www.gamblinginsider.ca

28 April 2020

கன்னித்தீவு - நாவல் விமர்சனம்

கன்னித்தீவு - நாவல் விமர்சனம்

இந்த நாவலை எழுதிக் கொண்டிருந்த நாட்களில் நிறைய கர்ப்பவதிகளைப் பார்க்க நேர்ந்ததாக முன்னுரையில் ரைட்டர் குறிப்பிட்டிருந்தார். இதே அனுபவம் எனக்குமுண்டு. பிடித்த இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு முன் சாலைகளில் எங்கு பார்த்தாலும் அந்த வாகனமே செல்லும். மனதுக்குள் ஒரு விஷயம் உழன்று கனன்று நெருப்பாகத் தகித்துக் கொண்டிருக்கும் போது நிகழும் செயல்கள் அனைத்தும் தற்செயல்கள் அல்ல தீர்மானிக்கப்பட்டவை என்று தோன்றும். அதை மெய்ப்பிக்கும் விதமாக இந்த நாவல் படைத்தவருக்கும் படித்தவருக்கும் தந்த நிறைவை வைத்து  அதை உணர முடிந்தது.

முன்னுரை, பின் அட்டைக் குறிப்பு மட்டுமே படித்துவிட்டு விமர்சனம் செய்யும் ஆட்களை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அவ்வாறு இல்லாமல் அந்தக் குறிப்புகள் உடன் அட்டை ஓவியத்தையும் சேர்த்து வைத்து, கதை இவ்வாறு இருக்குமோ என்று கற்பனையில் சில நொடிகளில் ஒரு கதை ஓடி முடித்த பிறகுதான் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். என் கற்பனைக் கதையில் 'எங்கோ தீவுக்குள் வழி தவறிய கர்ப்பவதி ஒருத்தி காட்டுவாசிகளிடம் சிக்கித் தப்பிக்கிறாள்' அது எப்படி, எவ்வாறு என்பதை இந்தப் புத்தகம் ஒரே பாய்ச்சலில் சொல்லியது.

எழுத்து நடை என்பார்களே அதுபோல் இந்த நாவல் முழுக்க எழுத்தாளரின் நடை. நாயகன் நாயகிக்கு இடையேயான காதல் (பு)பிரிதலை வர்ணிக்கும்  வகையில் எத்தனை எத்தனை அழகான வரிகள். அவை மிகவும் ரசனையானதாகவும் கதையின் இறுக்கத்தை தளர்த்தி ரசிக்கக் காரணமாகவும் கை கோத்தபடியே வந்தன. கதையின் நாயகனாக எழுத்தாளரே பிரதிபலித்து நிற்கும்போதுதான் இத்தகைய சிந்தனா சுவாரசியங்களை நிகழ்த்த முடியுமோ என்னவோ!ஆங்காங்கே கலவி பற்றிய தூவல்கள்தான் அதிகப்படியாகத் தெரிந்தன. ஆனாலும், குளுமை!

மானுடவியல் பேசும் நாவல் என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு இருந்தது போல் சமகால மனிதர்களுக்கும் கற்காலத்தை விட்டு வெளிவராத தீவு மனிதர்களுக்கும் இடையேயான உறவுகளை அழகாகப் பேசியிருக்கிறது. இடையில் பயணத்தில் வரும் மனிதர்களின் மன சஞ்சலங்களையும் தேவைக்கேற்ப அலசியிருக்கிறது. கதை நீளம் குறைவாக இருப்பதாலோ என்னவோ குறிப்பிட்ட சிலர் மட்டுமே கதை முழுக்க இருப்பதுபோல் தோன்றியது. இன்னும் கொஞ்சம் கதை மாந்தர்கள் வந்து போயிருந்தால் சுவாரசியம் கூடியிருக்கலாம்.

