www.gamblinginsider.ca

16 September 2013

மகனுக்கு ஒப்பாரி....!!!

வானம் வறண்டிருச்சு, 
வம்சம் சரிஞ்சுடுச்சு, 
வடக்கு நோக்கி போனவனே 
வராம எங்க போன..?? 

விடியக் காத்திருந்து 
விதியோட போராடி 
வயித்துல சுமந்த உன்ன 
வரப்புல புதைக்கனுமா...??? 

முழு நிலவும் போயாச்சு 
முகம் பார்த்து நாளாச்சு, 
முட்டாப் பய மவனே 
முகம் காட்டாம போனாயே...?? 

வெவரம் கெட்ட பய உன்ன 
வெளிநாடு அனுப்பி வச்சா 
வெவகாரம் ஆகும்முன்னு 
வெளங்காம போச்சுதடா..?? 

கஷ்டகாலம் தீர 
கடல் கடந்து போனவனே, 
கஷ்டம் இன்னும் தீரலையே 
கடலுல கரைஞ்சு போனாயே..??? 

எவன் கண்ணு வச்சானோ 
எமன் கண்ணுல நீ விழுந்த, 
எதிர்பாரா நேரத்துல நம்ம 
எதிர்காலம் செத்துடுச்சே..?? 

ராசா உன்ன நினச்சு 
ராவெல்லாம் அழுதாச்சு, 
கண்ணே உன்ன நினச்சு 
கண்ணு பூத்துப் போயாச்சு..!! 

ஆக்கி வச்ச சோறு கூட 
ஆறித்தான் போகலயே... 
எங்கிட்ட சொல்லாம நீ 
எமன் கூட போனாயோ..?? 

உன்ன நினச்சு 
உசுரு கிடந்து துடிக்குதுடா, 
நான் பெத்த மகனே 
நாதியில்லாம போனயடா...???