www.gamblinginsider.ca

30 January 2015

இப்படியும் கவிதை எழுதலாம்…!!! - Mano Red

எதை வேண்டுமானாலும்
எப்படியும் யோசிக்கலாம்,
கிடைக்கின்ற வார்த்தைகள்
மறுபடியும் கிடைக்காது,
கிடைக்கும் போதே
கவர்ந்து கைது செய்து
கவிதையாக்க வேண்டும்…!

பார்வைகள் பலவிதம்
பார்க்கப்படும் விதத்தில் தான்
பக்குவம் இருக்கிறது,
ஒன்றை இன்னொன்றாக
வேறுவிதத்தில் பாருங்கள்,
கோமாளியாக தெரிந்தாலும்
கோணம் வேறாக இருக்கும்…!!

அக்கம் பக்கங்களை
காதை தீட்டிக் கேளுங்கள்,
அதிகம் பேசாமல்
மனசுக்குள் பேசுங்கள்,
நிச்சயம் உள்ளுக்குள் எதுவோ
கவிதை தீட்டிக் கொண்டிருக்கும்..!!

கவிதையைத் தேட
நேர்வழியும் வேண்டாம்,
குறுக்கு வழியும் வேண்டாம்,
வழிதெரியாமல்
சுற்றிச் சுற்றி வாருங்கள்
கவிதைக்கான நிறைய வழிகள்
வலியிலிருந்து தெரியும்…!!
,
ஒரு புள்ளியை சுற்றி எழுதுவதை விட
ஒரு புள்ளியைப் பற்றி
கவிதை எழுதப் பழக வேண்டும்,
புதைந்து தான் கிடக்கிறது
அங்கங்கே தோண்டுங்கள்,
அழுக்குகள் மட்டுமல்ல
அதிசயங்களும் தோன்றும்…!!

சொந்தமானவர்களுக்கு
சொந்த வரிகள்
அழகாகத்தான் தெரியும்,
அழகைப் பார்க்காமல்
படிக்கும் யாவரையும்
அழாமல் பார்த்துக் கொள்வதில் தான்
கவிஞன் காலூன்றி நிற்கிறான்..!!

மொத்தத்தில்
காதலித்தால் மட்டுமல்ல,
கழுதை மேய்த்தாலும்
கவிதை வரும்…!!!
புண்படுத்தவே
இங்கே காதலின் தரம் தாழ்த்தி
கழுதையை உயர்த்திப் பேசுகிறேன்
காதலை விட கழுதை எவ்வளவோ மேல்…!!

28 January 2015

உள்ளூர் கோடாங்கி...!! - Mano Red

ஆடிய நிலையில்
அதிரப் பேசிக் கொண்டிருந்தான்
அவன்...!!
அவன் மேல் யாரோ
அமர்ந்து இயக்குவதாக
அரங்கேற்றினான் நாடகத்தை..!!

கூட்டம் கூட்டமாக
குறைகளை கேட்டபின்
குறி சொல்ல ஆரம்பித்தான்,
வெற்றிலை தடவியும்
வேப்பிலை அடித்தும்
ஆவேச குரல் எழுப்பினான்..!!

வரதட்சணை கொடுமையில்
தாய் வீடு வந்தவளின் கையில்
எலுமிச்சை பழம் திணித்து
தலையணை கீழே வைத்து
தனியே உறங்கச் சொல்லி,
ஐம்பத்து ஒரு ரூபாய்
புடுங்கிக் கொண்டான்...!!

பாட்டியுடன் வந்திருந்தான்
படிப்பு வராத சிறுவன்,
பயத்துடன் நெருங்கியவனை
நெற்றியில் திருநீறு வைத்து
இனி நன்றாக படிப்பான்
போய் வாருங்கள் என்கிறான்
பள்ளிக்கூடம் ஒதுங்காத
உள்ளூர் கோடாங்கி அவன்...!!

பருவப் பெண் அவள் மேல்
கன்னிப்பேய் இறங்கியுள்ளதாம்,
சாட்டை அடித்தும்,
பழுக்கச் சூடு போட்டும்,
விரட்டுகிறானாம்
இருட்டில் நிழல் பார்த்து
பயம் கொள்ளும் அவன்...!!

