www.gamblinginsider.ca

20 October 2017

பரோட்டா சாப்பிடுதல்


-
(விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் பரோட்டாசாப்பிடும் முறையை மறந்துவிட்டு படிக்கவும்.)
2 அல்லது 3 பரோட்டாக்களையும் ஒரேயொரு ஹாஃபாயிலையும் ஆர்டர் செய்யவும். பரோட்டாக்களை நொறுங்கப் பிய்த்துவிடாமல் செம்பருத்தி இலை அளவுக்கு சிறிது சிறிதாகப் பிய்த்துக்கொள்ளவும். அதை நன்கு கிளறிவிட்டு குளிரக் குளிர சால்னாவை ஊற்றவும். சூரியன் பார்த்ததும் வெக்கத்தில் மறையும் பனித்துளி போல கொஞ்ச நேரத்தில் முதலில் ஊற்றிய சால்னா ஊறியிருக்கும். இப்போது இன்னும் கொஞ்சம் சால்னாவை ஊற்றவும். சொத சொதவெனபரோட்டா அமுதமாக மாறிக் கொண்டிருக்கும்வேளையில் ஹாஃபாயில் வந்திருக்கும். சாப்பிடத் தயாராகலாம். கொஞ்சம் பரோட்டாவையும் ஹாஃபாயிலின் ஓரத்து வெள்ளைக் கருவையும் சேர்ந்தாற்போல எடுத்து உடனே விழுங்காமல் சுவைத்துச் சாப்பிடவும். பரோட்டாவும் முட்டையும் மாறி மாறிக் குறைந்துகொண்டே வர ஒரு வாய் பரோட்டாவை இலையில் கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டு ஹாஃபாயிலின் மஞ்சள் கருவை உடையாமல் விழுங்க வேண்டும். மஞ்சள் கரு தொண்டைக்குள் மறைவதற்குள் மிச்சமிருக்கும் பரோட்டவையும் சாப்பிட்டு விட வேண்டும். மேலும் சுவைக்கு இலையை நக்கிச் சாப்பிடவும். ஏதோ பாற்கடல் அமுதம்னு ஒரு ஐட்டம் இருக்கே அதெல்லாம் இதுக்குப் பக்கத்துல நிக்க முடியாது.

கண்ணதாசன் 90வது பிறந்தநாள் விழா Mano Red


-
#கர்ணன் படப் பாடல் என்றதும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப் பாடுவார்கள் என எதிர்பார்த்தபோது 'என்னுயிர் தோழி கேளொரு சேதி' பாடலைப் பாடினார்கள்.
#சிவாஜி படப் பாடல் வரும்போதெல்லாம் சிவாஜியின் 70 வயது ரசிகர்கள் அதகளம் செய்துவிட்டார்கள்.
* உள்ளம் என்பது ஆமை பாடல் வரும்போது 'சோகப் பாட்டெல்லாம் பாடாதீங்க' என்று அங்கங்கே சில குரல்கள்.
* பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடலுக்கு ஆஹா ஓஹோ அதிகம்.
* கவியரசர் பற்றிய நிறைய தகவல்களை ஒய்ஜி. மகேந்திரன் இடையிடையே சொன்னது கலகலப்பாக இருந்தது.
* இப்போதைய கவிஞர்களைக் கலாய்க்கவும் ஒய்ஜி தவறவில்லை.
* மற்ற கவிஞர்கள் உற்சவர்கள் என்றால் கண்ணதாசன்தான் மூலவர் என்று ஒய்ஜி சொன்னதும் கைதட்டல்கள் அடங்கவே இல்லை.
* இருவருக்கும் பிறந்தநாள் என்பதால் கண்ணதாசன் எழுதி#விஸ்வநாதன் பாடிய பாடல்களையும் பாடினார்கள்.
* கண்ணா கருமை நிறக் கண்ணா பாடலை பாடகி #சைந்தவிஉருக்கமாகப் பாடினார்.
* அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல் பாடச் சொல்லி தாத்தா ஒருவர் எழுந்து நின்று கத்தினார்.
* ஒருவழியாக உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் பாடிவிட்டார்கள்.
* சிறப்பு விருந்தினரான இளையராஜாவுக்கு பிடித்த பாடலென மாலைப்பொழுதின் மயக்கத்திலே பாடலைப் பாடி #கல்பனாஅசத்தினார்.
* கண்ணதாசனின் விசிட்டிங் கார்டு என்று 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு' பாடலைப் பாடிக்கொண்டிருக்கும்போது#இளையராஜா வந்துவிட்டார்.
* எல்லாப் பாடல்களும் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்களாக இருந்ததால் அதிகமான பின்னணி குரல் முனுமுனுப்புகளும் இருந்தன. 

