காலையில் மனிதன் அவன், மாலையில் மதுவுக்குள் மயங்கி பொய் பேச தெரியாத மகான் ஆகி விடுகிறான்.
சொல்ல முடியாத உண்மைகள் அவன் மூளையின் அனுமதியின்றி பீறிட்டு வரும் வேளையில், யாரும் கேட்க முடியாத வரிகளில் கருத்துக்கவி பாடுவான்..!!
பேருந்துகளில் அவன் சொற்பொழிவுக்கு எதிரிகள் நிரம்ப உண்டென்றாலும், ரசிகர்களும் உண்டு என்பது தான் உண்மை..!! ஒன்றுமறியா அப்பாவி போல என்ன கேட்டாலும் சிரிப்பான்..!!
நாட்டின் நடப்புகள், நாகரீக வளர்ச்சிகள், அரசியல் நிறைகுறைகள், உலக தலைவர்கள், என விரல் நுனியில் கணினி வேக தகவலுடன் பேசுவான்.!!
ஒருவருடம் காத்திருந்த உண்மைகள், ஒரு கோப்பை மது உட்சென்று முடுக்கி விடும் போது, யார் தடுத்தாலும் உண்மைகள் உயிர் பெறுவதை முடக்க முடிவதில்லை..!!
கோப்பை மதுவுக்கு அவன் மயங்கினால், சாதாரண மனிதன் சமத்துவம் பேசுவான், காதல் வெறுத்தவன் கவிதை சொல்வான், ஒன்றுமறியாதவன் உலகம் பேசுவான், கோவக்காரன் கோமாளி ஆவான், கோழை வீரம் பெறுவான்..!!
அவன் வார்த்தைகள் பொய்யல்ல..!! சிறை பிடிக்கப்பட்ட உண்மைகள் இதயத்திலிருந்து சீறிப்பாய்ந்து, போதை தந்த போதனை முடிந்து காலையில் என்னவென்று கேட்டால் அது நானாக இருக்கமாட்டேன் என கூறுவதில் தான் அவன் அவனாக இருக்கிறான்..!!