www.gamblinginsider.ca

10 September 2013

50 கிலோ தாஜ்மஹால்....!!!

அந்தப்புர அழகிகளும் 
அவனிகை விலக்கி 
அதிசயமாய் அசந்து நிற்க, 
அத்தனை அம்சங்களும் 
அதிகபட்சம் அவள்கொண்டு 
அன்னமாய் நடந்து 
அலட்டிக் கொண்டு போனாள்..!!! 

தங்கமுலாம் தாவணியில் 
தரை துடைத்து அவள் நடக்க, 
வயதறியா வளையலோ 
வம்பிற்கு இழுத்தது..!! 

கவிதை உரைக்கும் காதணிகளும், 
கள்ளமில்லா கொலுசுகளும், 
அமர நேரமின்றி 
அடவு கட்டி ஆடி தவித்தது..!! 

களவு போன மேகம் 
கூந்தலாய் சிறகடித்த போது, 
காகித விரல் அனிச்சையாய் 
கட்டுக்குள் கொண்டு வந்தது...!! 

அவளின் 
பூ வாசனையில் 
பூலோகம் தனை மறந்தது, 
மூக்குத்தி சிரிப்பில் 
மூன்றுலகமும் மூர்ச்சை அடைந்தது..!! 

அவள் அழகை, 
வருண பகவான் வாய் வலிக்க 
வர்ணித்து விட்டான் மழையாக, 
சூரியனோ சுட்டெரித்து சிவப்பை 
சூடிக் கொண்டான் வெக்கமாக...!! 

அத்தனை பேரும் 
"ஆ"வென வாய் திறந்து நிற்க, 
அவளோ மயிலிறகோடு 
அளவளாவி கடந்து போனாள்..!! 

அபூர்வம் கண்ட மிதப்பில் 
அதிர்ச்சியிலிருந்து மீண்டு, 
அம்பது கிலோ தாஜ்மகலை 
அருகே சென்று நான் தொட, 
அத்தனையும் சரிந்தது 
அலைநுரையாய் மறைந்தது..!!! 

இத்தனைக்கும் காரணம் 
இம்சையான கனவு, 
என் கனவு கலைந்தால் 
நான் என்ன செய்வது..???