ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
எங்கோ ஒரு மூலையில்
ஒரு சிவப்பு புரட்சிக்காரன்
ஒளிந்து கொண்டுதானிருக்கிறான்..!!
விளக்கை ஏற்றி வைத்த
தீக்குச்சி ஒன்று
பிரகாசம் தந்துவிட்டு
தன்னை மாய்த்துக் கொள்வது போல
எத்தனை எத்தனை
சிவப்பு சிந்தனையாளர்கள்..!!
மரம் சும்மா இருந்தாலும்
காற்று சும்மா இருக்க விடாது
இப்படியாகப்பட்ட நிலையில்
புரட்சி செய்ய துணிவு வேண்டாம்
உரிமைகளின் வெறி
ரத்தத்தை சூடேற்றினால் போதும்..!!
இந்த சமுதாயம்
எனக்காக ஒன்றும் செய்யாத போது,
நான் ஏன் இந்த சமுதாயத்திற்காக
செத்து சொத்து இழக்க வேண்டும்
என்கிறவர்கள் தலை குனியுங்கள்..!!
பாட்டாளிகளிடம் புடுங்கிய பணத்தை
பாட்டாளிகளுக்கு செலவழிக்காமல்,
முதலாளிகளின்
மூக்கு சொறிந்து விட
செலவழிப்பதற்கு பதில்
நாக்கு புடுங்கி சாகலாம்..!!
சமூக சீர்திருத்தம்,
சமத்துவம்,
சம உரிமை
இவற்றை காக்க
தலைகுனிவும் தேவையில்லை
தலைவனாகவும் அவசியமில்லை
சொரணையிருத்தல் போதும்..!!
இப்போதெல்லாம் இப்படியிருக்க
சிவப்பு சிந்தனை
தன்னை தானே
அழிக்கும் காட்சி பார்த்து,
எல்லோரையும் போல
ஓரமாக ஒதுங்கி நின்று
வருத்ததுடன்
வேடிக்கை பார்க்க
தொடங்கி விட்டேன்..!!