www.gamblinginsider.ca

15 September 2015

சிவப்பாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்..! -Mano Red



பாதரசம் சிதறிய கண்ணாடியில்
முகம் காட்டிய பின்பே
வாசல் கடக்கிறேன்,
அழகாய் இருப்பது
ஒருபுறம் இருந்தாலும்,
அழகாய்க் காட்டுவதற்கு
கண்ணாடிக்கும் வயதில்லை.

பெருகி விடுமோ என்ற பயத்தில்
நரைத்த முடியைக் கட்டி
மலையை இழுக்க
மனசாட்சி முயன்றதில்லை,
மறைத்து சீவுவதால் என்னவோ
சீப்பின் பற்கள் மட்டும்
எப்படியோ சிரித்து விடுகின்றன.

இளமையின்
அழகான மூங்கிலில்
அசிங்கமாய் துளையிட்டு
இனிமையான ராகம் எழுப்பிட
எனக்கும் ஆசைதான் என்று
இலக்கியத்தனமாகக் கிள்ளுவதற்காகவே
பருக்களும் வந்துவிடுகின்றன.

சிவப்பாய் இருப்பவன்
பொய் சொல்ல மாட்டான் என்று
எவன் சொல்லிப் போனானோ
தெரியவில்லை,
பருவ வயது பேசும் சில உண்மைகளும்
நிறத்தினால் பொய்யாகி விடுகின்றன.

தாழ்வு மனதுடன்
தத்தளித்துச் சென்ற போது
மூடநம்பிக்கையாக இருந்தாலும்
அழகாகத் தெரிந்தது,
அலங்கரித்த தன் குழந்தை மீது
யார் கண்ணும் படக்கூடாதென்று
இறுதியாக கண்ணத்தில்
அவள் வைத்த கருப்பு மை..!