www.gamblinginsider.ca

05 September 2013

பெண்ணே, நாய்கள் ஜாக்கிரதை...!!

பெண்ணே, 
அருமையான உன் அறிவால் 
பெருமை பெற்று வலம் வருகையில் 
சிறுமை என எண்ணி நகைக்கும் 
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!! 

பெண்ணே, 
தோல்வி நிலை வந்தால் 
வேள்வித் தீயென வெகுண்டெழு, 
கேள்வி கேட்டு தடுக்கும் 
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!! 

பெண்ணே, 
நச்சை மனதில் சூழ்ந்து 
இச்சை கொண்டு, 
எச்சை மிருகமாய் அலையும் 
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!! 

பெண்ணே, 
குற்றம் ஒன்று காணும் முன்பே 
அற்றம் என எண்ணி விடாதே, 
சுற்றம் பல குறை சொல்லும் 
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!! 

பெண்ணே, 
கோபம் உனக்கு வேகமெனில் 
சாபம் உன்னை மூளும், 
தாபம் சூழ அருகே வரும் 
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை...!! 

பெண்ணே, 
முட்டி மோதி முயன்றால் 
கட்டித் தங்கமாய் மின்னலாம், 
வெட்டிப் பேச்சுக்கு அழைக்கும் 
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை..!! 

பெண்ணே, 
எதற்கு வேண்டுமோ பொறுமை 
அதற்கு மட்டுமே பொறுமை கொள்... 
இதற்கு புறம்பாகி எதிர்க்கும் 
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை..!! 

பெண்ணே, 
கீதம் பாடும் குரலால் 
இதம் கொண்டு நீ பேசுகையில் 
வதம் செய்ய துடிக்கும் 
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை..!! 

பெண்ணே, 
கூடு கட்டி நீ வாழ்ந்தாலும் 
மாடு போல அருகே வரும், 
கேடு கெட்ட எண்ணம் கொண்ட 
அந்த நாய்களிடம் ஜாக்கிரதை..!!