ஊரும் ஊராரும்
சுகமாய் வாழ
காலில் செருப்பின்றி
உணவின்றி விரதமிருந்து
சாமி ஆடுகிறானாம்,
தினமும் தவறாமல்
சாராயக்கடை தேடும் அவன்..!!

25 January 2015

மூங்கில் யாத்திரை…!!!- Mano Red



முச்சந்தியில்
ஒப்பாரியுடன் தொடங்கியது
மூங்கில் யாத்திரை,
சுற்றிலும் தலை கவிழ்ந்தே
சுற்றங்கள் வந்தாலும்
வானம் பார்த்தே அது சென்றது…!!

அழுகைகளும்,
அலறல் கதறல்களும்
அதிகமாய் இருந்தாலும்,
அவர் காடு சென்றதும்
அவ்வீடு கழுவப்பட்டதில்
அவர் ஆனார் அதுவாக…!!!

அதுவான அவர்
தெரு கடக்கையில்
நடைபாதை தடமெல்லாம்
பிரதியெடுத்தன
அவரின் வாழ்நாட்களை…!!
சிதறி ஓடியது அவரின்
புறம் மட்டுமல்ல அகமும் தான்…!!!

நான்கு பேர் அல்ல,
நாற்பது பேர் வந்தாலும்
சுமக்கப் போவது
வெற்றுடலை மட்டுமே..!!
ஆனால் அவ்வுடல் சுமப்பதோ
பாவ புண்ணியங்களின்
மூட்டை முடிச்சுக்களை…!!

அண்ணாந்து பார்த்தலின்
கடைசி ஆசைப்படி,
பொத்தல் விழுந்த
போர்வைத் துணியுடன்
ஒத்தை உடல்
வித்தை ஏதும் காட்டாமல்
அந்தரம் பார்த்தபடி வருகிறது..!!

உயிருக்கு இல்லாத
மாலை மரியாதைகள்
உடலுக்கு கிடைத்தது..!!
புதிய புகழின் போதை
தலைக்கேறும் முன்பே
உப்பு சப்பில்லா உடல்
உலைக்கு ஏற்றப்பட்டது..!!

உயிர் பிரிந்து
ஊசலாடும் உடல்,
உடன்கட்டை இழந்து
உலகம் துறக்கும் நேரத்தில்
உணர்ந்து கொண்டது,
உலர்ந்து தளர்ந்து போனது
உடல் மட்டுமல்ல…!!

22 January 2015

துன்பப் பனிக்காலம்…!!-Mano Red

அது ஒரு
துன்பப் பனிக்காலம்,
சொல்ல வேண்டியதாயினும்
சொல்ல முடியவில்லை…!!
பார்த்தவுடன் பயம் கொள்கிற
பாழடைந்த நேரம்..!!
மீள் சறுக்கலில்
சுழல் நினைவுகளுடன்,
மீட்சி பெற
முனைப்புடன்
வந்து அமர்கிறது
ஒரு அனாதை நினைவு…!!
அவிழா முடிச்சுகளுடன்
ஆங்காங்கே சில
மயிர் நுனி அளவு
பிரச்சினைகளின்
பிம்பங்களை
பெரிதாக தனதாக்கி
தடுமாறி நின்றது அந்நினைவு…!!
கோபுர அளவு
கோபங்கள் கொண்டு,
சினைமுட்டை அளவே
சந்தோசத்தின்
சலுகை பெற்றிருந்தது போல
பாவமாய் தெரிந்தது..!!
குளிருக்காக அல்ல
வேறு எதற்கோ
கூனிக்குறுகியது,
கதகதப்பிலும்
காந்தல் வெப்பமேறி
வெடித்து சிதற விரைந்தது..!!
தனிமையும் ஒரு காரணமாம்,
நூலாம்படையின்
நுண்ணிய வெளிச்சத்தில்
சிலந்தி கூட
அதன் துணையில்லையாம்,
வெறிக்கப் பார்த்துவிட்டு
வெறுமையாய் புலம்பியது…!!
அதற்கு என்ன தெரியும்..?
சுயமில்லாத
நினைவு சுவற்றில்
சுண்ணாம்பு பூசினாலும்,
கருப்பு நிறம் மட்டுமே
கனலாய் கசியும்..!!

