www.gamblinginsider.ca

19 September 2016

வள்ளியின் தாலி அறுப்பு! - Mano Red


முகம் முழுக்க மஞ்சள் பூசி 
பெரிய குங்குமப்பொட்டு வைத்து
மஞ்சள் குங்கும ஈரம் காய்வதற்குள்
வலிந்து அழித்தனர்.

தலை நிறைய பூ வைத்து
பூ வாசம் மூக்கேறும் முன்
அறுத்து வீசினர்!

கை நிறைய வளையல்களுடன்
கொலுசு மெட்டி அணிவித்து
அடுத்த நொடியே உடைத்து நொறுக்கினர்.

பின்பு கதறி அழச்சொன்னார்கள்
அவளும் கதறி அழுதாள்
அந்த அழுகை துக்கத்தினால் அல்ல
பலபேர் பார்க்க
தாலி அறுத்த அவமானத்தில்
வந்த அழுகை!

கையாலாகாத கணவன் கொடுத்தது
தாலி மட்டுமே!
பூ பொட்டு வளையல் எல்லாம்
பிறந்த வீடு கொடுத்தது.
குழந்தைப் பருவம் முதல்
அவள் சுமந்து வந்த உரிமைகளை
அழிக்கவும் அறுக்கவும் உடைக்கவும்
யார் உரிமை தந்தது?

மனதிற்குள் கொதிப்புடன்
தாலி சுமந்த பாவத்திற்காக
சமாதியின் மீது பூக்களை
தூவிக்கொண்டிருந்தாள் வள்ளி!