www.gamblinginsider.ca

23 December 2016

சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் இருக்கிற உறவு! - Mano Red



அவனைத் தேடி பிரயோஜனம் இல்லை
அவனைத் தேடுவதிலும் தப்பில்லை.
என் முதுகிலேறி
பாவப் பயணம் செய்திருக்கிறான்.
எனக்குள் இருந்த
மிருகத்தை இழுத்து
வீதியில் விட்டவன்
கடவுளை இழுக்கையில்
கை கழுவிப் போயிருக்கிறான்.
தனிமை என்கிற தவத்தில்
கண் மூடும் கணம் பார்த்து
நிமிரத் துடிக்கும்
நாயின் வாலாக
இமை துருத்தி
எனை வருத்தியிருக்கிறான்.
காதலில் காமம் பழகி
காமம் கழிந்து
காதல் துளிர்க்கையில்
காதல் தவிர்த்து காமம் மட்டும் உணரென்று
காறி துப்பியிருக்கிறான்.
கிழிந்த சட்டைக்காரனின்
ஒட்டிய வயிறு காணும்போதெல்லாம்
அதன் மீதேறி
அம்மண சம்மணம்போட்டு
கவளச் சோறு தின்றவன்
எச்சில் கையால் மனிதம் ஓட்ட
எத்தனிக்கும்போது
மரணிக்கத் துடித்திருக்கிறான்.
அவனுக்கும் எனக்குமான உறவு
பல்லின்மேல் நாக்கு படாத
பகட்டு வார்த்தைகள் போல,
சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும்
இடையில் இருக்கும் வெற்று பிம்பம்!