21 January 2015

கசாப்புக் கடை...!!Mano Red

அவர்களைத் தவிர
கூராகத் தான் இருந்தது
அங்கிருந்த அத்தனை கத்திகளும்..!!
கவிச்சி நாற்றம் அங்கு மட்டுமல்ல
அங்கு வந்திருந்த
அத்தனை மனதிலும்..!!

சொட்டுவிடாமல் இரத்தத்தை
பாத்திரம் நிரப்பிய
அவனைப் பார்க்கையில்,
இன இரத்தம் குடித்த
சர்வாதிகாரிகளின் சாயல்
வந்து வந்து போயிருந்தது...!!

கொன்றால் பாவம்
தின்றால் போய்விடுமென
நியாயம் பேசுகிறான்,
இரக்கமற்றவர்களின்
இறைத் தூதுவனாக
இவனையே நியமிக்கலாம்...!

அவனும் நிச்சயம் சொத்துக்காக
குடும்ப உறவை
பங்கு போட்டிருப்பான்,
பக்குவம் தெரிந்தது
பாகம் பாகமாய்
பங்கு வைக்க
கை நடுங்காமல் அவனிருந்தது..!!

மனித இன அநீதிகளுக்கு எதிராக
குரல் கொடுத்த
தலைவனின் நாக்கு
சுவைக்காக அலையும் போது,
இன்னொரு இனத்தின்
நாக்கு அங்கே பிடுங்கப்பட்டிருந்தது..!!

தூக்குவாளி ஏந்தி
காத்துக் கொண்டிருக்கும்
மனித மிருகங்களுக்கு
என்ன கவலை...??
தூக்கில் ஏற்றப்பட்டது
வாய் பேசாத இனம் தானே..!!

வைட்டமின் சத்துக்காக
இன்னொரு இனத்தின்
வயிற்றில் அடித்து
வயிறை நிரப்பும் முன்,
ஈவு இரக்கங்களைப் பற்றி
தயவுசெய்து யாரும் பேசி
காலம் கழிக்க வேண்டாம்...!

20 January 2015

கொடுத்து வைக்காதவள்...!! -Mano Red



கல்யாணமாகி ஆறு வருசம்…!!!!
வயித்துல ஒரு புழுபூச்சியில்ல
இதுதான் இப்ப நெசம்…!!
புள்ள பெறக்க வழியில்ல
எனக்கு நல்ல வாழ்வில்ல,
எம்பொழப்பு சிரிப்பா சிரிக்குதே
நான் மட்டும் அழுகுறேனே…??

ஊரே கூடி பேசுச்சு
நான் கவலப்படல,
சொந்த உறவும் இப்படி பேசுதே
நான் இப்ப என்ன சொல்ல…??
சின்ன வயசு பொம்ம விளையாட்டுல
பத்து புள்ள எனக்கு,
யாரு கண்ணு வச்சதோ
பேரு சொல்ல ஒத்த புள்ள இல்ல….!!!

வாசமில்லா பூ என்னய
வாசலில எறிஞ்சுட்டாங்க,
விதையில்லா பழம் என்னய
வீதியில நட்டுட்டாங்க,
ரோசப்பட்டு என்ன செய்ய
தாலி நெறமோ மாறிடுச்சு,
வச்ச பூவும் வாடிருச்சு,
நல்ல சேதிதான் எப்ப வருமோ..??

காந்தாரி கதையும் தெரியும்,
குந்தி கதையும் தெரியும்,
என் கதை யாருக்கு புரியும்..??
சாமியே வந்தாலும்
தவமிருக்க தகுதியில்ல,
ஏழப்பட்ட பொண்ணுக்கு
வரம் கொடுக்க யாருமில்ல….??

