ஒரு கண்ணை
ஓரமாய் திறக்க வழியின்றி
அநீதியின் அவலங்களை
கண்மூடித்தனமாக
வேடிக்கை பார்த்தாள்
தேவையில்லாத- (அ)நீதி
தேவதை..!!
அங்கே ஒரு கும்பல்
தண்டனை ஏதுமில்லையென
மண்டை மூளை சொன்னதாய்
வெம்பிய ஆசையுடன்
நம்பிக்கையாய் களவாடியது..!
(அ)நீதி தேவதையும்
சம்மதமென திரும்பி கொண்டாள்..!!
அங்கே ஒரு கும்பல்
போதை வெறியில்
பேதை ஒருத்தியின்
சதை தின்று முடித்த போது
காதைப் பொத்தி
(அ)நீதி தேவதை ஓடி விட்டாள்..!!
அங்கே ஒரு கும்பல்
ஊரை அடித்து
உலையில் ஏற்றி
விலை பேசி கொண்டிருந்த போது,
நிலைகுலையாத (அ)நீதி தேவதை
அலையாய் பயந்து சிதறினாள் ..!!
அங்கே ஒரு கும்பல்
உயிரையும் - தலை
மயிராய் எண்ணி
கொன்று தீர்த்து
வென்று விட்டது தண்டனையில்,
நின்று பார்த்தாள் அதையும்
(அ)நீதி தேவதை..!!
கருப்பு திரையிட்டால்
என்ன தெரியும் அவளுக்கு..??
கண்ணை திறந்து விட்டு-அவளை
திண்ணையில் இருத்துங்கள்...
கருவில் நடப்பதற்கும்
தெருவில் நடப்பதற்கும்
வித்தியாசம் அறிவாள்
(அ)நீதி தேவதை..!!