'பிக் பாஸ்' வீடும், நம் தமிழகமும்! - Mano Red

'இரண்டாம் தர மக்களால் முதல் தரமான நாட்டை அமைக்க முடியாது' என்ற வார்த்தைகளை, எங்கோ படித்த ஞாபகம். நாட்டின் சூழலுக்கு சரியாக பொருந்தும் இந்தப் பொன்மொழியை எங்கு படித்தது, யார் சொன்னது என்பது சரியாக நினைவில் இல்லை. இப்போதைக்கு நமக்கு இரண்டு அரசியல் பிரச்னைகள்... ஒன்று, விஜய், 'டிவி'யில் வரும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இடம்பெறும் வீட்டு அரசியல், இன்னொன்று, நம் தமிழக அரசியல். இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால், கவுண்டமணி சொல்வது போல, 'அது மாம்பழம்; இது வாழப்பழம்; ஆனா, பிரச்னை எல்லாம் ஒண்ணு தான்!' துரோகம், புறம் பேசுவது, தந்திரம், சூது, வஞ்சம், பழிக்குப்பழி, அணி மாறுவது, கூட்டு சேர்வது என, இரண்டுக்கும் பொதுவான காரணங்கள் பல உண்டு.

'டீ கடை அரசியல்' என்ற ஒரு களம் உண்டு. அரசியல் நிலவரங்கள் அனைத்தையும் சூடாக விவாதிக்கும் அந்தக் களத்திலும், 'பிக் பாஸ்' அரசியல் தான் களமாடுகிறது என்றால், இதன் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

என்ன செய்தால், மக்கள், 'ட்ரிக்கர்' ஆவர் என்பதை நம்மை வைத்து அரசியல் செய்யும் தந்திரவாதிகள் புரிந்து வைத்துள்ளனர். இந்த அரசியல்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நடுவில், ஆட்டுவிக்கும் பொம்மையாக நாம் நிற்கிறோம் என்பதைப் புரிய வைக்க என்ன, 'டாஸ்க்' கொடுப்பது என்று தெரியவில்லை.
சில ஒப்பீடுகளைப் பார்க்கலாம்...

பிக் பாஸ் வீடு: சண்டையிட்டு விலகி சென்ற உறவுகள் மீண்டும் அன்பைத் தேடி, பழைய உறவைப் புதுப்பிக்க வருகின்றன. அதைக் காணும் நாம், 'பொய்யாக நடிக்காதே...' என, 'டிவி'க்கு வெளியே இருந்து கூக்குரல் எழுப்புகிறோம்.

தமிழகம்: கட்சி பிரிவு, இணைப்புக்காக சமாதானம், மீண்டும் அதே கட்சியில் ஐக்கியம் என்பன போன்ற பொய்யான உறவு, அரசியலின் போலி கூத்துகளை தொடர்ந்து பார்த்தும், நமக்குச் சம்பந்தம் இல்லாதது போல் சிரித்துக் கடக்கிறோம்.

பிக் பாஸ் வீடு:வந்த சில நாட்களிலேயே வீட்டின் ஆட்சியைக் கைப்பற்றும், 'திடீர் தலைவர்' மீது, சக குடும்ப உறுப்பினர்களுக்கு இல்லாத கோபம், நிகழ்ச்சி பார்க்கும் நமக்கு வருவதால் ஆத்திரம் கொள்கிறோம்.

தமிழகம்: வாரத்திற்கு ஒரு தலைவர், மாதத்திற்கு ஒரு முதல்வர் என, ஒரே ஒரு ஓட்டுப் போட்டு விட்டு, பல, 'திடீர்' முதல்வர்களைப் பார்த்தும், கோபம் கொள்ளவும், கேள்விகள் கேட்கவும் மறுக்கிறோம்.

