www.gamblinginsider.ca

30 July 2016

வெஸ்டர்ன் டாய்லெட்! - Mano Red


விடிந்தும் விடியாத பொழுதுகளில்
காலைக் கடன் கழிக்க
மறைவிடம் தேடி ஓடும்
எம் ஊர்க்காரர்களில்,
மேற்கத்திய கலாசாரம்
அனுபவிக்கும்
முதல் தலைமுறையாகிய நாங்கள்
ஒவ்வொருமுறை கழிவுகளை
ஃப்ளஷ் செய்யும்போதும்
பரம்பரை நினைவுகளை
படிமங்களாக்கப் பழகிக்கொள்கிறோம்.

மிஞ்சி இருப்பது... Mano Red


அந்த மிருகத்திடம் 
இன்றும் தோல்விதான்.
நாய் உறங்கி நரி உறங்கி
ஊர் உறங்கியும்
உறங்காத உள்ளத்திற்குள்
கூடுவிட்டுக் கூடு பாய
இருட்டுக்குள் தவழ்ந்து வந்தது.
அனுமதி கேட்காமல்
அதிரப் புகுந்து
மாயத்திரையால்
நிஜத்தை மறைத்து
யுத்தம் தொடங்கியது.
எல்லாம் முடிந்தும்
மிஞ்சி இருக்கும் தனிமையை
பந்தயப் பொருளாக்கி
அது ஆடிய சூதாட்டத்தில்
உயிரைப் பணயம் கேட்ட
அந்த வசியக் குரல் மட்டும்
இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

காதல் கொஞ்சம் தூக்கல்! -Mano Red


என் காதல் வரிகளெல்லாம்
அழத் தெரிந்தவை
காத்திருந்தே
கண்ணீரைத் தத்தெடுத்தவை.
பேனா பிடித்தெழுதுகையில்
நகக் கண்ணில் நுழைந்து
அகக் கண்ணைத் துளைப்பதுபோல
வலி மிகுந்தவை.
இது போன்ற வேதனைகளின்
வேர் நுனியிலிருந்து
உருவிய வரிகளை
வடிகட்டித்தான்
பலமுறை உன் இதயத்தின்
நாக்கை நனைத்திருக்கிறேன்.
படித்து முடித்த பிறகு
“இன்னும் கொஞ்சம் காதல் ரசம்
தூக்கலாக இருந்தால்
நன்றாக இருக்குமே” என்று
நீ சொல்லும்போதெல்லாம்
‘ரத்தம் பிழிந்தே வரிகளை
வார்த்திருக்கிறேன்
முகர்ந்து பார்’ என்று சொல்லி
உன்னை அழ வைக்க
இன்னொரு இதயம் வேண்டுமடி! 

ஆதார் கார்டிலும் அழகி! - Mano Red


அவள் அணிந்துவரும் 
ஆடை நிறம் பொருத்து
கண்களின் நிறம் மாறுவதால்
நம்புங்கள் அவள் அழகியென.
தந்தையின் விரல் பிடித்து
அதிகம் நடந்தவள்போலும்
வேடிக்கை பார்க்கும் அழகின்
ஒரு ஓர விளிம்பில்
நம்பச் செய்வாள் அழகியென.
பார்க்காதபோது பார்க்கும் கள்ளப்பார்வையை
காட்சிப்பிழையுடன் சேர்க்காமலிருந்தால்
நம்பிவிடுவீர்கள் அவள் அழகியென.
ஒப்பனைகள் இல்லாத அழகுடன்
ஏதோ ஒப்பந்தம் செய்திருக்கிறாள்
திகைத்தபின் நிச்சயமாக நம்புவீர்கள் அவள் அழகியென.
எல்லாவற்றையும் விட
ஆதார் கார்டிலும் அழகாக இருப்பவளை
எப்படி நம்பாமல் போவீர்கள் அழகியென!

13 July 2016

கார்பைடு கல்லாக மாறிய தொழில்நுட்பம்!



