உணர்ச்சி
இன்னும் இருப்பதாலென்னவோ!
தரையில்
அமர்ந்து கால்களை நீட்டி
ஒரு கால்
மேல் இன்னொரு கால் போட்டு
அவளுக்கே
உரிய தோரணையில்,
கிளம்புவதற்குத்
தயாராகும் என்னை
வைத்த
கண் வாங்காமல்
பார்த்துக்
கொண்டிருந்தாள் பாட்டி.
”போய்ட்டு
வரேன் பாட்டி” என்று
சொல்வதற்காவது
தன்னுடன் பேசமாட்டானா?
என்ற அவளின்
எதிர்பார்ப்பை
நானும்
புறக்கணிக்கத் தவறவில்லை.
பேசாமல்
அவமதித்து வந்த காரணம்
சொத்து
தகறாரோ அல்லது
செத்துப்
போகாமல் இருக்கிறாளே என்ற
வெறுப்பிலோ
வந்ததல்ல.
அவள் கிழவி,
நான் இளைஞன்
என்பதால்
வந்தது.
அவளுடனான
என் மௌனங்கள்
அர்த்தமற்றே
கிடந்தது!
அவளின்
முதுமையை விட
என் இளமையின்
ஆணவம்
இன்னும்
அதிகமாகவே நரைத்திருந்தது.
சிறு வயதில்,
பாட்டி கதை சொல்லி
தூங்க
வைத்ததாய் ஞாபகம்.
நான்தான்
இன்னும்
தூக்கத்திலிருந்து
எழவில்லை
என்றுணர்ந்த
போது, பஸ்ஸில்
என்னருகில்
நின்ற முழு மூதாட்டிக்கு
சீட் தருவதற்காக
எழுந்து
ஆத்ம திருப்தியை
ஓரிரு
வார்த்தைகளுக்குள் அடக்கி
கண் துடைத்து
நின்றேன்.