www.gamblinginsider.ca

14 August 2017

ஞாயிறு உளறல் 2

-
ஆதிகாலத்து மலர் எப்படி இருந்திருக்கும்? குரங்கிலிருந்து மனிதன் வந்தான் சரி?! மலரின் பரிணாமம் எதிலிருந்து தொடங்கியிருக்கும்? எந்த வடிவத்தில், என்ன மணத்தில், என்ன நிறத்தில் இருந்திருக்கும்? இந்தக் கேள்விகளை மனதில் எழுப்பியது அன்று சாப்பிட்ட பழைய சாம்பார். முந்தைய நாள் இரவில் செய்த சாம்பாரை சுட வைத்து மறுநாள் மதியம் சாப்பிட்டதுண்டா? கெட்டுப் போக விடாமல் சுட வைத்து சுண்டச் செய்துகொண்டே இருந்தால் அதன் சுவையும் மணமும் மாறிக் கொண்டே இருக்கும். இப்படித்தான் மலரும் மனிதனும் மற்றவையும் பரிணாமத்தின் சூடு தாங்காமல் தற்போதைய வடிவத்தில் இருக்கலாமென்கிற பதிலும் சாம்பாரிலேயே கிடைத்தது.
மனிதனின் பரிணாமம், என்ன வளர்ந்து என்ன லாபம்? தனக்குத் தேவையானது கிடைத்துவிட்ட பிறகு, 'யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்கிற மனநிலை மனிதர்களைச் சந்திக்கும்போது பரிணாமம் என்பது சமூகம் சார்ந்ததா, தனிப்பட்ட மனிதன் சார்ந்ததா? என்று குழப்பமாக இருக்கிறது. அடிமையாக மாறி அனுதாபத்தையும் அபிமானத்தையும் பெற்று மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாமல் தன் காரியத்தில் சுயநலமாக இருப்பவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்களாம்! 'தேவைக்காக சுயநலமாக இருக்கிறேன்' என்று சொல்பவர்களே 'எல்லையிலே ராணுவ வீரர்கள்...' என்று சொல்ல ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள். இந்தக் காலத்தில் சுயநலமாக இருப்பது தற்காப்பு விஷயமென நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
ஆனால், 'தற்காப்பை விட தன்மானமே முக்கியம்' என்று முரசொலி பவள விழாவில் #கமல் பேசியிருக்கிறாரே. மற்ற இடங்களில் எப்படியோ சொந்தக்காரங்க வீட்ல இரண்டும் செல்லாது. 'விருந்தாளிக்கு பொறந்த பய' என்பது பழமொழியா, வசையா, சொலவடையா என்று அர்த்தம் தெரியாமல் சொந்தக்காரங்க வீட்டுக்குள் காலடி வைக்கும்போதுதான் டிவியில் கூட்டுக் குடும்பம் பற்றிய பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருக்கும்.
கற்காலத்திலேயே மனிதன் கூட்டுக் குடும்பமாகவும், வீட்டு விலங்குகளையும் வளர்க்கத் தொடங்கிவிட்டான். ஆனால் இந்தப் பொற்கால கூட்டு குடும்பத்தில் விரிசல் விழுந்துவிட்டது; குருவி கட்டிய கூடும் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் 'அந்தப் பரணி பயதான்' என்று சொல்ல மனமில்லை. 'காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி'. பிக்பாஸ் பார்த்தாவது கூட்டுக் குடும்ப முறைகள் மீண்டும் தளைக்கும் என எதிர்பார்த்தால் காயத்ரியிடம் #பிக்பாஸ் கேட்ட கேள்விகளும், #Sarahahவில் நம்ம ஆள்கள் கேட்ட கேள்விகளும் எதிர்காலத்தை இன்னும் தனிமைப் படுத்தி இருக்கின்றன.
தனிமை மோசமானது. சுற்றிலும் வெண்மை இருந்தாலும் கருமையை உணர வைக்கும். உள்ளிருக்கும் சிறிய கடவுளையும் கொன்று பெரிய மிருகத்தை வளர்த்தெடுக்கும். இந்தத் தனிமைதான் கடந்த வாரம் Prabhu Versioni நண்பனைப் பலி வாங்கியது. பெருமைக்கு இல்லையென்றாலும் பேச்சிற்கு சொல்கிறேன். ஃபேஸ்புக்கில் 4000 நண்பர்கள் இருந்தும் அவனது தனிமையை ஆற்றுப்படுத்த அவனருகிலோ, போன் உரையாடலிலோ ஒருவரும் அவனுடன் இல்லை. இருந்திருந்தால் தற்கொலை முடிவுக்கு போயிருக்க மாட்டான். Virtual உலகம் வேறாகவும் நம்மைச் சுற்றியுள்ள விருப்ப உலகம் வேறாகவும் இருக்கும்போது, தனிமை மரணத்தையும் ருசிக்கக் கேட்கிறது.
மரணம் என்றதுமே ஒருவித கிளர்ச்சி எல்லோருக்கும் ஏற்படும். என்னைப் பொறுத்தவரை மரணம் எப்படி இருக்க வேண்டுமெனில், விளையாட்டு பற்றிய சினிமாவின் இறுதிக் காட்சிகளில் போராடி வெற்றி பெற்று ஜெயித்தவன் ஆர்ப்பரிப்பானே, அதை இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கும் அந்த நொடிகளில் நம் உடலும் புல்லரித்து, கண்களில் நீர் ததும்பி, ரத்தமெல்லாம் வெடித்துப் பாய்ந்து, மொத்த உடலும் படபடத்து சிறகு முளைத்துக் கொண்டிருக்கும்போது உயரமான மாடி மீதேறிக் குதித்து பறந்தபடி மரணத்தை உணர வேண்டும். 😍 #உளறல்_தொடரும்
Mano Red / 13.8.17

