காற்றைக் கிழித்துக் கொண்டு
கதாநாயகன் வருவான்,
மழைத்துளி போல
நாயகி சிரிப்பாள்,
பூக்கள் காதலிக்கும்,
பூமி வெக்கப்படும்....
என கதைசொல்லிகள்
மனிதன் முதல்
மரம் செடி கொடி வரை
உருவக ஒப்பனை செய்தே
உதயம் செய்கிறார்கள்...!!
கதை சொல்லிகள்
கற்பனையில் மிதந்தாலும்,
வார்த்தைகளின் வழியே
கனவு நாயகர்களை
நெஞ்சுக்குள் விதைக்க
தவறுவதில்லை...!!
புராண கதை சொல்லிகளும்
வள்ளல்கள் தான்...!!
கனவுகளையும்
கற்பனைகளையும்,
அள்ளிக் கொடுத்து
புராண காலம் நோக்கி
இழுக்கிறார்கள்...!!
நிழல் மனிதர்களை
நிஜமாக்கி,
வெற்றிடங்களை
சித்திரமாக்கி
கண்முன் பெரிய
காட்சித் திரை விரிக்கிறார்கள்..!!
வாசகன் கூட
யாசகன் தான்,
கதையின்
அடுத்தகட்ட காட்சிகளை
வாசிக்க வாசிக்கவே
யாசகம் பெறுகிறான்...!!
கதைசொல்லிகள் யாரோ அல்ல
தனிமையின் நண்பர்கள்..!!
கதைகள் வெறும்
கதைகள் மட்டுமல்ல,
உணர்ச்சிகளை
உறைய வைத்து,
கதாப்பாத்திரங்களுடன்
பழகவிடும் உணர்வுகள்..!!