நில, ஜல, வாயு, அக்னி, வான் என பர்வங்களாகப் பிரித்து அதன் ஒவ்வொன்றுக்குள்ளும் பொருத்தமாக நாவலை அடக்கிய உத்தி சிறப்பு. கதைக்குப் பொருத்தமாகவும் துருத்தாமலும் மிக இயல்பான உரையாடல்கள் கதைக்குள் ஒன்ற வைத்தன. "செத்துப் போன உன் மக பேசறேன். ஆனா சொர்க்கத்திலிருந்து." எனக்கு ஆனந்தக் கண்ணீர் கசிந்த இடம். இப்படிப் பல இதிலுண்டு. நாயகன் முருகனும் பல சித்தாந்தங்கள் கொண்டவனாக இருக்கிறான். அவனது பேச்சும் செயலும் மிகையாகத் தெரியவில்லை என்பதுதான் இது பொய்ப் பாத்திரம் இல்லையென்பதைப் புரிய வைத்தது.

தமிழ் நாவல் என்றாலும் ஆங்காங்கே வரும் ஆங்கிலச் சொற்களை 'தங்லிஷ்' ஆக எழுதாமல் ஆங்கிலத்திலேயே எழுத ஆசிரியர்கள் முயற்சிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. இதே நாவலில் பல ஆங்கிலச் சொற்கள் நேரடியான ஆங்கிலத்தில் இடம்பெற்று இருக்கின்றன. ஆனாலும் 'கருவைக் கலைக்கிறது எதிக்கலி தப்பு' எனுமிடத்தில் எதிக்கலி அதிக தடுமாற்றம் தந்தது. ஒருமை, பன்மை பிழைகளும் அதிகம் கவனிக்க வைத்தன.😉

தன்னை துரதிர்ஷ்டசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒருத்தி, பல சிக்கல்களில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறாள். ஆனாலும் உடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள், இவளை மீட்க அவர்கள் தகவல் சொல்லவில்லையா? காதல் கணவன் காப்பாற்ற வந்துவிட மாட்டானா 
என பார்வதியுடன் சேர்ந்து நாமும் தவிக்க வேண்டியிருக்கிறது. அந்த இடங்களில் வாசகனுக்கு ஏற்படும் பரபரப்புகளையும் மீறி கதை  தன்போக்கில் செல்கிறது.

தீவுக்குள் சிக்கும் பார்வதியை அவள் நிறைமாத கர்ப்பிணி என்கிற காரணத்தால் உயிருடன் விடுகிறார்கள் அந்த வினோத மனிதர்கள். அங்கே அவளுக்கு புதுமையான மனிதர்களும் அனுபவங்களும் கிடைக்கின்றன. அவளும் தன் பங்குக்கு ஏதாவது இந்த கற்கால மனிதர்களுக்குச் செய்ய நினைக்கிறாள். அதற்காக அவர்கள் அதுவரை அறிந்திடாத நெருப்பின் தன்மையையும் நெருப்பையும் கையாள்வது குறித்து அவர்களுக்குச் சொல்லித் தருகிறாள். அப்போது அங்கே அவள் பற்ற வைத்த ஆதி நெருப்பின் சுவையை அந்த மனிதர்கள் ருசித்த போது வாசகனும் நிமிர்ந்து அமர்ந்து படிக்கிறான்.

பிரசவ வலி அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும் என்பார்கள். இங்கே பார்வதி சுயபிரசவம் செய்துகொள்ளும் போது அந்த வலி நமக்கும் தொற்றிக்கொள்கிறது. அந்த முறையை எழுத்தாளர் அங்கீகரிக்கவில்லை என்று பின்குறிப்பில் சொல்லி இருந்தாலும் கதைக்குத் தேவையான இடத்தில் மிக நியாயமாக அதை மிகச் சரியாகக் கையாண்டு இருக்கிறார். அதற்காக ஒரு கைகுலுக்கல்.

அவ்வளவு நேரம் அவளைக் காப்பாற்றி இருந்த சிசு பிரசவித்ததும் அவளுக்கு என்ன ஆகுமோ? அவளையும் கொன்று விடுவார்களோ என்று பதற வைத்தது உச்சம். அவர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல அவர்களே ஆதி மனிதர்களின் எச்சம் என்று பறைசாற்றும் விதமாக வெல்கிறது லெமூரியர்களின் மனிதம். அதுவரை அம்மனிதர்கள் பற்றி பார்வதிக்கு இருந்த பல குழப்பங்களுக்கும் விடை கிடைத்தது. அம்மண்ணின் நீர் போல் தெள்வாகிறாள்.