பிக் பாஸ் வீடு: வீட்டிற்கு தகுதி இல்லாத ஒருவரை சரியாகத் தேர்ந்தெடுத்து வெளியேற்றுகிறோம்; நம் மக்களின் ஓட்டு, சரியாக செல்லுபடியானது இந்த நிகழ்ச்சியில் மட்டுமே!

தமிழகம்: நிஜத்திலோ, ஒரு முறை ஓட்டளித்து பல முறை ஏமாறுகிறோம். நம்மை ஏமாற்றியவர்களுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கிறோம். மறுபடியும் ஏமாறும் போது எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கப் பழகுகிறோம்.

பிக் பாஸ் வீடு:: போலியாக நடிப்பவரை கழுவி ஊற்றி விட்டு, கோபம், மன்னிப்பு, சந்தோஷம் என, எல்லாவற்றிலும் நேர்மையாக இருக்கும் நபரை தலையில் துாக்கி வைத்து, தலைவியாகக் கொண்டாடுகிறோம்.

தமிழகம்: மனசாட்சிக்கு நேர் எதிராக அத்தனை அரசியல்வாதிகளும் பொய்யாக நடிக்கின்றனர் என தெரிந்தும், கழுவி ஊற்றாமல், அமைதி காக்கிறோம். அதே சிம்மாசனத்தை மறுபடி வழங்குகிறோம்.

பிக் பாஸ் வீடு: வீட்டுக்குள் ஒருவருக்கு இன்னொருவர் செய்யும் துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆதங்கப்படுகிறோம்.

தமிழகம்: கவுன்சிலர், எம்.எல்.ஏ., முதல்வர் வரை அத்தனை பேரும் நமக்குத் துரோகம் இழைக்கும் போது, மிகவும் இயல்பாக இருக்கிறோம். இன்னும் பல ஒப்பீடுகளை இதனுடன் சேர்த்துச் சொல்லலாம். ஆனால், ஒப்பீடுகளால் எந்த எதிர் விளைவும் ஏற்படப் போவதில்லை. இயக்கு சக்திகளின் நிழலான நிகழ்ச்சியில் நடக்கும் அபத்தங்களையும், அநியாயங்களையும் கண்டு பொங்குவோமே தவிர, நிஜத்தைக் கண்டு பொங்க மாட்டோம்.

குழந்தைகளையும், சிறுவர்களையும் உடன் வைத்து பார்க்கும் நாம், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்... பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அத்தனை பேரும், நம் ஒவ்வொருவரையும் பிரதிபலிக்கும் பிம்பங்களே தவிர தனிப்பிறவி அல்ல. அவர்கள் செய்யும் தவறுகளைக் காட்டிலும் நாம் அதிகம் செய்கிறோம். நம்மைச் சுற்றி கேமராக்கள் இல்லை. நம் செயல்கள் யாவும் படம் பிடிக்கப்பட்டு யாருக்கும் காட்சிப்படுத்தப் போவதில்லை என்பதற்காக நாம் புனிதர்கள் ஆகி விட முடியாது.

அந்த நிகழ்ச்சி, நம் கலாசாரத்தைச் சீரழிக்கிறதா... சமூகப் பிரச்னைகளில் இருந்து நம்மைத் திசை திருப்புகிறதா... முதுகுக்குப் பின்னால் நடக்கும் அநீதிகளை மறைக்க கண் முன் மாயத் திரையிடுகிறதா... என்ற கேள்விகள் நம்மைச் சுற்றி எழுந்தாலும், தொலைக்காட்சியை விட்டு எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. இதனால், மாநிலத்தின் வளர்ச்சி கூடியதோ இல்லையோ, தொலைக்காட்சியின், டி.ஆர்.பி., எனப்படும், தொலைக்காட்சியை பார்ப்பவர் எண்ணிக்கை வளர்ச்சி கூடியுள்ளது. பல பிரபலங்கள், பல கேமராக்கள், ஒரே வீட்டில் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது என்ற காரணத்துக்காக, நிகழ்ச்சியை மெய் மறந்து ரசிக்கிற அதே சமயம், பல அரசியல் பிரபலங்கள், கேமராக்களின் முன் நடித்து விட்டு, ஓடியும், ஒளிந்தும் கொண்டிருக்கின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ உரிமைகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், மீண்டும் மீண்டும், முதுகில் குத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்.நமக்கான உரிமைகளை தற்காத்து கொள்ள தயாராக இல்லாமல், இன்னொருவர் ஆட்டுவிக்கும் கைப்பாவையாக இருக்கிறோம்.

'எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை அறிந்தவர்களுக்கு ஆசிரியர்கள் தேவையில்லை' என, சொன்ன மஹாத்மாவின் வார்த்தைகளை மனதிற்குள் வாங்கி, சரியாகச் சிந்தித்துச் செயல்படும் நேரமிது.


பிக் பாஸ் வீட்டைப் பார்க்க வேண்டாமென்று சொல்லவில்லை... அதே பார்வையுடன், தமிழகத்தையும் கொஞ்சம் பார்த்தால் நன்றாக இருக்கும்.

தினமலர் / 11.9.17
http://www.dinamalar.com/news_detail.asp?id=1853111

போதைக்கு எதிராகவும் போராட வேண்டும்! Mano Red

சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு கடத்த முயன்ற 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.
செங்குன்றத்தில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்; உரிமையாளர் உட்பட, 10 பேர் கைது.
தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருட்கள் விற்ற, 46 பேர் சென்னையில் கைது.

இந்தச் செய்திகள் அனைத்தும், வார, நாளிதழ்களில் வந்தவை. போதைப் பொருள் பற்றிய இத்தகைய செய்திகளைப் படிக்கும் போது தனி மனிதனின் உடல், ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாக மட்டும் கருதி, சாதாரணமாக நம்மால் கடந்துவிட முடியாது. அடுத்த தலைமுறையினரான மாணவர்களின் பிரச்னையாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பப் பிரச்னையாகவும் பார்த்தால், இதனுடைய விபரீதம் புரியும்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்காகப் பழகி, போதைப் பழக்கத்தில் இருந்து இன்று வரை மீளமுடியாமல் வருத்தப்படும் நண்பர்களை எனக்குத் தெரியும். பழக்கத்தை விட முயற்சித்துத் தோற்றுப் போனவர்களும், ஏதாவது ஒரு பழக்கத்தை விடுவதற்கு இன்னொரு பழக்கத்திற்கு அடிமையானவர்களும், மன உளைச்சல், உடல் வலி இவற்றை மறக்கப் பயன்படுத்துபவர்களும், இந்தப் பட்டியலில் அதிகமாகி இருக்கின்றனர்.

போதைக்கு அடிமையாகும் நபர், சிறிது சிறிதாக அடிமையாகத் துவங்கி, அந்தப் பழக்கத்தை அதிகரித்துச் செல்வதும், அடிக்கடி போதை வேண்டுமென்று கேட்பதும், போதைக்கான தேவைக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிவதுமாக நாளடைவில் மாறி விடுகின்றனர். மனதளவில் தன்னம்பிக்கை இழப்பதுடன், விரக்தி அடைந்து, தனிமையையும் அதிகம் விரும்ப ஆரம்பிக்கின்றனர்.

தெருவுக்குத் தெரு மதுக்கடைகளும், பள்ளிக்கூடம் அருகே போதைப் பொருள் விற்பனை நடப்பதும் இவற்றை எளிமையாகவும், பரவலாகக் கிடைக்கவும் காரணமாக இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணிகளாக, போதை மருந்தை விற்பனை செய்யும் கும்பலும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளும், போதை மருந்து கொண்டு செல்லும் வாகனங்களைப் பிடித்தால் லஞ்சம் வாங்கி, விடுவிக்கும் காவல்துறையினரும் இருக்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக ஹெராயினும், ஆப்ரிக்க நாடுகளிலிருந்து கோகைனும், இந்தியாவின் நக்ஸல் பகுதிகளில் இருந்து கஞ்சாவும் கடத்தி வரப்படுகின்றன. புகையிலை, சிகரெட், பீடி, மாவா, மூக்குப்பொடி, ஆல்கஹால், கோகைன், ஹெராயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என, பல வகையில் மக்களை போதை அடிமைப்படுத்தி வருகிறது. இந்தியாவில், 15 வயதுக்கு மேல் உள்ளவர்களில், 30 சதவீதம் பேர் - கிட்டத்தட்ட, 25 கோடி பேர் - ஏதோ ஒருவகையில் போதை உபயோகிக்கின்றனர் என்பது அதிர்ச்சியான தகவல்.
ஜனவரியில், டில்லியில் ஒரு நிகழ்வு. இளைஞர் ஒருவர் சந்தையில் கிடைக்கும் அனைத்து விதமான போதைப் பொருட்களையும் பயன்படுத்தி திருப்தி ஆகாமல், பாம்பு விஷத்தைப் போதையாகப் பயன்படுத்தி இருக்கிறார். நாளடைவில் பழக்கம் தீவிரமாகி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அவரைப் பரிசோதிக்கும் போது அவரின் எச்சில் கூட நஞ்சாக மாறியிருந்தது. 'பாம்பு விஷம் என்னை, 24 முதல், 30 மணி நேரம் வரை போதையிலேயே வைத்திருந்தது' என்று அவர் மருத்துவர்களிடம் கூறியதிலும், சமூகத்திற்கான விஷயம் இருந்தது.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் கொட்டு வைக்கும் விதமாக இன்னொரு நிகழ்வைப் பார்க்கலாம். கர்நாடக மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் சார்பாக, பெங்களூரில் பள்ளி மாணவர்கள் முதல்வர் சித்தராமையாவுடன் உரையாடும் நிகழ்ச்சி, 2017 ஜூன் முதல் வாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிகழ்வில், 8ம் வகுப்பு மாணவர் ஒருவர், 'எனது பள்ளிக்கு அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