ஞாயிறு உளறல் 1


பஸ் கிளம்பியது. பதிவு செய்யப்பட்ட இருக்கை என்பதால் இரு கை, கால்களையும் 75டிகிரியில் நீட்டிச் சாயும்போது ஒரு குரல். 'தம்பி ஜன்னல் சீட் பக்கம் நீங்க மாறிக்கோங்களேன்'. (பேருந்து வரலாறுகளைத் திருப்பிப் பார்த்தோமேயானால் ஜன்னல் சீட்டுக்காக எச்சில் துப்புதல், செருப்பு போட்டு சீட்டு பிடித்து வெட்டுக் குத்து நடந்த கதைகளெல்லாம் கேட்டிருக்கிறோமே.) காலம் மாறுவதற்கு ஏற்ப கால் வலிகளும் மாறி வருவதன் பரிணாம வளர்ச்சி இது. ஜன்னல் ஓரத்தில் இல்லாமல் இந்தப் பக்கம் உட்கார்ந்தால் நடைபாதையிலும் காலை நீட்டி இஷ்டத்துக்கு உறங்கலாம் என்பது அவர் கண்ட சுகமாக இருக்கலாம். அவர் வயதுக்கு மரியாதை கொடுக்கிறோமோ இல்லையோ மனம் விட்டுக் கேட்டுவிட்டார் என்பதற்காக இடம் மாறி அதே 75டிகிரியில் மறுபடி சாய்ந்தேன்.
மொபைல் நோண்டாத, திரைப்படம் போடாத பஸ் பயணம் பல நினைவுகளைக் கிளறிவிடும். வீட்டிற்கும் நான் சேரப் போகும் இடத்திற்கும் இடையே இருக்கும் பிரிவுக்குப் பாலம் அமைத்து பலமுறை பூச்செடிகள் வைத்தது பஸ் பயணங்கள் மட்டுமே. ஹாஸ்டலில் படிக்கும் காலங்களில் வீட்டிலிருந்து விடைபெறும்போது அழாமல் பஸ்க்குள் அழுததுண்டு. எதற்காக, எங்கிருந்து எங்கு பயணப்படுகிறோமோ அதனுடைய எதிர்காலம் பற்றி பஸ்ஸில் அதிகம் சிந்திப்பதுண்டு. சாதித்தே ஆக வேண்டுமென்று தனியொரு ஆண்டியாக மனதில் மடம் கட்டுவதுண்டு. பஸ்ஸில் இருந்து இறங்கும்போது, அந்தத் திரைக்கதை இறந்த காலமாகி 'ஐய்யய்யோ! வேலைக்குப் போக நேரமாகிவிட்டதே' என்கிற நிகழ்கால டைம் மிஷினில் காலடி வைத்தவுடன் இயந்திரம் ஓடத்தொடங்கிவிடும்.
'வேலை கிடைப்பதே பெரிதாக இருக்கும் இந்தக் காலத்தில் வேலைக்கேத்த கூலியை எதிர்பார்ப்பது மனசாட்சியற்ற தன்மையைக் குறிக்கும்.' என எப்படியெல்லாம் சமாதானம் ஆகி வேலை பார்க்க வேண்டுமோ அப்படிச் சுத்தமாக சம்பளம் குறித்து எண்ணாமல் வேலை பார்ப்பது நல்லது. தீர்க்கதரிசி ஸ்டாலினின் 'நமக்கு நாமே' எனும் சொல் எத்துணை தீர்க்கமானது. ஒருசிலர் சம்பளத்தை வைத்து அன்பு காட்டுவதைத் தீர்மானிக்கிறார்கள். சேலரி கிரெடிட் ஆகும்போது காட்டும் அன்பை மாசக் கடைசியில் காட்டுவதில்லை.