ஆம்பள அவுகள
குறை சொல்ல முடியாதே,
பொம்பள புத்திக்கு ஒழுங்கா
பதில் சொல்ல தெரியாதே..!!
பாக்கலாம் அடுத்த வருசம்
எனக்கும் ஆசயிருக்கு
சொமக்கணும் பத்து மாசம்…!!!

அரசமரம் சுத்தியாச்சு,
ஆத்தாளுக்கு கூழ் ஊத்தியாச்சு,
ஆனாலும் லாபமில்ல
பரம்பர மானமும் பழிக்கு தப்பவில்ல
அனாத புள்ள எடுத்து வளர்க்க
அதிகாரம் எனக்கில்ல,
கொடுத்து வைக்காதவ நான் தானே
யாரத்தான் குத்தம் சொல்ல…???


12 January 2015

கொண்டையில் தாழம்பூ...!!!-Mano Red

கொசுக்கடிச்சாலும் பரவால்ல,
கோனார் கடை
கொசுவத்தி சுருளுக்கு
மணிக்கணக்கா காத்துக் கெடப்பேன்,
ஏன்னா கண்மை வாங்க
அவ அங்க தான வரணும்..!!

சேறு தெறிச்ச சட்டயோட
கால்ல முள்ளு தைக்க
வாய்க்கா வரப்புல ஓடி
மரத்துக்கு பின்னால ஒளிஞ்சு
கண்டும் காணாம நானிருப்பேன்,
ஏன்னா அங்க தான
அவ குளிக்க வரணும்...!!

அர்ச்சனை தட்டு கையில இல்ல,
கோயிலுக்குள்ள
போக தகுதியில்ல,
உயர் சாதி சாமி கும்பிட
எனக்கு கொடுத்தும் வைக்கல,
இப்போ நான் அதிகமா பேசவும் இல்ல,
இருந்தாலும் அவள பாக்க
காத்துக் கெடக்கேன்,
ஏன்னா சாமி கும்பிட
அவ அங்க தான வரணும்..!!

மொதலாளி வீட்டு பொன்னு மேல
தூரத்துல இருந்து ஆசப்படலாம்,
அவ கொண்டையில தாழம்பூ
கனவுல தான் வைக்கலாம்,
சோத்துக்கு வழி இல்லாதவன்
சொர்க்கத்துக்கு போக நெனச்சா
ஊர் சிரிக்குமா..?? இல்ல
ஊர் கூடி வழி அனுப்பி வைக்குமா..?

காதல் வந்து என்ன பண்ண..!!
பகுத்தறிவு பஞ்சத்துல
காதல் நோய் பிழைப்பதில்ல,
ஒருவேள சொன்னாலும்
தொடக்கூடாத சாதின்னு
ஊரவிட்டு தள்ளி வைக்கலாம்,
தொட்டா தீட்டுன்னு
தீ வச்சு பொசுக்கலாம்,
செருப்பு போடாத ஜென்மம்ன்னு
மொகம் சுழிச்சு பேசலாம்..!!

காதலுக்கு கண்,காது ,மூக்கு இல்ல,
இப்படி வக்கணையா பேச
எனக்கும் தெரியும்...!!
சாக்கடைல விழுந்தாலும்
காதலுக்கு சாதி இருக்கு,
மானமே போனாலும்
உயர்வு தாழ்வு இருக்கு,
இப்படி சொல்ற கூட்டத்துல
கடைக்கண் காதல் பத்தி சொன்னா
கேனப்பய இவன்னு
கைகொட்டி தான் சிரிப்பாங்க ..!

11 January 2015

என்னத்த கிழிச்சுட்ட....!!-Mano Red



அந்நாள் அரிதினும் அரிது,
தன்னிலை திரிதலில் 
அடுக்கடுக்காய் ஐம்புலம் சலித்து
மன்னவனின் மனம் ஒப்ப
நிழல் சரியப் பணிந்து 
விழி நுண் கூடலில் காத்து கிடந்தோம்..!!