போதைப் பொருட்கள் விற்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக முதல்வர் உத்தரவிட்டதால் பெங்களூரு மாநகர காவல் துறையினர் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்தனர்; பள்ளிக்கு அருகே போதைப் பொருட்கள் விற்ற, நான்கு பேரை கைது செய்தனர். சித்தராமையாவின் இந்த அதிரடி நடவடிக்கை, எல்லாரிடமும் பெரும் வரவேற்பையும் பெற்றது.

உலக நாடுகள் அனைத்தும் போதைப் பொருட்கள் பரவலுக்கு எதிராக, கடுமையான சட்டம் கொண்டு வந்தாலும், விற்பதும், கடத்துவதும் இன்றும் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. இதற்கு எதிராக பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த, 2016 ஜூன் மாதம், உட்தா பஞ்சாப் என்கிற படம் ஹிந்தியில் வெளியானது. 'உட்தா பஞ்சாப்' என்றால், 'பறக்கும் பஞ்சாப்' - போதையில் மிதக்கும் பஞ்சாப் - என்று அர்த்தம். போதை மருந்துக்கு அடிமையான சமூகத்துக்கு எதிரான செய்தியைத் துணிச்சலாகப் பதிவு செய்தது.

பஞ்சாப் இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கிச் சீரழிவதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் விளக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளும் சொல்லப்பட்டிருந்தன. அந்தப் படம் சொன்னதற்கு மேலாகவே இன்றைய சமூகமும் இருக்கிறது.

மதுவுக்கு எதிராகப் போராடும் மக்கள் பான் மசாலா, புகையிலை போன்ற போதை பொருளுக்கு எதிராகவும் போராட, வீதிக்கு வர வேண்டிய நேரமிது. நாட்டு மக்களின் நலன் கருதி போதைப் பொருட்கள்
மீதான துரித நடவடிக்கையை எடுக்க, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.


போதைக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், போதையிலிருந்து மீள வேண்டுமென்று அடிமையானவர்கள் தங்களுக்குள்ளே போராட வேண்டும். அதுவரை அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்பது கடினமே.