அந்தத் தீவின் கறுப்பின மனிதர்களைக் கண்ட போது கருமன், கருப்பி என்கிறாள் பார்வதி. கருப்பன் என்றில்லாமல் கருமன் எனும்போதே முருகன், கருமன் இந்த இரண்டு பெயர்களின் உருவ அளவில் எங்கேயோ ஒத்துப் போவதுபோல் விளங்கியது. அதன் நீட்சியாகவே கருமனின் ஸ்பரிசத்தை முருகன் என பார்வதி எண்ணியபோது திடுக்கிட வைத்தது.

இறுதியில் பார்வதி நிலநடுக்கம், சுனாமி உட்படப் பல இன்னல்கள் கடந்து மீண்டு வந்து எல்லோரையும் சந்திக்கும் இடம் உயிர்ப்பில்லாமல் இருந்தது. தன்னை வெறுத்து ஒதுக்கிய பெற்றோரையும், பிரிவின் ஒவ்வொரு நொடியிலும் தன் இருப்பை உணர்த்திக்கொண்டே இருந்த காதல் கணவனையும் சந்திக்கப் போகிறாள். அதுவரை அவர்களை நோக்கி அவள் தேக்கி வைத்திருந்த உணர்வுக் குவியல்களை எப்படிக் கொட்டித் தீர்க்கப் போகிறாள் என்பது இறுதிக் கட்ட பரபரப்பாக இருந்து மிகச் சாதாரண நிகழ்வாக ஏமாற்றம் தந்தது.

இந்த நாவல் நிறைய விஷயங்களைப் பேசுகிறது. அறிவியல், மானுடவியல், இயற்கைப் பேரிடர், இறை நம்பிக்கை, சாதி, மதம், காதல், காமம், மனிதம், மிருகம், நம்பிக்கை, தன்னம்பிக்கை என அனைத்தையும் பற்றிக் கொண்டே செல்கிறது. சில விஷயங்கள் இயல்பை மீறியதாகப்பட்டாலும் மரியா மனதில் நிறைகிறாள். ஆரம்பத்தில் பார்வதி எப்படி இருப்பாள் என்று பார்க்க வேண்டும் என்கிற தோன்றிக் கொண்டே வந்து இறுதியில் மரியா எப்படி இருப்பாள், அவளைத்தான முதலில் பார்க்க வேண்டும் என்பதில் வந்து நின்றது.

தவிப்பு, பயம், ஆசை, எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் மீறிய ஒரு குறுகுறுப்பு இந்த நாவலை வாசிப்பவருக்கு ஒவ்வொரு பக்கமும் கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பதுதான் இதற்கான வெற்றியாகப் பார்க்கிறேன்.

சுற்றி வளைக்காமல், வளைந்து திரும்பாமல், திருப்புமுனைகள் அதிகம் இல்லாமல் நேராக பைபாஸில் பயணிப்பது போலான ஓர் ஓட்டம் வாசகனை எங்கும் அசைய விடாமல் ஒரே இடத்தில் அமரச் செய்கிறது. அதற்கான எழுத்தாளரது உழைப்பும் தகவல் திரட்டும் எங்கேயும் தோற்றுவிடாமல் தன்னை நிருபித்துக்கொண்டே இருக்கிறது.

மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பது பற்றி அறிய மனித சமூகங்களின் ஓர் ஒப்பீட்டு ஆய்வாக மானுடவியல் இருக்கிறது. அது வளர்ந்த சமூகங்களை மட்டும் அல்லாமல் பழங்குடியின சமூகத்தையும் ஆராய வேண்டும் என்பதை முன்னெடுக்கும் விதமாக இந்நாவல் தமிழில் மானுடவியல் பேசும் முதல் நாவலாக அமைந்திருக்கிறது.

கன்னித்தீவு - எளிமையான மற்றும் நுட்பமான கண்ணிகளால் பின்னப்பட்ட நூல்.

--
நூல்: கன்னித்தீவு
எழுதியவர்: சி.சரவணகார்த்திகேயன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ₹280
பக்கங்கள்: 270

01 January 2020

காதலித்துக் கல்யாணம் செய்து பார்!


