www.gamblinginsider.ca

29 November 2016

அம்மாக்களைப் பெற்ற மகள்கள்! - Mano Red


முதல் குழந்தை பெண் என்றதால்
அம்மாவிடமும் மாமியாரிடமும்
பேச்சு வாங்கி,
அடுத்ததையும் பெண்ணாகப் பெற்றெடுத்து
அத்தனை பேரையும் எதிர்க்கிறாள்!

அப்பாவிற்குப் பிடித்த பெண்ணாக
தனக்கென வைத்திருந்த இடத்தை
மகள் வந்ததும்
விட்டுக் கொடுத்து
விலகி நிற்கிறாள்!

தோற்றுவரும் பொழுதுகளை
தேற்றுவதற்காக
‘பொம்பளப்புள்ள அழக்கூடாதுடி” என்று
அழுது அணைத்து
அன்புச் சூடு பரப்புகிறாள்!

தகப்பன் இல்லாத மகளின்
தனிமை நாட்களை இனிமையாக்க
தன்னை எரித்து
தன்னை உருக்கி
தன்னை வார்த்துத் தங்கமாக்கி
தனியே, மகளை கரை சேர்க்கிறாள்!

காதல் வாழ்க்கை தேடி
கடந்து போனவளிடம்
கணவனுக்குத் தெரியாமல்
கடிந்து பேசி
கனிந்து உருகி
மகள் பெற்றெடுத்த மகள் குரலை
காது வழியே இதயம் அனுப்புகிறாள்!

இப்படித்தான்
மகள்களைப் பெற்ற அம்மாக்களைவிட
அம்மாக்களைப் பெற்ற மகள்கள்
அதிகம் இன்புறுகிறார்கள்!

24 November 2016

காடழிக்கும் காலன்! - Mano Red



மைக்ரோ சிப்புகள் உலகத்தில்
மரப் பட்டைகளைக் காணாத
மரங்கொத்தி
அத்தனை பெரிய அலகை
உடைத்தெறியத் துணிகிறது!
.
இலந்தையும் இலுப்பையும்
கடுக்காயும் வேம்பும்
கம்ப்யூட்டர் வந்த பிறகு
காய்ப்பதே இல்லையென
கிளி ஒன்று சொல்கிறது.
.
வெண்மை நிறப் பூக்களும்
நீண்ட காம்புகளில் காய்களுடன்
உயர வளர்ந்திருக்கும்
பொந்தன்புளி மரம்தான்
அந்தக் காட்டின் மொத்த அழகன்.
அவன் சொல்கிறான்
“மனிதனின் மூதாதையர்
இங்கிருக்கும் மரப் பொந்துகளில்
வாழ்ந்தவர்களாம்!”
.
“காடு இல்லாத ஊரில்
காசு இருக்கும்
மாசு இருக்கும்
உயிர் இருக்காது”
என்று சொன்ன அரசமரம்
ஆற்றாமையால் அழுதுவிட்டது.
.
“இயற்கையை ஊனமாக்கி விட்டு
செயற்கையை வளர்க்க வேண்டுமா?”
காலில் மிதித்துவிட்டு
தும்பிக்கையை அசைத்தவாறு
முறைத்தபடி
தாயிடம் ஓடுகிறது குட்டியானை!
.
“காடில்லையேல் வீடில்லை
என்பதை மறந்து
கொஞ்சம் கொஞ்சமாக அழித்தும்
அழிந்தும் வருகிறீர்கள்” என்று
என்னுடன் பேசிக்கொண்டு வந்த
சிங்கத்திடம் நான் சொன்னேன்
“தன்னுயிர் போல
மண்ணுயிரை நினைக்காத
காடழிக்கும் காலன் நாங்கள்!”


08 November 2016

பெண்ணே! ரௌத்திரம் பழகு - Mano Red




கேள் பெண்ணே கேள்!
இது நகரப் பேருந்தல்ல
நரகப் பேருந்து.
உனக்காகப் பேசும் பெண்ணியவாதிகளை
பேருந்துகளில் தேடாதே!

சீண்ட வரும் சிறு நரிகளை
கவனத்தில் கொள்!
அற்ப சுகம் தேடும் கயவர்கள் கூட்டம்
உன் பின்னால் நிற்கலாம்
அதிர்ந்து விடாமல் ஆத்திரம் கொள்!

“பெண் என்னால் என்ன செய்துவிட முடியும்?”
என்று எண்ணாமல்
ரௌத்திரம் பழகு!
சிறுமை கண்டு பொங்கு!

கைப்பையில் ஊசியை வைத்திரு
ஏதாவது கை 
உன்னை நோக்கி நீண்டால்
பாம்பாக சீறி விஷம் ஏற்று!

கடவுளாக வணங்கிவிட்டு
கையைப் பிடித்திழுப்பார்கள்
கலங்கி விடாதே!
தவறு செய்யும் கள்ளனை
தட்டிக் கேட்க யாரும் வரமாட்டார்கள்
நீ தலை குனியாதே!
மொத்த ஆண்களும் தலை குனியட்டும்.

பெண்ணே! உனக்கு எப்போது 
தைரியம் வருகிறதோ
உனக்காக பெண் ஒருத்தி எப்போது
ஓடி வருகிறாளோ
பெண்களுக்குள் ஒற்றுமை எப்போது 
ஓங்கி நிற்கிறதோ
அன்றுதான் பெண்ணே 
முழுமையாகப் பாதுகாக்கப்படுவாய்!