"உலகம் முழுவதும் வயர்லெஸ் வசதி நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவொரு மூளையைப் போல செயல்பட ஆரம்பிக்கும். அப்போது நடைமுறைகள் அனைத்துமே நிஜத்தின் ஒருமித்த நிலையின் துகள்களாகச் செயல்படும்" இதைக் கூறியவர் அமெரிக்காவில் தற்போது தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் யாரோ ஒரு ஹைடெக் விஞ்ஞானி அல்ல. தொழில்நுட்பம் தவழத் தொடங்கிய காலத்தில் மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் புரட்சி செய்த நிக்கோலா டெஸ்லா. அவர் 1926ஆம் ஆண்டிலேயே இப்போது நடக்கும் நிகழ்வுகளைக் கூறியிருந்தார்! இது ஆச்சரியமாக இருந்தாலும் அவர் ஒரு தீர்க்கதரிசிதான். அது ஒருபக்கம் இருக்கட்டும். நடப்பு உலகத்திற்குள் லாகின் செய்வோம்.
ஃபேஸ்புக்கில் நண்பர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை, ‘காதலிக்க மறுத்ததால் பெண்ணின் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் பரப்பிய நபர் கைது’ என்பது போன்ற செய்திகள் இன்றைக்குத் தலைப்புச் செய்திகள். ஆக, பெரும்பாலானவர்களுக்கு மன உளைச்சலையும், அதனால், குற்றங்கள் செய்யக் காரணங்களையும் சப்ளை செய்வது, இணையதளம் என்னும் ‘வினையதளம்’. இப்படி, பழியை அதன்மீது போட்டுவிட்டு வழக்கம்போல அதன்மீதேறி அமர்ந்துகொள்பவர்களாக இருக்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்னால் கிராமத்தில் “பனங்காட்டுப் பக்கம் போகாதே, முனி அடிச்சிடும்என்று சொல்லி சிறுவர்களையும் பெண்களையும் பயமுறுத்துவர். அப்படிச் சொல்லியதற்கு காரணம் அவர்கள் தனியாகப் போகக்கூடாது என்பதுபோல எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதுபோல, ஃபேஸ்புக், வாட்ஸப் பக்கம் போகாத முகமூடி அணிந்த போலியான நபர்கள் உன்னைப் பின் தொடர்வார்கள்என்று இந்தக் காலத்தில் பயம்காட்டுவது அவசியமாக இருக்கிறது.

மகாபலியை ஆட்கொள்ள திருமால், தசாவதாரத்தில் ஒன்றான வாமன அவதாரம் எடுத்துச் சிறிய உருவில் வந்து, உலகை இரண்டடியால் அளந்து, 'இன்னும் ஓர் அடி எங்கே?’ என்று கேட்பதாகக் கதை இருக்கும். அதே கதைதான், நம்மை ஆட்கொள்ள வந்திருக்கும் தொழில்நுட்பமும். இன்டர்நெட் என்னும்  அவதாரத்தில் உலகைக் கைகளுக்குள் சுருக்கி “இன்னும் வேறு ஏதாவது மிச்சம் இருக்கிறதா?” என்று நம் எல்லாரையும் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

நவீன வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக மாறிவிட்டது தொழில்நுட்பம். அதற்குள் தங்களை இணைத்துக்கொள்ளும் இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் தனிமையை விரும்பி ஏற்கின்றனர். வீட்டுக்கூடத்தில் பெற்றோருடன் தூங்கும் வழக்கம் மாறி, தனி அறைக்குள் நுழைந்தபோது, தொழில்நுட்ப பூதமும் தன் பங்குக்கு, தனக்குள் இளைஞர்களை இழுக்க ஆரம்பித்தது. அந்த பூதம் கட்டமைத்திருக்கும் மெய்நிகர் வாழ்க்கைக்குள் அவர்கள் வாழத் தொடங்கியபோது கிடைத்த ஒரே நண்பன் இணையதளம். தினசரி நிகழ்வுகளில் அவர்கள் சந்திக்கும் தோல்விகளையும் ஏமாற்றத்தின் குமுறல்களையும் கொட்டித்தீர்க்கும் வடிகாலாக இணையதளங்கள் தரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். அங்குதான், ஆறுதலுக்காக முகமறியாத முகநூல் நண்பர்களைத் தேடினர். நம்முடன் நடமாடும் மெய்யான உறவுகளைவிட மெய்நிகர் உறவுகளிடம் நெருக்கமான நட்பில் இணைந்தனர். இதற்கெல்லாம், தனிமை ஒரு காரணம் இல்லையென்றாலும் இதற்காகவே தனித்திருக்கப் பழகுகின்றனர். அவர்களுக்கென ஒரு பொய்யான மெய் உலகத்தை உருவாக்கி அதன் உறுப்பினர்களாக மாறி, ‘அழுதாலும் அங்கேதான், சிரித்தாலும் அங்கேதான் என்று வாழ்கின்றனர். சாப்பிடுவதற்கு அம்மா அழைக்கும்போதே ‘தொழில்நுட்ப கோமா நிலையில் இருந்து மீள்வதுபோல வெளியே வருகின்றனர்.

