www.gamblinginsider.ca

03 June 2013

கடவுளும்,காட்டு பங்களாவும்....!!!!

மனிதர்கள் கொடுக்கும் 
தொல்லை பொறுக்காமல், 
வானுலகம் வாழ வழியன்றி 
துன்பம் மறக்க ஓடி ஒளிந்து 
ஓய்வெடுக்க இடம் தேடிய 
எல்லாமறிந்த கடவுள், 
இறுதியில் பூலோகத்தின் 
காட்டு பங்களாவில் புகுந்தான்..!! 

எங்கோ மறைந்த கடவுளின் 
சோக கதை அறிந்த மனிதர்கள் 
அவனை தேடி தேடி அலைந்தனர் 
கடவுளிடம் மன்னிப்பு கூற அல்ல 
தங்களின் புலம்பல் கேட்க 
ஆளில்லை என்று..!! 

நாட்கள் செல்ல செல்ல 
கடவுள் இன்றி பழகிய மனிதர்கள் 
அவனை மறக்க பழகிவிட்டனர்..!! 
கடவுள் புகழ் பாடிய வாய்களெல்லாம் 
அவன் பொய் என இகழ தொடங்கின..!! 

நெடுநாள் ஓய்வில் மயான 
நிம்மதி அடைந்தான் ஒன்றுமறியா கடவுள்..!! 
காட்டு பங்களாவின் கற்களை எண்ணி 
இன்னும் சில நாள் கழித்த பின் 
மனிதர்களை நினைவு கூர்ந்தான்..!! 

தானின்றி உலகில் எதுவும் இல்லை 
என எண்ணி காட்டு பங்களா விட்டு 
வெளியே வந்த அவனுக்கு 
மிகப்பெரிய அதிர்ச்சி..!! 
வெளியே புதிய புதிய பெயரில்லா கடவுள்கள் 
அவனுக்காக காத்துகொண்டிருந்தனர், 
இறுதியில் கடவுளும் மனிதனாக்கப்பட்டான், 
எல்லாமறிந்த மனிதர்களால்...!!! 

கடவுள் கடவுளாக இருக்கும் வரையே 
மாலைகளும்,மரியாதைகளும்...!! 
பொல்லாத மனிதர்களுக்கு 
கடவுள் மட்டுமென்ன விதிவிலக்கா..??