The Red Balloon என்கிற பிரெஞ்ச் படத்தில் ஒரு சிறுவனுக்கு சிவப்பு நிறத்தில் ஹீலியம் பலூன் கிடைக்கும். அதை ஓர் உயிராக மதித்து மழையில் நனையாமல் பத்திரமாகக் காத்து, வீடு வந்தவுடன் பறக்கவிடுவான். அவன் கையிலிருந்து விடுபடப் போகிறோம் என்றுணர்ந்து ஹீலியம் பலூன் உயிர் பெறும். அவன் எங்கு சென்றாலும் கூடவே போகும். இப்படி உயிருள்ள, உயிரற்ற என எந்தப் பொருளாக இருந்தாலும் நாம் காட்டும் அன்பு கண்மூடித்தனமாக இருந்தால் நேசிக்க வசதியாக இருக்கும். பணத்தை முன்னிறுத்தி அன்பை நிர்ணயித்தால் உயிருள்ள பொருளும் உயிரற்றதாகிவிடும். அந்த மாதிரி மனிதர்களிடம் பொறுமை காட்டினால் மட்டுமே நாம் உயிர்ப்புடன் இருக்க முடியும்.
'பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா' போன்ற பிரபல டெம்ப்ளேட் வசனங்கள் எல்லாம் நம் டெம்போவை எகிற வைத்து 'ஒவ்வொரு செயலுக்கும் உடனே எதிர்வினை ஆற்றி விடு' என்று சொல்லும்போது அமைதியாக இருக்க முடியாதுதான். காவிய மனோகரன் பக்கம் பக்கமாக வசனம் பேசி முடித்ததும் 'பொறுமையாக இரு' என்கிற ஒரே வார்த்தையில் ஒவ்வொரு அவரது தாயார் கட்டிப் போடுவார். அப்படி நம்முடன் யாருமில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் இல்லாமல் அன்றாட வாழ்க்கை இல்லையென்றானபின் பொறுமை மிகமிக அவசியம். 4G வேகத்திற்கு அருகில் நம்முடைய இன்ஸ்டன்ட் கோவமும் நிற்காது. சமூகத்தை சமூக வலைதளங்களால் திருத்த முடியும் என்று நினைத்து இதில் 24×7 கடமையாற்றினால் இறுதியில் தற்கொலை நிச்சயம். நான் கற்றுக்கொண்ட பாடங்களில் மிக முக்கியமானது ஃபேஸ்புக்கில் நம்முடைய உளறல் தனிப்பட்டதோ, பொதுப்பட்டதோ அதற்குவரும் கருத்துகளுக்கு அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது.
சார்லி சாப்ளினின் The Circus படத்தில் ஒரு காட்சி வரும். குதிரைக்குப் பயந்து தூங்கிக் கொண்டிருக்கும் சிங்க கூண்டுக்குள் நுழைந்துவிடுவார். சத்தம் போடாமல் வெளிய வர முயற்சி செய்யும்போது கூண்டிற்கு வெளியே ஒரு நாய் வந்து சத்தமாகக் குலைக்கும். 'அட நாயே! குரைக்காமல் கொஞ்ச நேரம் அமைதியாக இரு' என்று சைகை காட்டுவார். அந்த நேரத்தில் சிங்கமும் அசைந்து கொடுக்கும். என்ன செய்வதெனப் புரியாமலும் நாயின் வாயைப் பொத்த முடியாது என்பதாலும் எதற்கும் ஆகாத தனது காதைப் பொத்திக்கொள்வார் சாப்ளின்.
ஆக... சரியோ, தவறோ நமக்குப் பிடித்ததை தயங்காமல் செய்யலாம். அதைப் பார்த்து எந்த நாய் எங்கிருந்து குலைத்தாலும் நம் காதை முதலில் பொத்திக்கொள்வோம். பின்னால் வரப்போகும் சிங்க ஆபத்துகளை அப்புறம் பார்க்கலாம்.😍 #உளறல்_தொடரும்
Mano Red / 6.8.17