அதற்குள்ளாக, தனிமை உணர்வு தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கும். நல விசாரிப்புகளின் செய்திப் பரிமாற்றங்களோடு ஆரம்பித்து, புகைப்படப் பரிமாற்றத்தில் சற்றே தடுமாறி, முகம் பார்த்துப் பழகிய பின்பு இன்னும் நெருக்கமாகி வளர்ந்திருக்கும். குறுந்தகவல்களின் போக்கு பெருந்தகவல்களாக மாறி ஒருவருக்கொருவர் நேரில் சந்திப்பதை நோக்கி முழு வீச்சில் இயங்கத் தொடங்கியிருப்பர்.

இதில் சினிமாவின் பங்களிப்பைச் சாதாரணமாகக் கடந்து வர முடியாது. எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று காட்டுகிறார்களோ அதைவிட அதிகமாக எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அதையும் வெளிச்சமாகக் காட்டுகிறார்கள். எதிர்பாலினத்தை எப்படிக் கவர்வது என்பதில் ஆரம்பித்து, சம்மதம் கிடைக்கவில்லையெனில் ஸ்கெட்ச் போட்டு எப்படித் தீர்த்துக்கட்டுவது என்பதுவரை தெள்ளத் தெளிவாகக் காட்டிவிடுகிறார்கள். ‘புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தனி கார்டு போட்டு, படம் முழுக்க ஊதித் தள்ளுவதைக் காட்டும்போதே அதன் லட்சணம் என்னவென்று அறிவார்ந்தவர்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால், இந்த அப்பாவி இளைஞர்களுக்கு? இவற்றின் மீதெல்லாம் கால் வைத்துத்தான் இளமை தன் பயணத்தை ஜாக்கிரதையாகக் கடக்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் சறுக்கினாலும் வேறு உலகிற்கான பாதைக்குள் இழுத்துச் சென்றுவிடும். எது ஒன்று விரும்பத் தகாததாக இருக்கிறதோ அதை விரும்புவதுதான் இளமையின் ரகசியமாகவும் இருக்கிறது இங்கே!

‘அவசரத்திற்கு மொபைல் போன்’ என்பது மாறி, ‘அவசியத்திற்கு மொபைல் போன்’ என்றாகிவிட்ட நிலைமையில் சில தேவைகளுக்காக மட்டுமே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையத்தில் எப்போதும் முகத்தைப் புதைத்துக்கொண்டு இருக்காமல், அக்கம் பக்கம் இருப்பவர்கள் மீதும் குடும்ப உறவுகள் மீதும் அன்பு செலுத்தப் பழகவேண்டும். அப்படிப் பழகும்போது, கை விரல்கள் அமைதிகொள்ளும்; கழுத்து சற்று நிமிரும்; கண்களுக்குள் புது வெளிச்சம் பாயும்; காலை, மாலை பரஸ்பர வணக்கத்திற்காக வாட்ஸப் தேவை இருக்காது; “சாப்பிட்டாயா, குளித்தாயா என்ற நல விசாரிப்புகள் தேவைப்படாது; முக பாவனைச் சித்திரங்களுக்குள்
நம்முடைய எண்ணங்கள் தொலையாது; அனுப்பிய தகவலுக்குப் பதில் கிடைக்கவில்லை என்ற கவலை இருக்காது; யாருடைய குறுந்தகவலுக்காகவும் காத்திருக்கும் அவசியம் இருக்காது.
மாறாக, நம்மைச் சுற்றி இயங்கும் வாழ்க்கையை ரசிக்கலாம்; சூரிய வெளிச்சம் முகத்தில் படருவதை உணரலாம்; பழ வண்டியில் அடுக்கியிருக்கும் பழங்களின் விதவிதமான வண்ணங்களைக் காணலாம்; பனிபடர்ந்த புல்லின் மென்மையை விரல்களால் தொடலாம்; நம்மைக் கடந்து செல்லும் மனிதர்களின் முகங்களைப் பார்க்கலாம்; இவையெல்லாம் சாதாரணமான காட்சிகளாக இருந்தாலும் அதிலிருந்தும் புத்துணர்ச்சி பெற்று நம்மை நாமே மன உளைச்சல்களிலிருந்து மீட்டெடுக்கலாம். இணையதள அனுபவத்தைவிட இந்த அனுபவம் புதுமையாகவே இருக்கும்!


பிஞ்சில் பழுக்க வைக்கும் கார்பைடாக மாறியிருக்கும் தொழில்நுட்பத்தைக் கொஞ்சம் ஒதுக்கிவைப்போம். ‘புதிய நண்பர்கள் தேட தொழில்நுட்பம் வேண்டாம், சிறு புன்னகை போதும், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருமே நம் நண்பர்கள்தான் இதை உணர்ந்தால் நம்மைச் சுற்றியிருக்கும் நுட்பமான உறவுகள் நமக்குப் புரியவரும்!