www.gamblinginsider.ca

16 February 2013

பயமறியா கற்பனை குதிரைகள்....!!!


என் மூளையில் விளக்கெரிய 
தொடங்கிய நேரம், 
கையில் பேனாவும், 
பையில் காகிதமும் கொண்டு, 
யாருமில்லா காடு நோக்கி 
வீறு நடை போட்டேன்.. 

கவிதைக்கு தலைவன் தனிமை, 
என்று யாரோ சொல்ல கேட்டு 
வீடு விட்டு காடு சென்றேன்..!! 

காதலிக்க யாரும் இன்றி 
தவித்து நின்ற தனி மரம் கண்டு, 
என் கவிதை கடையை அங்கே விரித்து 
மரத்திற்கு ஆறுதல் தந்தேன்..!! 

முதல் வரி எழுத முனைந்த போது 
மரம் ஒரு இலை உதிர்த்தது..!! 
என்னை எழுத ஊக்குவிப்பதாய் 
நினைத்து கொண்டே எழுதினேன்.. 

சற்று நேரம் போகவே, 
இலை உதிர்வு அதிகமானது..??? 
நான் எழுத இலையும் உதிர்ந்தது.. 
நான் நிறுத்த மரமும் நிறுத்தியது..!! 

பயம் என்னை ஆட்கொள்ள, 
எழுந்து மெல்ல நடை போட்டு 
வேகமாய் வீடு வந்த பின் புரிந்தது..!! 
அது உதிர்த்தது இலையல்ல, 
எனக்காக எழுதி அனுப்பிய 
காதலின் கவி வரிகள் என்று..!! 

அப்போது தெளிந்தேன் 
என் கற்பனை குதிரைகள் 
இன்னும் கட்டவிழ்க்க படவில்லை என்று ...!!!