www.gamblinginsider.ca

12 January 2015

கொண்டையில் தாழம்பூ...!!!-Mano Red

கொசுக்கடிச்சாலும் பரவால்ல,
கோனார் கடை
கொசுவத்தி சுருளுக்கு
மணிக்கணக்கா காத்துக் கெடப்பேன்,
ஏன்னா கண்மை வாங்க
அவ அங்க தான வரணும்..!!

சேறு தெறிச்ச சட்டயோட
கால்ல முள்ளு தைக்க
வாய்க்கா வரப்புல ஓடி
மரத்துக்கு பின்னால ஒளிஞ்சு
கண்டும் காணாம நானிருப்பேன்,
ஏன்னா அங்க தான
அவ குளிக்க வரணும்...!!

அர்ச்சனை தட்டு கையில இல்ல,
கோயிலுக்குள்ள
போக தகுதியில்ல,
உயர் சாதி சாமி கும்பிட
எனக்கு கொடுத்தும் வைக்கல,
இப்போ நான் அதிகமா பேசவும் இல்ல,
இருந்தாலும் அவள பாக்க
காத்துக் கெடக்கேன்,
ஏன்னா சாமி கும்பிட
அவ அங்க தான வரணும்..!!

மொதலாளி வீட்டு பொன்னு மேல
தூரத்துல இருந்து ஆசப்படலாம்,
அவ கொண்டையில தாழம்பூ
கனவுல தான் வைக்கலாம்,
சோத்துக்கு வழி இல்லாதவன்
சொர்க்கத்துக்கு போக நெனச்சா
ஊர் சிரிக்குமா..?? இல்ல
ஊர் கூடி வழி அனுப்பி வைக்குமா..?

காதல் வந்து என்ன பண்ண..!!
பகுத்தறிவு பஞ்சத்துல
காதல் நோய் பிழைப்பதில்ல,
ஒருவேள சொன்னாலும்
தொடக்கூடாத சாதின்னு
ஊரவிட்டு தள்ளி வைக்கலாம்,
தொட்டா தீட்டுன்னு
தீ வச்சு பொசுக்கலாம்,
செருப்பு போடாத ஜென்மம்ன்னு
மொகம் சுழிச்சு பேசலாம்..!!

காதலுக்கு கண்,காது ,மூக்கு இல்ல,
இப்படி வக்கணையா பேச
எனக்கும் தெரியும்...!!
சாக்கடைல விழுந்தாலும்
காதலுக்கு சாதி இருக்கு,
மானமே போனாலும்
உயர்வு தாழ்வு இருக்கு,
இப்படி சொல்ற கூட்டத்துல
கடைக்கண் காதல் பத்தி சொன்னா
கேனப்பய இவன்னு
கைகொட்டி தான் சிரிப்பாங்க ..!