உங்களைச் சுற்றி
உலகம் இருக்கும்
வாழ்க்கை அர்த்தப்படும்
மகிழ்ச்சியின் நீளம் விளங்கும்
உங்களுக்கும் வாழ வரும்
நாட்கள் அழகாகும்
காதல் தெய்வமாகும்
உங்கள் சிரிப்பு கேட்டே
பக்கத்து வீடு சிரிக்கும்
வீதி முழுக்க
ஒளிகொள்ளும்
காதலித்துக் கல்யாணம் செய்து பார்!
***
சமையலறையில் கிடப்பாய்
ஒரு முறையேனும்
தினம் பாத்திரம் துலக்குவாய்
முடிந்தால்
சமைத்துக் கொடுப்பாய்
முடியவில்லையெனில்
வீடு பெருக்குவாய்
இந்த உலகமே
உங்களைக் கவனிக்காதபோது
நட்பு உடனிருப்பதை
உணர்வாய்
இந்த சாதி இந்த மதம்
இந்த நிறம் இந்த மனிதன்
எல்லாம்
எதற்கும் ஆகாத
ஏற்பாடுகள் என்பாய்
காதலித்துக் கல்யாணம் செய்து பார்!

***
சின்ன சின்ன சண்டைகளில்
சிரிக்க முடியுமே
அதற்காக வேணும்
யார் தலையீடும் இல்லாமல்
வாழ முடியுமே
அதற்காக வேணும்
அனுபவம் என்ற சொல்லையும்
பக்குவம் என்ற சொல்லையும்
தூக்கிக் கொண்டு வருபவர்களை
ஓட விட முடியுமே
அதற்காக வேணும்
கலாய்த்துக் கொண்டே
வாழவும் முடியுமே
வாழ்ந்து கொண்டே
கலாய்க்கவும் முடியுமே
அதற்காக வேணும்
காதலித்துக் கல்யாணம் செய்து பார்!

-வை.மு.வைத் தழுவி...

08 August 2019

பந்தியில் செய்யக் கூடாதவை

பந்தியில் செய்யக் கூடாதவை
-
இலை கழுவாமலே கூட்டு, பொறியல் வைத்திருப்பது கண்டு ஆரம்பத்திலேயே அதிரக் கூடாது.
'இலையில் ஸ்வீட் எங்கே?' எனத் தேடக் கூடாது.
எல்லாம் வைத்த பிறகு இறுதியாக வரும் ஸ்வீட் கண்டு எரிச்சலடையக் கூடாது.
வேண்டாம் என்று சொன்னாலும் இலையை நிரப்பிச் செல்வதை  எதிர்க்கக் கூடாது.
தெறித்து பக்கத்து இலையில் விழுவதுபோல் அப்பளம் நொறுக்கக் கூடாது.
தூரத்தில் சோறு பரிமாறுபவரை அழைத்து ரசம் கேட்டால் அவர் மோர் ஊற்றுகிறவரைக் கை காட்டுவார். மோர் ஊற்றுகிறவர் ரசத்தை அழைப்பதோடு மட்டும் நின்றுவிட்டு பாயாசத்துடன் வந்து நின்றால் கோபிக்கக் கூடாது.
அடுத்து உட்காருபவர் பின்னால் நின்றபடி உரசிக்கொண்டே இருக்கும்போது முருங்கைக்காய் சுவைக்கக் கூடாது.
500ml வாட்டர் கேனில் பாதி மிச்சமாகி வீணாகிறதே என வருந்தக் கூடாது.
எல்லாக் கோபத்தையும் குழாயைத் திருகுவதில் காட்டி அருகில் இருப்பவர் நனையுமளவுக்கு கை கழுவக் கூடாது.

