ஆடையெல்லாம் சிறுநீர் கழித்து
நடக்க முடியாத
முதிர் பருவ நிலையில்
அவர் கிடந்தார்.
மகனின் சிறுநீரை
நெஞ்சில் சுமந்தவருக்கு
நெருஞ்சி முள்ளாய் மருமகள்.
குத்துவதற்கு மாறாக தினம்
குத்திக் குத்திக் காட்டுவாள்
மாமனார் என்பதால்.
துணி மாற்றவும்
துணைக்குப் பேசவும்
ஆளில்லாத அந்நிலையை,
சிறுநீர் நாற்றமே
சிறுகதையாய் வடித்திருக்கும்.
முயன்று தோற்றதின் வலியை
மூன்று முறை அறிந்திருந்தார்.
ஒருமுறை விசத்திலும்
மறுமுறை தீக்குளித்தும்
இறுதி முறை தள்ளாடும் வயதிலும்.
நான்காவது முயற்சியை
எவனும் எடுக்கவில்லை,
உரிமையுடன்
எமனே எடுத்துக் கொண்டான்,
முக்கல் முனகலுடன்
மூச்சு பெரிதாய் இழுத்து நிற்க
இரவிலேயே இழவு விழுந்தது.
ஊர்கூடி அடக்கிய பின்
இன்னும் அழுது தீர்க்காத மருமகள் மீதும்,
வீட்டின் மூலையில் அவருக்காக
குவித்து வைக்கப்பட்டிருந்த
கோடித்துணிகள் மீதும்
வெறும் ஈக்கள் மட்டுமே
மொய்த்துக் கொண்டிருந்தன.