இப்படி நான்
என்றுமே இருந்ததில்லை,
என்னை நானே
புதுப்புது புகைப்படமெடுத்து
புதுப்பித்துக் கொள்கிறேன்.
அழகின்மைக்கும் அழகுக்கும்
நடுவே அழகாக உணர்கிறேன்,
ஆம் காதலுக்கு
களவு போய்விட்டேன்...!!
காய்ந்த காதல் சுரத்தில்
தாகம் கொண்டு
அவனுக்கே தெரியாமல்
என் காதல் முளைத்தது,
சொல்லாத காதலை
சொல்லவும் முடியாமல்
சொல்லவும் தெரியாமல்
வேதனையின் உச்சியில்
தலைகீழ் தவிக்கிறேன்..!!
தயங்கி தயங்கியாவது
என் காதல் உணர்ந்து
தலைவன் அவனாய்
காதல் சொல்ல வருவானோ.?
அவனுடன் என்னை கோர்த்து
வதந்தி ஏதும் வராதோ..??
அடுத்த நாளும் இதையே
எதிர்பார்த்து கிடக்கிறேன்...!!
காதலுக்குள் நெகிழ்ந்து
கனவில் ஆழ்ந்த நேரம்
மனம் வெறுமையாய் புலம்பியது,
என் காதல் நோயால்
பெற்று வளர்த்தவர்களின்
நம்பிக்கை பாழாகுமோ,
சொந்த பந்தங்கள்
அரைகுறையாய் பேசுமோ,
இந்த உலகம் நம்மை
கண்மூடி விமர்சிக்குமோ..??
இம்மாதிரியான
தருணங்களில்
இறத்தல் வேண்டி
இறைவனிடம் இரக்க துடிக்கிறேன்,
என் காதலை விலக்கிவிட்டு
தாயின் முகக்குறிப்பு அறிந்து
என்னை நானே
சமாதானம் செய்கிறேன்..!!
ஆயுள் முழுதும்
நொறுங்கி போவேன்,
அவனை இனி ஒருநாளும்
நினைக்கப் போவதில்லை
என்றுணரும் போது
சங்கடமாக இருக்கிறது,
அவனாவது என்னை
நினைத்திருப்பானா என்று...??
என்னதான் செய்ய
தாமதித்தே உறைத்தது,
இன்று வரை புரியவில்லை
காதலும் ஒருவகை அன்பென
அன்புள்ளவர்களுக்கு தெரிவதில்லை,
தன்னுணர்வு மீண்டு
தலையணை நனைக்கிறேன்,
அறை முழுக்க
கண்ணீர் சிதறல்களுடன்....