மாதர் சங்க கலாசாரம்

எப்போதும் வெப்ப வடிவாகச் சுழன்று கொண்டிருக்கும் பெண்களுக்கு பேச ஒன்றுமில்லையெனில் ‘ஓ... அடிமைப்படுத்தும் ஆணினமே’ என்ற ஓலத்துடன் ஒட்டுமொத்த ஆண்களையும் நோக்கிப் பொங்கிப் பாய்கிறார்கள். இந்த மாதிரியான மாதர் சங்க கலாசாரம் தலையின் ஒரு மூலைப் பகுதியின் போஷாக்கு குறையைக் காட்டுகிறது. ‘மனிதி வெளியே வா’, ‘சிங்கப் பெண்ணே’ போன்ற பாடல்களை ஆண்களே எழுதி, ஆண்களை இசையமைத்து, ஆண்களே பாடிக் காட்டும் போது இன்ப மழையில் முழுதாக நனையும் நீங்கள் பிறகு இதுபோல் குற்றச்சாட்டுக் குடை பிடிப்பது உங்களுக்கே அடுக்குமா? சயன கோலத்தில் இருந்த அத்தி வரதரே நின்ற கோலத்தில் அருள் பாலிக்க ஆரம்பித்து விட்டார். நீங்கள் ஏன் இன்னும் ஆண்களின் அடி மன உணர்வு மீது கால் நீட்டி அமர்ந்து இருக்கிறீர்கள்? எங்கள் நெஞ்சின் ஈரப்பதத்தை கொஞ்சமாவது உணரலாமே.
கபம் 🙏

22 September 2018

நிர்வாணம் பழகுதல்: 'ஆப்பிளுக்கு முன்' நாவலை முன் வைத்து...

நிர்வாணம் பழகுதல்: 'ஆப்பிளுக்கு முன்' நாவலை முன் வைத்து...

டிஸ்கி: புத்தக விமர்சனங்கள் அதிகம் எழுதியதில்லை என்பதால் அதற்கான வரையறைகள் ஏதுமின்றி வாசிக்கும்போது நேர்ந்த அனுபவத்தையும் மனதில் பட்டதையும் இங்கே முன்வைக்கிறேன். 

இரண்டு பெண்கள் தாங்கியபடி காந்தி நடந்து வரும் புகைப்படங்களைப் பார்த்தும் வேறு சில கதைகள் கேட்டும் ‘காந்தி ஒரு சல்லிப்பயல், அவர் எப்படி மகாத்மா ஆனார்?’ என்றெல்லாம் வரலாறு தெரியாமல் நண்பர்களுடன் பேசியதுண்டு. ஆனாலும், தெரிந்தோ தெரியாமலோ ஆங்காங்கே அரைகுறையாக காந்தியின் நிர்வாண சோதனைகள் இன்றும் விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இது அவரது மகாத்மா நிலையை எந்த அளவுக்குத் தாக்கியது, எந்த அளவுக்குத் தூக்கியது என்பதற்கான விளக்கமும் தெளிவும் இந்த நாவலில் கிடைக்கிறது. இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை, எது வரலாறு என்பதை எல்லாம் விட்டுவிட்டு ரைட்டர் சொல்லியது போல் வரலாற்றுப் புனைவாகவே அணுகிப் படிப்பது நல்லது. அதற்கேற்றார்போல் மசாலா சேர்த்திருப்பது இன்னும் மணமாகவே இருக்கிறது.

ரைட்டர் மீது ஃபேஸ்புக்கில் ஒரு குற்றச்சாட்டு எழுந்து, நண்பர்களும் நல விரும்பிகளும் குறைபட்டுக்கொண்டனர். 'பெண்களை மையமிட்டு நகைச்சுவையாக எழுதும் சமூக வலைதள பிம்பம் அவரது புத்தகங்கள் வாங்க, வாசிக்கத் தடையாக இருக்கிறது' என்ற கருத்தின் அடிப்படையில் கூறி இருந்தார்கள். புத்தக வெளியீட்டு நிகழ்வில் ரமேஷ் வைத்யா சார் கூட இது பற்றிச் சொல்லும் போது, ‘விடலைத்தனம் இன்னும் அவரை விட்டுப் போகவில்லை’ என்றார். சமூக வலைதள இயக்கங்களை மட்டும் முன் வைத்து யாரையும் மதிப்பிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில் காந்தியின் நிர்வாண கோலம் பற்றி ரைட்டர் வரைந்திருக்கும் இந்த நாவல் குறை சொல்பவர்களின் பார்வையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. பெண்கள் அதிகமாக வலம் வரும் கதைக்களத்தில் அழகான கவிநயத்துடன் தேவதைகளாக உலாவ விட்டிருக்கிறார். 'சற்றே பூசின உடல், வெளிறிய சருமம், சாஸ்வத மந்தகாசம், விளைந்து வளைந்து நிற்கும் வளமான மக்காச்சோளம் போல் தோன்றினாள்’ போன்ற வர்ணனைகளே அதற்கு எடுத்துக்காட்டு. இனி நாவலுக்குள் போகலாம்.
சத்தியமும் அஹிம்சையும் வாசம் செய்யும் ஆசிரமத்தில் ஓர் அற்ப விஷயத்தின் பொருட்டு வதந்திகள் பரவ அதைக் காந்தியே விளக்க முன்வருகிறார். தொடக்கமே இப்படி என்பதாலும் அந்த அற்ப விஷயம் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றியது என்பதாலும் நாவலின் உயிரோட்டம் தெளிவாகப் புரிந்துவிடுகிறது. அதனால் காந்தியின் வேறு அரசியல்களையும், சுதந்திரம், கலவரம், வெள்ளையர்கள் போன்ற கிளைக் கதைகளையும் இதற்குள் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. முழுக்க முழுக்க காந்தியையும் அவரது உடலுக்கான உதவியாளர்களையும் சுற்றியே கதை வட்டமடிக்கிறது. ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளேஇதுதான் ஒன்லைன்.

கஸ்தூரி பா உயிருடன் இருக்கும்போதே காந்தி இந்தப் பரிசோதனைகளைத் தொடங்கி இருந்தாலும் இதில் நாயகி அவர் இல்லை. மகளாக வரும் மநுவுக்கும் காந்திக்கும் இடைப்பட்ட உறவு. மநுவுக்கு முன்பு பிரபாவதி, சுஷீலா நய்யார் போன்ற சீடர்களும் பரிசோதனையில் காந்தியுடன் ஈடுபடுகிறார்கள்.

பா இறந்த பிறகு, காந்தி மநுவிடம் 'நீ உன் கனவுகளை இனி என்னிடம் சொல்’ எனும் போதும், பாவின் அணிகலண்களை மநு அணிந்து கஸ்தூர்பா போல் உணரும்போதும் இருவருக்குமான அலைவரிசை ஒரே கோட்டில் சேர்ந்து கதை பயணிக்கத் தொடங்குகிறது. அந்த வேதிப் பிணைப்பில் ஆசிரமவாசிகள் அனைவரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு மநுவும் பா இருந்த இடத்தில் காந்தியிடம் நிரம்பிவிடுகிறாள்.

மநு வருகைக்கு முன்பு காந்தியின் உடலுக்கு மருந்தாக சுஷீலா இருந்தார். போகப் போக மநு முழுதாக அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் போது அவர்களுக்குள்ளான அரசியல் ஆரம்பிக்கிறது. இதை ‘உடல் அரசியல்’ என்றே சொல்லலாம்.

பதின்ம வயதில் மநுவிடம் இல்லாத உணர்வுகள் கண்டு காந்தி அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்கிறார். தன்னால் கட்டுப்படுத்த முடியாத நிர்வாண நிலையை மநு எப்படி எதிர்கொள்கிறாள் என சுஷிலாவும் வியக்கிறாள். இப்படி மநு எல்லா வகையிலும் எல்லோராலும் கவனிக்கப்படும் ஆளாக மாறுகிறாள்.

காந்தியத்தில் காந்தியை விடவும் உறுதியாக இருக்கும் மநுவை காந்தியிடம் இருந்து பிரிக்கப் படாத பாடு படும் சுஷீலா தனது அண்ணன் ப்யாரேலால் (ப்யார்னா காதல் தான?) மநு மீது கொண்டுள்ள காதலை ஆயுதமாக்கி மநுவை எதிர்கொள்கிறாள். ப்யாரேலாலும் தன் பங்குக்கு பலவித காதல் முன்னெடுப்புகளை எடுத்து காந்தியிடம் தோற்கிறார். ஆசிரமத்தின் பல காதல்களைப் பிரித்த காந்தி இதையும் பிரித்துவிடுவார், எல்லாப் பெண்களையும் காந்தியே ஈர்த்துக் கொள்கிறார் என்கிற ப்யாரேலாலின் குமுறல் காந்தியின் இன்னொரு முகத்தை நமக்குக் காட்டுகிறது. இந்தக் காதல் விவகாரத்தில்தான் மநு தனக்கு மட்டுமே சொந்தம் என்கிற பொசசிவ் உணர்வை காந்தி வெளிக்காட்டுகிறார்.