அய்யயோ போதும் போதும்
என்ன வார்த்தை இது,
கவிதையா இது..??
ஆமா கவிதை தான் இது..!!
என்னமோ சொல்றீங்க...
எல்லாமே சரி அந்த 
மானே தேனே பொன்மானே காணோமே..!!

கோட்டை கொத்தளமும்
வேட்டை உணவும் 
புணர்தலும் போக 
எஞ்சிய பொழுதுகளில்
பாடிக் குலவி விஞ்சிய 
கார்காலக் காலம் அது...!!
கொற்றவன் முதல் 
குறவன் வரை கூத்தாடி மகிழ்ந்தனர்..!!

இது கொஞ்சம் பரவாயில்லை 
கெட்ட வார்த்தை மாதிரி இல்ல
இருந்தாலும் எதோ புரில,
நாங்கலாம் இந்தக் காலம்
சும்மா இப்படி பொலம்பாம
வேற எதாவது சொல்லு..!

வேல்தமிழ், வெல்தமிழ்
பண்புத்தமிழ் ,புறத்தமிழ்
மழைத்தமிழ்,நிலாத்தமிழ்
புலித்தமிழ் ,புலத்தமிழ்
கனித்தமிழ்,அறிவுத்ததமிழ்
படைத்தமிழ்,பாய்ச்சல்தமிழ்
வாகைத்தமிழ்,வேங்கைத்தமிழ்
குடைத்தமிழ்,கொஞ்சுதமிழ்
ஈரத்தமிழ்,ஈழத்தமிழ்
புரட்சித்தமிழ்,பிஞ்சுதமிழ்
தங்கத்தமிழ்,பொங்குதமிழ்
மழலைத்தமிழ்,காதல்தமிழ்
வண்ணத்தமிழ்,வள்ளுவத்தமிழ்
மானத்தமிழ்,அன்புத்தமிழ்
இசைத்தமிழ்,கன்னித்தமிழ்
அன்புத்தமிழ்,ஔவைத்தமிழ்...!!

ஆ......!!
என்னய்யா தமிழ் இது
அழகா இருக்கே...!
மூச்சுவிடாம சொல்ற,
இத்தனை தமிழ் இருக்கா..??
ஆமா இவ்ளோ தமிழ் பேசுற நீ 
தமிழுக்காக 
என்னத்த கிழிச்சுட்ட...!!?

08 January 2015

இறைவன் திருவிளையாடல்...!! - Mano Red

பரபரப்பான நகரம் அது,
காட்டும் வரை
பல்லை காட்டிவிட்டு
விளக்கு அணைக்கும் நேரம்
வாய் மூடத் துவங்கியதில்
ஓசை அடக்கியது..!!

மூடப்படும்
ஒரு ரயில் நிலையத்தின்
ஆளற்ற படிக்கட்டில்,
இனிமேல் கையாளாகதவரென
மகன்களால் ஒதுக்கப்பட்ட,
கையில்லாத ஒருவர்
தன்னம்பிக்கையுடன்
காசை எண்ணிக் கொண்டிருந்தார்..,!!

வசதியான வீட்டிலிருந்து
விரட்டப்பட்டிருக்கும் போல,
தயங்கித் தயங்கி
தண்டவாளங்களில்
சிதறிக்கிடந்த சிதறல்களை
முகர்ந்து பார்த்து
முகம் சுழித்து முடியாமல்
நகர்ந்தது அந்த வெளிநாட்டு நாய்...!!

வீட்டை விட்டு
திருட்டுத் தனமாக ஓடி
வந்திருக்க வேண்டும் அவன்,
வினோதமாய் அவனை
வேடிக்கை பார்க்கக்கூட
ஆள் யாரும் அங்கில்லை,
துயரத்தை பகிர வழியின்றி
துவண்டு நின்று
கண்ணீரில் தன்னை
தணித்துக் கொண்டிருந்தான்..!!

இதற்கு மேலும்
யாரும் வாங்க போவதில்லை,
காய்ந்தாலும் பரவாயில்லை,
விற்காத பழச் சுமையை
யாருக்காகவோ நாளை வரை
சுமந்து கடக்க
தயாராகிவிட்டாள் பழக்காரி..!!

