www.gamblinginsider.ca

15 September 2015

கல்லாய் மாறும் அகலிகைகள்.!

செவ்வாய் நோக்கிய பயணத்திற்கு
செவ்வாய் கொண்ட அழகிகள் தேவை என்ற
விளம்பரத்தை ப்ச்கொட்டாமல் ரசித்து
வேகமாய் முன்னேறிய உலகம்,
சகுனத்தடை ஏதுமின்றி
இளைப்பாற நின்றது பூமியின் விளிம்பில்.
சாக்கடையில் விழுந்தவனைச் சுற்றி
எதற்கும் ஆகாத செல்ஃபி பேய்கள்
கையை உயர்த்தியபடி ரசிக்க...
மிச்சமான எச்சில் சோற்றை
இல்லாதவனுக்குக் கொடுக்க மறுத்த
முடி(வி)யில்லா முதலாளிகள்
கும்மாளமாய்க் கூத்தடித்துச் சிரிக்க...
பெற்றெடுத்த வயிற்றில்
பெட்ரோல் ஊற்றி வழியனுப்புவது போல
முதியோர் இல்லம் சேர்த்துவிட்டு
முண்டங்களாய் பிள்ளைகள் மாறியிருக்க...
பஸ்ஸில் அலையும் ஆண்கள் சிலர்
உரசித் தேய்க்கும் போதெல்லாம்
அகலிகையாய் பெண்கள்
கல்லாக மாறத் துடிக்க...
நின்று வேடிக்கை பார்த்த உலகமோ
புதிதாக எதுவும் நடக்கவில்லை
கொஞ்சம் வழிவிடுங்கள் என்றபடியே
பண்பாட்டிற்கு புதிய விளக்கம் சொல்லி நகர்ந்தது.
------------------------------------------------------------------

இது என்னுடைய சொந்தப் படைப்பு என்பதை உறுதிப் படுத்துகிறேன். இதற்கான முழு உரிமையும் என்னைச்  சார்ந்தது மட்டுமே.
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா- 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு - தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும்”மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015” க்காகவே எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பு அல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது.




சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்..! -Mano Red



பாதரசம் சிதறிய கண்ணாடியில்
முகம் காட்டிய பின்பே
வாசல் கடக்கிறேன்,
அழகாய் இருப்பது
ஒருபுறம் இருந்தாலும்,
அழகாய்க் காட்டுவதற்கு
கண்ணாடிக்கும் வயதில்லை.

பெருகி விடுமோ என்ற பயத்தில்
நரைத்த முடியைக் கட்டி
மலையை இழுக்க
மனசாட்சி முயன்றதில்லை,
மறைத்து சீவுவதால் என்னவோ
சீப்பின் பற்கள் மட்டும்
எப்படியோ சிரித்து விடுகின்றன.

இளமையின்
அழகான மூங்கிலில்
அசிங்கமாய் துளையிட்டு
இனிமையான ராகம் எழுப்பிட
எனக்கும் ஆசைதான் என்று
இலக்கியத்தனமாகக் கிள்ளுவதற்காகவே
பருக்களும் வந்துவிடுகின்றன.

சிவப்பாய் இருப்பவன்
பொய் சொல்ல மாட்டான் என்று
எவன் சொல்லிப் போனானோ
தெரியவில்லை,
பருவ வயது பேசும் சில உண்மைகளும்
நிறத்தினால் பொய்யாகி விடுகின்றன.

தாழ்வு மனதுடன்
தத்தளித்துச் சென்ற போது
மூடநம்பிக்கையாக இருந்தாலும்
அழகாகத் தெரிந்தது,
அலங்கரித்த தன் குழந்தை மீது
யார் கண்ணும் படக்கூடாதென்று
இறுதியாக கண்ணத்தில்
அவள் வைத்த கருப்பு மை..!