www.gamblinginsider.ca

16 April 2013

அனாதையான கடவுளும்,சிறு குழந்தையும்...!!!


ஊரே சத்தமின்றி உறங்க 
முற்படும் போது, 
சிறு குழந்தையொன்று கூக்குரலிட்டு 
தேம்பி தேம்பி அழ தொடங்கியது..!! 

கிழிந்த உடை தவிர வேறில்லை, 
என்னவென்று கேட்க நாதியில்லை, 
எவரும் கவனிப்பாரில்லை, 
இவளும் அழுகை அடக்கவில்லை, 
தொண்டைகுழி அகல அகல 
இவளின் அழுகை வான் தொட்டது..!! 
வான் முட்டிய அழுகை 
கடவுளின் காதை எட்டியது..!! 
பொறுத்துப்பார்த்த கடவுள் 
வான் பிளந்து பூமி வந்தார்..!! 
அழுகை வந்த வழி தொடர்ந்து 
அவளிடம் போய் சேர்ந்தார்..!! 

குழந்தையே..!!ஏன் பெரிய அழுகை 
என இவர் கேட்க, 
அவளோ அழுகை நிறுத்தாமல் 
நான் அனாதை என உலகம் சொல்கிறது, 
என் தாய் செய்த தவறுக்கு 
என்னிடம் பதில் கேட்கிறார்கள், 
அவளை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது 
என குழந்தை மொழியில் அடம்பிடிக்க, 
கடவுள் தலை குனிந்து நின்றார்..!! 

அவளை சமாதனம் செய்ய 
தானும் அனாதை என 
கடவுள் சொல்ல, 
கண்ணையும்,மூக்கையும் துடைத்து கொண்டு 
உங்களுக்கு நான் இருக்கிறேன் 
நீங்கள் அனாதை இல்லையென 
குழந்தை அழுகை முடிக்க, 
கடவுள் அழ ஆரம்பித்தார்...!!!


No comments: