக்கு பாடல் பிடிக்குமா
எனத் தெரியாது,
மனதுக்குள் முனகினாலும்
சட்டெனத் திரும்புவாள்
தான் ரசித்ததையும் காட்டிக்கொள்ளாமல்..
அவளுக்கு என் முகம் தெரியுமென்பது
அடிக்கடி முகமூடி கிழிக்கும்
எனக்கும் தெரியும்,
அழைப்பது போல
அலைவரிசை காட்டிவிட்டு
தொலைவில் நின்று விலகுவாள்.
அவளின் உள்ளுணர்வு நூலில்
ஊஞ்சல் கட்டி
ஆடத் தெரிந்த எனக்கு,
அவளின் மனதைக் கட்டியிழுக்க
காரணக் கயிறு கிடைக்கவில்லை.
நிறுத்தம் வந்தது
அவளும் இறங்கிச் சென்றுவிட்டாள்,
ஆனாலும்,
அவள் கண்கள்
இன்னும் இறங்கவிடவில்லை
அடுத்த நிறுத்தம் வரை...
30 September 2015
உடைஞ்சு போச்சு.! -Mano Red
களிமண்ணாக இருந்தாலும்
கடும் தவமிருந்தே,
குழந்தைகளின் கையால்
உடைந்து போவதற்காக
பிறக்கின்றன பொம்மைகள்.!
உடைந்த சத்தத்துக்கும்
சத்தம் கேட்டு ஓடி வரும்
பெரியவர்களின் திட்டுதலுக்கும்
இடையில் இருக்கிற - மௌனத்தின்
இடைவெளியில் அழகாக
தப்பி விடுவார்கள் குழந்தைகள்.
தப்பிக்க அவர்கள் இயற்றும்
வாக்கியங்கள் ஒவ்வொன்றும்
அத்தனை சாதாரணமல்ல,
பொம்மைக்கு கிடைக்கும்
சாப விமோசன மந்திரங்கள்.!
பொம்மைதான் குழந்தையா?
குழந்தைதான் பொம்மையா என்பது
உடைதலின் தன்மை சார்ந்தது.
பொம்மைக்கு ஆயுள் குறைவு
என்பதனால்
குழந்தையாகவே இருக்கின்றன.!
கை தவறி விழுந்திருந்தாலும்
”நான் ஒன்னும் செய்யல
அதுவா விழுந்து உடைஞ்சு போச்சு” - என்ற
குழந்தையின் குற்றச் சாட்டலில்
பொம்மை இப்போது
சொர்க்கம் சேர்ந்திருக்கும்.!