அங்கு
காசை எண்ணியவருக்கு
பணக்கார நாயைத் தெரியாது,
ஓடி வந்த அவன் கவலை
பழக்காரிக்கு புரியாது..!!
சத்தியமாக நாயால்
பழம் வாங்கவும் முடியாது.. !!
யாருக்காகவும் பயன்படாத
தருணம் தான் அது...!!

இதுவும் அவன் திருவிளையாடலில்
ஒரு விளையாடல் தானோ...??
இறைவனின் இயந்திரம் பழுதாகி
இவர்களை வைத்து
தன் தவறை திருத்துகிறான் போல
என்றெண்ணியபடி
பயணச்சீட்டை கிழித்து விட்டு
நடந்து செல்கிறேன் நான்.. !!

06 January 2015

உடல் விற்பவள்...!! - Mano Red

அது விசித்திரமான
தொழில் தான்,
அவளும் ஒரு சித்திரம் தான்..!!
பழக்கப்பட்ட அவளும்
கண்ணீர் சிந்தியிருப்பாள்,
கசங்கிய ரூபாய்க்குள்
கதைகள் ஆயிரம் வைத்திருப்பாள்..!!

கேடு கெட்டவர்களின் முன்
கொஞ்சம் விசேஷமானவள் அவள்..!!
அவள் தெருக்களில் சுற்றியே
வாய்ப்பைக் கவர்கிறாள்,
அவள் எங்கோ இருந்துகொண்டே
தன்னைக் கூவி விற்கிறாள்,
இன்னும் அவள் வேறு எங்கெங்கோ
காத்துக் கிடக்கிறாள்...!!

அவளை வசைபாடும்
உங்களில் யார்தான்
யோக்கியம் இங்கே...??
உடலை விற்பதும்
ஒரு கலைதான் என்பதோடு
சிரமமானதும் கூட...
ஆச்சரியம் தருகிறது
அவள் எப்படி கவர்கிறாள்..!!

நன்றாக இருக்கிறது
நாசமாப்போன நீதி,நியாயங்கள்....
ஆணுக்கும் பெண்ணுக்கும்
கற்பு பொதுவென்று
கற்பித்தான் மீசைக்காரன்,
அது நியாயமெனில்
அவள் மட்டுமா முறை தவறியவள்..??

நல்லவனே நீ கொஞ்சம்
வாயை மூடு,
சத்தியம் செய்யலாம்
அவளாக வந்திருக்க மாட்டாள்..!!
யாரோ ஒருவன் அவளை
காதல் ஆசை அது இது என
மோசம் செய்திருப்பான்,
யாரோ ஒருவன் அவளை
கடத்திச் சென்று
ஏமாற்றி விற்று இருப்பான்..!!

ருத்திராட்ச பூனைகளுக்கு
எங்கே தெரியும்..?
அவள் இளமையானவளும் அல்ல,
வயதானவளும் அல்ல,
ஆனால் வெளிப்படையானவள்...
அவள் மரக்கிளையும் அல்ல,
மரத்தண்டும் அல்ல,
ஆனால் மரத்துப் போனவள்...

எப்படிச் சொல்லி முடிப்பது..?
தேம்பித் தேம்பி அழுது
சாயம் போன அவளின்
கண்ணீரின் நாட்களை
முற்றுப் புள்ளி வைக்கத் தெரியாமலே
முடிக்கப் போகிறேன்,
அவளாவது தொடர்கதையாகாமல்
விரைவில் முடியட்டும்,
அவளுக்கும்
மெல்லிய இதயம் இருக்குமே...!!

04 January 2015

வீட்டின் மரணம்...!! -Mano Red



காலத்தின் புழுதியை 
சுவர்களில் அப்பிக்கொண்டு
நெடுநாட்களாக
ஊரை விட்டுத் தள்ளி 
வாழ்ந்து கொண்டிருக்கிறது 
அந்த வீடு...!!

