சாதாரண மனிதனாய் பிறந்ததை தவிர வேறு என்ன பாவம் நீ செய்தாய்..??
எல்லோரை போலவே நீயும் இருக்க வேண்டும் என்பதில்லை..!! பணமென்ற ஒன்றுக்கு, பிணமும் வாய் திறக்கும் போது நீ வெறும் மனிதன் தானே..!! பேருந்தின் ஜன்னல் வழியே சொகுசு கார்களை பார்த்தால், வங்கியின் விரிசல் வழியே பணத்தின் போதையை ரசித்தால், முகம் பார்க்கும் கண்ணாடி முன் பணக்காரனை போல் நடித்தால், நாளிதழ்களில் தினமும் உன்முகம் வருவதாய் எண்ணி படித்தால், உன்னை கிறுக்கன் என உலகம் சொல்லலாம் நீ கிறுக்கனாகவே இரு..!!
நீ எதுவாக ஆகிறாயோ அதுவாக உன்னை நினைப்பதில் எந்த பிழையும் இல்லை..!! சாதிப்பதற்கு உன்னை நீ பக்குவப்படுத்தி கொள்ள அவர்களிடம் பாடம் படிக்கிறாய்.!! இவ்வாறு உன் போக்கை முட்டாள்தனம் என உலகம் சொல்லலாம் நீ முட்டாளாகவே இரு..!!
உலகம் நன்கு அறியும் சில எதிர்பார்ப்புகளும், ஏகப்பட்ட ஏமாற்றமும் மாறி மாறி உன்னை விரட்டலாம்..!! உயிர் போகும் அவமானங்களும், போதை தரும் சின்ன வெற்றிகளும், உன்னை ஓட ஓட துரத்தலாம்..!! பணத்தால் வருவதும் போவதும் ஒன்றென நீ உன்னுள் உணரும் வரை உன் தேடல் தொடரட்டும்.