தினமலர்/4.7.17

நான் 12வது ஃபெயிலுங்க... Mano Red


-
‘12ம் வகுப்பு ஃபெயில்’ என என்னுடைய தேர்வு முடிவு வந்த சமயம் எங்கள் ஊரில் திருவிழா. ஊர் முழுக்க சொந்த பந்தங்கள். கெடாக்கறி விருந்துடன் அத்தனை பேரையும் சமாளிக்கும் தைரியம் எனக்கு இருந்ததால் அன்றைய பொழுதைச் சமாளித்தேன். எல்லாம் முடிந்து, 12ம் வகுப்பு முடிவை ஓரம்கட்டிவிட்டு பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து டிப்ளமோ சேர்ந்து, அதன்பிறகு பொறியியல் படிப்பையும் (கணக்கில் Arrears வைத்து) முடித்தேன். இருந்தாலும், 12ம் வகுப்பில் தேறாத பாடங்களை எழுத விருப்பமில்லை. (வரலாறு பேசட்டுமென இன்னும் எழுதாமலே வைத்திருக்கிறேன்.) காரணம் கணக்குப் பாடம்.
(நான் ஃபெயில் ஆன கதை பெரிது என்பதால் கீழே இருக்கும் என் வரலாற்றை, ‘#பராசக்தி’ சிவாஜி Modulationல் படித்தால் சுவாரசியமாக இருக்கலாம்)
தேர்வுகள் விசித்திரம் நிறைந்த பல முடிவுகளைச் சந்தித்திருகின்றது
புதுமையான பல மாணவர்களையும் கண்டிருக்கிறது
ஆனால் என்னுடைய ரிசல்ட் விசித்திரமும் அல்ல
தேர்வெழுதிய நானும் புதுமையான மனிதன் அல்ல
தேர்வுக் களத்திலே சர்வ சாதாரணமாக தென்படும் மாணவன் நான்
பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் படிக்கவில்லை
விடுமுறை எடுத்து வகுப்புகளில் இருக்கவில்லை
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்
நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்
நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று
இல்லை... நிச்சயமாக இல்லை.
பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் படிக்கவில்லை
படிப்பு வேண்டாமென்பதற்காக அல்ல
கணிதப் பாடம் பிடிக்கவில்லை என்பதற்காக
வகுப்புகளில் இருந்தேன்
நான் மாணவன் என்பதற்காக அல்ல
படிக்க அனுப்பிய பெற்றோர் மனம்
புண்படக்கூடாது என்பதற்காக
'எனக்கேன் இவ்வளவு அக்கறை
வேறு யாருக்கும் இல்லாத அக்கறை'
என்று கேட்பீர்கள்
நானே பாதிக்கப்பட்டேன்
நேரடியாக பாதிக்கப்பட்டேன்
சுயநலம் என்பீர்கள்
என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது
பரீட்சையில் முன்னால் இருப்பவன் பிட் அடிக்கும்போது அவன் பேப்பரை புடுங்கி எழுதி அவனையும் காட்டிக் கொடுக்காமல் இருவரும் ஃபெயில் ஆவார்களே அவர்களைப்போல.
என்னையும் தோற்றவன் என்கிறீர்களே
இந்தத் தோற்றவனின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால்
அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்.
பாட்டொலிக்கும் ரேடியோக்கள் இல்லை என் ஹாஸ்டலில்
மிரட்டும் வார்டன்கள் இருந்திருக்கிறார்கள்
டியூசன் சென்றதில்லை நான்
பஞ்சாயத்து போர்டில் டிவி பார்க்கச் சென்றிருக்கிறேன்
கேளுங்கள் என் கதையை
மதிப்பெண்களை பகிர்வதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்
தமிழ்நாட்டிலே இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான்
பிறக்க ஒரு ஊரு
படிக்க ஒரு ஊரு
கஷ்டமான படிப்பெனச் சொல்லப்படும் குற்றவாளி கணக்கு
உங்கள் முன்னால் நிற்கிறதே இதோ இந்தப் புத்தகம்தான்
இதன் கடின வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன்
கணிதப் பிரிவில் சேர்ந்தேன்
புரியாமல் திரிந்தேன்
மெலிந்தேன்
கடைசியில் பைத்தியமாக மாறினேன்
மேல்நிலைப் பள்ளியை விட்டே ஓட நினைத்தேன்
ஆம்!
படிப்பு துறந்தவனாக.
புத்தகத்தின் பெயரோ கணிதம்
வாழைப்பழம் போல எளிமையான பெயர்