கடந்த காலத்தில்
ஒரு ஓரமாய் அங்கே 
குழந்தை அழுதிருக்கலாம்,
உறவுச் சண்டைகள் 
அரங்கேறியிருக்கலாம்,
அதெல்லாம் அந்த 
வயதான தூண்களுக்குத் தான் தெரியும்..!!

நாட்கள் செல்லச் செல்ல
துரத்தப்பட்ட நாய்களின் 
கூடாரமாகவும்,
நடைபாதையின் நிழலாகவும்,
அதற்குப் பின்
அவசரத்துக்கு ஒதுங்கும் 
மறைவிடமாகவும் மாறி 
மங்கி விட்டது 
ஒரு தலைமுறையின் அழகு வீடு..!!

கரித்துண்டுகளில்
கிறுக்கப்பட்ட 
ஊருக்கு சொல்லாத 
காதல்களை எல்லாம்  
ஊமையாய் சுமந்து,
அழைப்பிதழில் சேருவார்கள் என்று
இன்னும் நம்புகிறது அந்த வீடு..!

ஊரை அடையாளம் சொல்ல 
வழிகாட்டியாய் அவ்வீடு 
மாறிப்போயிருந்தாலும்,
ஆளாளுக்கு
ஒரு கதை சொல்லியதில்
அந்த வீடு 
பேய்களின் உறைவிடமானது..!!

இப்போதெல்லாம் 
அந்த வீட்டின் பக்கம்
ஒரு ஈ,காக்கா கூட காணவில்லை,
துக்கம் விசாரிக்க 
ஒரு சருகு கூட 
உள்ளே செல்வதில்லை,
காற்றும் திரும்பி வருகிறது
அங்கு வரவேற்கவும் யாருமில்லை..!!

உயிர்களின் மரணம் போன்றே
வீட்டின் மரணமும் 
துயரமாகத்தான் இருக்கிறது,
துயரப்பட்டு என்ன செய்ய 
புரிந்து வாழ பழகத்தான் 
மனம் மறுக்கிறது...!!

02 January 2015

பசி மொழி...!! - Mano Red

பசிதான் மானுடத்தின்
சரளமான பொது மொழி,
இது வெற்று வயிறு சுமக்கும்
பாறை சூழ் வெட்டவெளி...!

பசி... சோழ நாட்டு விவசாயியை
சோறில்லாமல்
தவிக்க விடுகிறது,
காடு மேட்டில் வாழ்ந்தவனை
கண்ணீர் விட வைத்தே
தற்கொலைக்கு தூண்டுகிறது..!

பசி..
காலத்தையும்,கோலத்தையும்
அரித்துக் கொண்டு ,
அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே
ஊர்ந்து கொண்டே இருக்கும்
நிதர்சனக் கரைப்பான்...!!

மானுடத்தின் பொது மொழி
பசி என்றால்,
பசியின் பொதுமொழி
கண்ணீர் தான்..!!
ஒவ்வொரு உயிரும் பசியை
உலகுக்கு அறிவித்தே பிறக்கிறது..!!

குழந்தையின் பசியை உணர்ந்து
தூக்கம் விழிக்கும்
தாய்மையின் கருணையில்
தொடங்குகிறது
ஒவ்வொருக்கான உலகமும்,
ஆனாலும் பிறர் பசியை
பலர் உணர மறுக்கிறோம்...?

உலகச் சிறப்பு பெற்ற
புகைப்படமாம் அது..!
பசியில் சாகக் கிடக்கும்
குழந்தையைத் தின்ன
காத்துக் கிடக்கும் கழுகு..!
இதில் பசி என்பது
இருவருக்குமான சாபமாகும்..!!

உலகின் ஆதி இனம்....
விதைத்து,அறுத்து,
உழைத்துத் தின்னும்
கலாச்சாரம் உருவாக்கிய இனத்தை,
முள்வேலி முகாம்களிலும்,
வதை கூடங்களிலும்,
நிலமற்ற துயர பரப்புகளிலும்
அலையவைத்த பசி கொடுமையை
எந்த சாபம் தண்டிக்கப்போகிறது..?