www.gamblinginsider.ca

28 June 2015

சவரக்கடை மயிர்கள்..!!-Mano Red




ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக 
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால் 
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின் 
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட 
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு 
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள் 
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும் 
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின் 
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?

23 June 2015

முகூர்த்த நேரம்...!! -Mano Red

மூக்கு சிந்திய
முந்தைய காலம் முதல்,
முகப்பரு கிள்ளிய
முந்தாநாள் வரை
மூக்குத்தி குத்திக் கொள்ள
அத்தனை ஆசை அவளுக்கு...

போகிற போக்கில்
முகக் கண்ணாடியில்
முகம் நோக்கும் போதெல்லாம்
பாதரசம் தேயத்தேய
முகத்தை விட
மூக்கைத் தடவி
வெக்கத்தில் சிவந்து போவாள்..!

ஓசையில்லாத ஆசை
மூக்கில் நிறைவேறுமோ இல்லை
குறையாகுமோ என
அவ்வப்போது கிடைத்த
மூக்குத்திப்பூ குத்தி
முகம் மலர்ந்து கொள்வாள்..!!

அங்கேயும் தெய்வம் தான்
குறுக்கே நின்றது.
குலதெய்வ வேண்டுதலின்
குறை காரணமாக -அவள்
குடும்ப வழக்கங்களில் ஒன்று
மணமேடையிலே
மூக்கு குத்துவது என்ற
கலாச்சார சமாச்சாரம்..!!

அந்நாளும் வந்தது...
பணவாசமும்
மணவாசமும் துறந்து
வனவாசம் துணியும்
துறவியின் மனநிலையுடன்
மணக்கோலத்தில் அவள்
மூக்கைச் சொறிந்தபடி
முக்கி திக்கி நின்றிருந்தாள்..!!

அப்போது சொன்னார்கள்
மணமகன் எதோ
முற்போக்குவாதியாம்,
மூக்குத்தி குத்துவதையும்
பெண்ணடிமைத்தனம் என்பாராம்,
முகூர்த்த நேரம் நெருங்க
மூக்குத்தி கனவும் சுருங்க
அவளோ அவனுக்கு
அடிமையாக கழுத்தை நீட்டினாள்..!!

10 June 2015

கள்ளிப்பால் கனவு...!! -Mano Red

இந்த முறை நிச்சயம்
ஆண் பிறக்குமென
சாமியார் அடித்து சொன்னதில்
தலை கால் எட்டாத
மகிழ்ச்சி அவர்களுக்கு..!

முதலிலிருந்து
மூன்று குழந்தையும்
பெண் என்பதால்,
ஆணாய் பிறக்கப் போகும்
நாலாவதை பார்க்க
நாள் கணக்கில் காத்திருந்தனர்
மாமியார் சாமியார் சூழ....

பரம்பரை காக்க
துரை வரப்போகிறான் என
மாமியார் பரபரக்க,
இனிமேலாவது
புகுந்த வீட்டில்
தகுந்த மரியாதை இருக்குமென
மருமகள் வலி பொறுத்தாள்
போலிச் சாமியாரின்
கேலிப் பேச்சை நம்பி...!!

குழந்தை பிறந்தது
அழுகையும் உடன் பிறந்தது..,!
சுகமான பிரசவம்
பிற சவமாக தெரிந்தது போல
பிறந்தது பெண் என்பதால்...!!
கட்டியணைக்க காத்திருந்தவர்கள்
எட்டிக் கூட பார்க்கவில்லை..!!

தாயும்
பெண் சேயும்
அனாதையாய் வீடு திரும்ப
ஆரத்தியெடுக்க ஆள் யாருமில்லை,
சிறிது நேரத்தில்
தாயின் கண்ணீர் நிரம்ப
வெள்ளிச் சங்கில் ஊற்றிய
கள்ளிப்பாலுக்கு இரையானது சேய்..!!

ஆரவாரமின்றி
கோர உறவினர் சூழ,
பெண்ணாகி பிறந்ததால் என்னவோ
மண்ணாகி போனாள் அவள்..!
விட்டிருந்தால்
விஞ்ஞானி ஆகியிருப்பாள்,
பிழைத்திருந்தால்
பிழைக்க வைத்திருப்பாள்..!!

இப்படியாக
கள்ளிப்பால் ஊற்றியும்,
கழுத்தை நெறித்தும்,
நெல் உமி ஊட்டியும்,
கனவு காணும் முன்பே
பெண்ணால் ஒரு பெண்
புதைக்கப்படுவதும்
ஒருவித
இனப்படுகொலையே..!!

*******************************
உண்மைச்சம்பவம்:
இன்னும் மாறாத சோகம்
கடந்த மார்ச் மாதம் தர்மபுரியில்
அரங்கேறிய கொடுமை

03 June 2015

தோழன் சே குவேரா..!! -Mano Red

கண்களில்
தீப்பொறி பறக்க,
நட்சத்திர தொப்பியுடன்
சேவை செய்ய வந்தான்
ஒரு சே.!!

ஒல்லியான தேகம்
அழுக்குஉடை ,
கலைந்த தலை என
கந்தல் கோல
வசீகரன் அவன்..!!

எளியோரை
ஏமாளிகள் ஆக்கும்
ஏகாதிபத்தியத்தை
ஊதுபத்தி புகையாய்
ஊதித் தள்ளி,
யாருக்காகவும் தன்னை
மாற்றாத பிடிவாதக்காரன்..!!

ஆஸ்த்துமா அவனின்
ஆத்மாவை பிழிந்த போதும்
கொதிக்கும் ரத்தத்துடன்
உயிரை பணயம் வைத்து
போர்ப் பயணம் செய்த
வீர தீர சூரன்.!!

அமெரிக்கா அநாவசியம்
ஆயுதம் அவசியம் என
ஆவேசமாக வெடித்தவன்,
புரட்சி கண்டு
மிரட்சி கொள்ளாமல்
அதிகம் பேசாத
செயல் புயல் அவன்..!!

மயங்கும் வரை அடி
சுருளும் வரை உதை
மரண வலியிலும்
மூர்க்கமான கொடுமை தாங்கி
வேதனையுடனே
சாதனை படைத்தவன்..!!

இம்மி பிசகாத
கம்யூனிச புரட்சிகாரன் ,
சோர்ந்து போகாத
சோவியத் ஆதரவாளன் ,
வெற்றியோ தோல்வியோ
வாழ்வோ மரணமோ
அனைத்தையும்
அணைத்து உறங்கியவன்..!!

பூப்பூத்த காதல் துறந்து
துப்பாக்கி காதல் ஏற்றவன்,
சுருட்டு புகையுடன்
எதிரிகளை சுருட்டியவன்..!!
தோழர் என்பதை விட
தோழன் எனும் போதே
இன்னும் போதை தருகிறான்..!!