ஆனால் பாடத்திலோ எளிமை இல்லை
இருந்த படிப்பும் சீரழிந்து விட்டது
கையிலே கணிதம்
கண்ணிலே நீர்
கணக்கு துரத்தியது
கணக்கை நான் துரத்தினேன்
கணக்குக்காக கருணை காட்டினார்கள் பலர்
அவர்களிலே டாப்பர்ஸ் சிலர் எனக்காகச் சொல்லிக்கொடுத்தார்கள்
கொடூரமான வாத்தியார்களால் என் கணக்கு தள்ளிப்போனது
நான் நினைத்திருந்தால் அப்போதே கற்றுக்கொண்டிருப்பேன்
கடவுள் பக்தர்களும் கணக்கைக் காப்பாற்ற வந்தார்கள்
உபகாரமாக கோவில் சுவற்றில் தேர்வு எண்ணை எழுதச் சொல்லி.
ராமானுஜனின் பெயரால்
உலகப் புகழ் ஐன்ஸ்டீனின் அருளால்
கணித உலகத்தில் புழுவாக துடித்தபடி நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்
புரியாத பாடத்தை எடுக்கத் தூண்டியது இதோ இந்த இன்ஜினியர் சமூகம்தான்
விருப்பமானவர்களின் மீதிருக்கும் பாசத்தில் விந்தையில்லை
நம் மகன் விவசாயம் பார்க்கட்டுமென தந்தையும் விரும்பவில்லை.
உலக பணக்காரர் பில்கேட்ஸ்
டாலர் புண்ணியவான்
சில்வர்ஸ்பூன் சீலர்
அவரே பள்ளியில் படிக்கப் பிடிக்காமல் வெளியே வந்திருக்கிறார்
படிக்க கஷ்டமாக இருப்பதைச் சகிக்காமல்.
அதே முறையைத்தான் நானும் கையாள நினைத்தேன்
கையாளாகாத என்னால் அது முடியவில்லை
இது எப்படி குற்றமாகும்
ஃபெயிலான ஒரு தமிழனுக்கு வாழ்வதற்கு வழி இல்லையா?
தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு மாணவன் தோற்க உரிமையில்லையா?
நான் மட்டும் கொஞ்சம் யோசித்திருந்தால்
வேறு படிப்பைத் தேர்ந்தெடுத்து
பள்ளி நாட்களை ரசித்திருக்கலாம்
கல்லூரியையும் அனுபவித்திருக்கலாம்
இதைத்தானா இந்த மதிப்பெண் சமூகம் விரும்புகிறது
கணக்கு என் படிப்பை விரட்டியது
பயந்து ஓடினேன்
தேர்வு என்னைத் துரத்தியது
மீண்டும் ஓடினேன்
பக்தி என் நம்பிக்கையைப் பயமுறுத்தியது
ஓடினேன்.. ஓடினேன்.
இறுதித் தேர்வின் ஓரத்திற்கே ஓடினேன்
அந்த ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும்
வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்
இன்று மதிப்பெண் என்னவென்று கேட்போர்
செய்தார்களா?
படிக்க விட்டார்களா என்னை.
(இன்ஜினியர் சமூகம்: படிக்காமல் இருந்துவிட்டு எங்களைக் குற்றம் சொல்கிறார்.)
இல்லை யாரையும் குற்றம் சொல்லவில்லை
அதுவும் என் குற்றம்தான்
என் கணக்கில் பிழை
புரியாத படிப்பை எண்ணி ஓடுவதில் என்ன தவறு
கணக்குப் பாடத்தை எடுத்தது ஒரு குற்றம்
புரியாமல் இரண்டு வருடம் பள்ளி சென்றது ஒரு குற்றம்
கணக்கு வாத்தியாரை கண்டுகொள்ளாதது ஒரு குற்றம்
இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?
யார்?
யார் காரணம்?
இன்ஜினியர் சமுதாயக் குற்றமா?
விதியின் குற்றமா?
பணம் பறிக்கும் காலேஜ் கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?
அந்தஸ்து குற்றமா? அல்லது இன்ஜினியர் வேலையில் ஆசை காட்டி பணம் புடுங்கிய வஞ்சகர்களின் குற்றமா?
தெருவுக்குத் தெரு சாமியார்கள், மணல் குவாரிக்காரர்கள், அரசியல்வாதிகள் பெயரால் காலேஜ் நடத்தும் ஆசாமிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?
கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி கல்விக்கூடங்கள் நடத்தும் கேடிகளின் குற்றமா?
இந்த குற்றங்கள் களையப்படும் வரை தோல்விகள் குறையப் போவதில்லை; தோற்பவர்களும் குறையப்போவதில்லை.
இதுதான் வாழ்க்கை!
வரலாற்றில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம் தோல்வி.
வாழ்க்கையில் வெற்றியின் ரகசியமும் இதுதான்.
Mano Red 💪