www.gamblinginsider.ca

24 October 2015

அவள் ஆடை ரத்தம்...! - Mano Red



அந்த நாட்களின் கொடுமை
அவளையும் விடவில்லை,
முள் மீது படுத்தவளாய்
முழுங்க முடியாத எச்சிலுடன்
முனகிக் கொண்டிருந்தாள்.

உடலும் மனமும்
வலியுடன்
பேசிக் கொண்டிருப்பதால்
யாருடனும் பேச மனமின்றி
சுருண்டு கிடந்தாள்.

உணவு கொள்ளவில்லை,
நடக்கத் தெம்பில்லை,
உயிர் அத்தனையும் சுருக்கி
ஒரு புள்ளியில்
நிறுத்தி
வெறுத்து அமர்ந்திருந்தாள்.

அவள் உடலின் மேல்
போர்த்தப்பட்டிருக்கும்
பெண் என்பவளை,
சமுதாயமும்
ஆணாதிக்கக் கற்பிதங்களும்
அன்றுவரை தீட்டாகவே எண்ணி
அருவெறுத்து ஒதுக்கியிருந்தது.

அவள் ஆடை படியும் ரத்தம்
அசுத்தமானது அல்ல,
மனித உடல் கிழித்த
ரத்தம் போல் தூய்மையானது.
தீட்டானவளைத் தெய்வமாக்கும்
கருவின் ஆரம்பம் இது.

அவளுக்கான உலகம் அன்று
உளறிக் கொட்டினாலும்
அவளுக்கான நாட்கள் அன்று
நகர மறுத்தாலும்
அவளுக்கான நிமிடம் அன்று
நின்று எரிந்தாலும்
அவளுக்காக அவள் மட்டும்
அத்தனையும் தாங்கினாள்
பெண்ணாக இருப்பதால்....