காந்தி அங்கிருக்கும் எல்லாருக்கும் தந்தையாக இருந்து மநுவுக்கு மட்டும் அன்னையாகிறார். இறுதிவரை மநு கன்னியாகவே இருக்க வேண்டும் என்பதுதான் காந்தியின் விருப்பம் அதற்காக ஏகப்பட்ட சோதனைகளும் வைக்கிறார். அதில் தனது சாமர்த்தியமான செயல்களாலும் முதிர்ச்சியான சிந்தனையாலும் காந்தியே வியக்கும் அளவுக்கு மநு நடந்து கொள்கிறாள்.

ஒரு கட்டத்தில் காந்தி தான் குற்றவாளியாக்கப்படுவதை உணர்ந்து தன்னுடைய செயலுக்கான விளக்கத்தை தான் எதிர்பார்ப்பது போல் யாராவது சொல்ல மாட்டார்களா என ஏங்குகிறார். அதற்காக, உறவினர்கள், நண்பர்கள், சீடர்களிடம் தன் செயலைச் சொல்லி விளக்கம் கேட்கிறார். அதன் நீட்சியாக வரும் தக்கர் பாபாவுடனான உரையாடல்தான் நாவலின் கிளைமேக்ஸ். ஆனால் அதுதான் நாவலின் மையம். இதை நோக்கியே கதை நகர்த்தப்பட்டு இருக்கிறது. தன் பக்கத்து நியாயங்கள் எல்லாவற்றையும் காந்தி எடுத்து வைக்க, அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வேறொரு கருத்தை பாபா முன் வைக்கிறார். அஹிம்சைக்கும் இதற்கும் என்ன தொடர்பு என அவர் கேட்க, ‘தென்னாட்டில் சித்தர்கள் உடல் என்பதை மெய் என்கிறார்கள். அதனால் இந்தப் பிரம்மச்சரியப் பரிசோதனையும் என் சத்தியசோதனையில் ஒன்றுதான்’ என்கிறார். அப்போது, ‘ஏவாள் ஆப்பிள் தின்றதற்கு முந்தைய கனத்துக்குப் போக விரும்புகிறீர்களா?’ என பாபா கேட்க, ஆம் என்று சொல்லும் காந்தி அதுவே மானுட குலத்தின் பொற்காலம் என்கிறார்.

தனது நோக்கத்தைக் கைவிடாத பாபா, மநுவிடம் வேறொரு உத்தியைப் பயன்படுத்தி அந்தச் சோதனையில் இருந்து விலக வைக்கிறார். காந்தியே எதிர்பாராத இந்த முடிவில் பாபா வென்று காந்தி தோற்கிறார். இந்தச் சோதனைகளைக் கைவிட்டதால் தான் மக்கள் மனதை மாற்றும் சக்தி எனக்கு இல்லாமல் போனது என மநுவிடம் காந்தி உடையும்போது எந்த அளவுக்கு அதன்மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பது புரிகிறது.

கண்ணும் கருத்துமாக காந்தியைப் பார்த்துக்கொண்ட மநுவின் ஆயுளை கொஞ்சம் கொஞ்சமாக காந்தி தின்று கொண்டிருந்தார் என்பதில் காந்தியின் சுயநலம் தெரிகிறது. தனது கொள்கைகளுக்காவும் தான் கொண்ட சத்தியத்துக்காகவும் யாரையும் பலிகொடுக்க அவர் தயாராக இருந்திருக்கிறார். இறுதியாக ‘இந்த மகத்தான தியாகத்தில் நீ என் வாழ்க்கைத் துணை ஆகிப் போனாய் மநு’ என்று காந்தி சான்றழிக்கிறார். தன்னை பற்றி கொஞ்சமும் கவலைப்படாத மநுவுக்கு பா, காந்தி இருவரது இறப்பையும் மடியில் தாங்கிய பெருமை கிடைத்திருந்தாலும் காந்தி இல்லாத வெறுமையை யாராலும் அவளுக்கு ஈடுகட்ட முடியாது என்பதாக நாவல் முடிகிறது.

நாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள்
* சிறுவயதிலேயே பெரும் இழப்புகளைச் சந்திப்பவர்கள் பக்குவமடைந்து விடுகிறார்கள். அது ஒருவகையில் வரம்தான்.
* சிறுபிள்ளைத்தனங்களில் சிலாகிக்க ஏதுமில்லைதான். ஆனால் அவை சில சமயங்களில் அதிசயங்களை நிகழ்த்தி விடுகின்றன.
* காந்தியின் மூளையில் ஒரு முலை முளைத்து மநுவுக்காகச் சுரந்து நின்றது.
* உறவுக்குதான் பரஸ்பர சம்மதம் தேவை. துறவுக்கு அல்ல
* அந்தக் கட்டிலின் கீழும் மேலும் நான்கு கால்களும் பிரிந்தேதான் இருந்தன.
* உடை அவிழ்க்கையிலே புலன்கள் ஒவ்வொன்றும் திறந்துகொள்கின்றன. இது ஒரு கொடூரமான தண்டனை
* காந்தியின் அந்திமக் காலத்தின் ராணித் தேனீயானாள் மநு
* காமம் இல்லாத மனிதன் என்பது ஒரு புனைவு

(நல்ல தமிழில் நிறைய சொற்கள். அழகான நடை. கவிதை நடையில் ஒரு நாவல் எழுத ரைட்டர் முயற்சிக்கலாம். ஒரு, ஓர் சரியாகக் கையாண்டதற்கும் ஒற்றுப் பிழைகள் அதிகம் இல்லாமல் இருந்தற்கும் தனித்த கைதட்டல்கள்.)


ஆசிரமம் தாண்டி சில இடங்களுக்கு நாவல் பயணிக்கிறது. அப்போது ஓர் ஊரை வர்ணிக்க, ‘கர்ப்பமுற்ற பெண்ணின் அழகு பெருகித் தெரிவதைப் போல் குளிர்காலத்தில் பனிக்கிடையே கூடுதல் பச்சை வனப்புடன் மிளிர்ந்தது’ என்பது போன்ற அழகியல் பார்வைகள் வாசகன் முகத்தில் அவ்வப்போது தண்ணீர் தெளித்தது போல் இருக்கிறது.

மொத்த நாவலையும் படித்த பிறகு 'ஆப்பிளுக்கு முன்' என்கிற தலைப்பு பொருத்தமாக இருப்பதுபோல் தோன்றினாலும் தலைப்பைப் பார்த்து புத்தகம் வாங்க நினைப்பவர்களுக்கு காந்தியை முன்நிறுத்துவது சிரமமாக இருக்கும். முதலில் யோசித்த தலைப்பான 'நிர்வாணப் பக்கிரி' இன்னும் அழுத்தம் திருத்தமாக காந்திக்கு அருகே நின்றிருக்கும்.

காந்தி உண்மையிலேயே மகாத்மா தானா? சுதந்திரப் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற நிர்வாண முயற்சிகள் தேவையா? இந்த முயற்சி எந்த வகையில் அவரது போராட்டங்களுக்கு ஒத்துழைத்தது? இதில் வெற்றி பெற்றால் என்ன கிடைக்கும் என நினைத்தார்? அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவும் புதுமையான அனுபவத்துக்காகவும் வாசிக்கலாம். இதற்காக தேடித் தேடிப் படித்துச் சேகரித்த தகவல்களை நூல்ப் பிடித்தது போல் எந்த இடத்திலும் பிசகாமல் அழகாகக் கோத்திருக்கிறார். அதிகமாக யாரும் தொடத் துணியாத கதைக்களம், உண்மையையும் புனைவையும் கயிறு மேல் நடப்பது போல் நடத்திக் கூட்டி வருகிறார். மொத்தத்தில் ‘ஆப்பிளுக்கு முன்நாவல் உடல் நினைவில் காடுள்ள மிருகம்.

மனோ ரெட்
22.9.2018